2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி
விருது கிடைத்திருக்கும் அ.மாதவனுக்கு வாழ்த்துக்கள். அவரது ”கிருஷ்ணப்பருந்து” ஒரு
பிராயிடிய புதினம். பிராயிடின் sublimation கோட்பாட்டை நாவல் வடிவில் பரிசீலித்திருப்பார்.
சொல்லப்போனால் அந்நாவல் வயதான ஒருவரின் “மோகமுள்”. இளம் வயது பாபுவுக்கு பதில் ஒரு
முதிர்ந்த ஒரு மனிதர். பாபு வயதில் மூத்த பெண் மீது இச்சை கொள்கிறான். இவர் தன்னை விட
வயதில் குறைந்த இளம்பெண்ணை விரும்புகிறார். இரண்டு பேரும் தம் வயதுமீறின காமத்தை அடக்கிக்
கொள்கிறார்கள். பாபுவுக்கு அது இசை மீதான பெருங்காதலாகவும் இவருக்கு அது அன்பும், கருணையுமாய்
சமூகம் ஏற்கத்தக்க வடிவெடுக்கிறது (sublimation). கச்சிதமான வடிவில், மென்மையான அங்கதத்துடன்
கூடிய எண்பதுகளுக்கே உரித்தான பாணியில் சில நல்ல சிறுகதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.
அ.மாதவனை விட மேலான படைப்பாளிகளாக
நான் கருதும் எஸ்.ரா மற்றும் ஜெயமோகனுக்கு “நரைகூடி கிழப்பருவம் எய்தும்” முன் சாகித்ய
அகாதெமி விருது கொடுத்து விட வேண்டும். அதே போல் நாம் போதுமான அளவு அங்கீகாரிக்காத
சாதனையாளர்கள் நம் கவிஞர்கள். சொல்லப்போனால் நம் புனைவெழுத்தாளர்களை விட நம் கவிஞர்கள்
மிகச்சிறந்த படைப்பாளிகள் (இதை என்னிடம் ஒருமுறை அசோகமித்திரனே ஒத்துக் கொண்டார்).
தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், யுவன் (யவனிகா ஸ்ரீராம், என்.டி ராஜ்குமார்,
குட்டிரேவதி என இப்பட்டியல் நீள்கிறது) போன்றோர் இவ்விருதை பெற புனைவெழுத்தாளர்களை
விட நிச்சயம் தகுதியானவர்கள். பொதுவாய் விருது கொடுப்பதில் புனைவுக்கு மட்டும் கொடுக்கப்படும்
மிகை கவனத்தை அ.ராமசாமி சமீபத்தில் கண்டித்து எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது. பல அற்புதமான
கோட்பாட்டு மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், சமூகவியல், மொழியியல் நோக்கிலான அலசல் நூல்களை
எழுதியவர்களையும் எத்தனைக் காலம் இருட்டிலே வைத்திருக்கப் போகிறோம்? ராஜ் கௌதமன், ரவிக்குமார்,
தமிழவன், அ.கா பெருமாள் போன்றவர்களை என்று கௌரவிக்க போகிறோம்? ரவிக்குமார் அளவுக்கு
ஆழமும் செறிவும் கொண்ட உரைநடை கொண்டவர்களை மிக அரிதாகத் தான் பார்க்க முடியும். சென்னைப்
பல்கலைக்கழகத்தில் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் அவர் பங்கேற்ற கருத்தரங்கில் வாசித்த
உரையை சமீபத்தில் வாசிக்கப் பெற்றேன். எவ்வளவு நுணுக்கமாய், துல்லியமாய், கூர்மையாய்
தத்துவ ஆழத்துடன் அவரால் எழுத முடிகிறது என வியந்து கொண்டே இருந்தேன். ஒரு சிறு உரையே
இப்படி என்றால் அவரது கட்டுரைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் அளவுக்கு ஐரோப்பிய
கோட்பாட்டு நூல்களை நுணுக்கமாய் அறிந்து கொண்டவர்கள் தமிழில் மிக மிக குறைவு. சமீபத்தில்
பேஸ்புக்கில் அவர் வரையும் கோட்டோவியங்கள் பார்க்கும் போது இம்மனிதர் எதைத் தொட்டாலும்
மின்னுகிறதே என தோன்றியது. ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் தன் ஆற்றலையெல்லாம் அரசியலில்
திருப்பி விட்டது நிச்சயம் ஒரு இழப்பு தான்.
பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றுக்கும்
சேர்த்து ஒரு விருது என்றில்லாமல் புனைவு, கவிதை, உரைநடை என பிரித்து மூன்று சாகித்ய
அகாதெமி விருதுகள் கொடுத்தால் இந்த சாதனையாளர்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஓரளவுக்கு
கவர் செய்ய முடியும். நடக்கும் என நம்புவோம்!