Skip to main content

”நடிப்பு” பத்திரிகை



நண்பர் (தம்பி) சோழனின் “நடிப்பு” பத்திரிகையின் முதல் இதழ் செறிவாகவும் தீவிரமாகவும் வந்திருக்கிறது. நடிப்பு எனும் ஒற்றைப்புள்ளியை மையமிட்டு நடிப்புக் கலை, முக்கியமான நடிகர்கள், நடிப்பு பற்றின நூல்களில் இருந்து அத்தியாயங்கள், பேட்டிகள், நடிகர்கள் பற்றின நூல் விமர்சனம் என பல விசயங்களை பிசிறின்றி தந்திருக்கிறார். மீள்பிரசுரங்களில் மகேந்திரனின் “நடிப்பு என்பது” எனும் நூலில் இருந்து ”விழிமொழியும்”, சோழனின் ”நீங்களும் நடிக்கலாம்” நூலில் இருந்து “நம்ப வைப்பது தான் நடிப்பும்” முக்கியமாய் படிக்க வேண்டியவை. 


கட்டுரைகளில் நவாசுதின் சித்திக்கி பற்றின ரிஜின் ரோஸின் கட்டுரை என்னை கவர்ந்தது. அவர் தொடர்ந்து எழுதினால் சிறப்பு. பெரும்பாலான கட்டுரைகள் உள்ளார்ந்த அவதானிப்பும் கற்பனையும் நடிப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையசரடாக கொண்டுள்ளன. கோட்பாட்டு கட்டுரைகள் இல்லை. நடிப்பு பற்றின அனுபவ பூர்வமான அவதானிப்பு பதிவுகளுக்கு தான் அதிகம் இடமளிகப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்டதா அல்லது எதேச்சையாய் அமைந்ததா என தெரியவில்லை. கில் ஆலனின் பேட்டியை இன்னும் விரிவாய் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாய், அவர் பிரபுதேவா ஒரு சிறந்த நடிகர் என ஒற்றை வரியில் சொல்லி விட்டு நகர்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என அறிய ஆர்வம் தோன்றியது. கமல் மற்றும் மோகன்லாலை ஒப்பிடும் எனது கட்டுரையும் வெளியாகி உள்ளது.
இவ்வளவு பேரிடம் இருந்து குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வாங்குவது எவ்வளவு சிரமம் என அறிவேன். நூறு பேரிடம் கேட்டால் பத்து பேர் தான் எழுதுவார்கள். அலுப்பில்லாமல் மீண்டும் மீண்டும் தொந்தரவு பண்ணி பொறுமை காத்தால் தான் இவ்வளவு கட்டுரைகளை கேட்டு வாங்க முடியும். இவ்விசயத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் திறமைசாலி. முதலில் பத்து சொற்களில் கட்டுரையை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்புவார். நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அடுத்து எட்டு சொற்களில் கேட்டு அனுப்புவார். அதுவும் பலிக்கவில்லை என்றால் ஐந்து, மூன்று. ரெண்டு என சொற்கள் குறைந்து கொண்டே போகும். ஆனால் கேட்பதை மட்டும் நிறுத்த மாட்டார். ஒருமுறை எனக்கு கேள்விக்குறியை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பினார். அதைப் பார்க்க எனக்கு ஒரு அருவா போல் தோன்றியது. பயந்து விட்டேன். இருப்பதிலேயே எளிது தொடர்ச்சியாக எழுதும் பிரபலங்களிடம் இருந்து கிடைப்பதை வாங்கி தொகுத்து வெளியிடுவது தான். ஆனால் அது பத்தோடு பதினொன்றாய் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து இப்படி ஒரு இதழை சோழன் தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது.
 இது போல் இலக்கியத்திலும் யாராவது thematic பத்திரிகை வெளியிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும். பேட்டிக்கென்றே ”நேர்காணல்” என்றொரு பத்திரிகையை நண்பர் பௌத்த ஐயனார் கொண்டு வருகிறார். முன்பு கி.ரா கடிதங்களுக்காய் ஒரு கையெழுத்து பத்திரிகை நடத்தினார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றைய வாட்ஸ் ஆப் குரூப், பழைய செயின் மெயில் போன்றவற்றின் தொல்வடிவம் அது. அதற்கு முன்பு ”எழுத்து” பத்திரிகை சிறுகதைகளுக்காய் தனித்து இயங்கியது. இப்போதும் கார்களுக்கு என்று தனியாய் பத்திரிகைகள் வருகின்றன. ஆங்கிலத்தில் மது வகைகளைப் பற்றி பத்திரிகை வருகிறது. நாமும் இது போல் செய்ய முடியும். பொதுவாக விமர்சனம் என்றால் யாரையாவது வரிக்கு வரி பாராட்டிக் கொண்டே போவது என தமிழில் ஒரு மரபு உள்ளது. ஆனால் முழுக்க முழுக்க புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எதிர்மறையாய் விமர்சிப்பதற்கு ஒரு polemical பத்திரிகையை யாராவது நடத்தலாம். எழுத்துக்கலை பற்றி நடத்தலாம். யாராவது இறந்தால் உடனே ஒவ்வொரு பத்திரிகையிலும் பத்து பேராவது அவரைப் பற்றி அஞ்சலிக் குறிப்பு எழுதுவார்கள். ஏன் அஞ்சலிக் கட்டுரைகளுக்கு என்றே தனியாய் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...