Skip to main content

தால்மியாவின் மரணமும் அரசியல் மாற்றங்களும்


(இக்கட்டுரை அக்டோபர் மாத கல்கியில் வெளியானது. ஷஷாங்க் மனோகர் தலைவரானதும் ஸ்ரீனிவாசன் ஐ.சி.சி தலைவர் பதவியில் இருந்து விலகினதும் இக்கட்டுரை எழுதப்பட்ட பின் நிகழ்ந்தன)
 
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் தால்மியாவின் மரணம் ஒரு பெரிய அரசியல் தலைவரின் மரணத்தை போல் குழப்பங்களுக்கும் புது மாற்றங்களுக்கும் வழிவகுத்துள்ளது. தலைவராக அவர் பதவி ஏற்ற காலத்தில் கூட அவர் உடல்நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. ஒருவேளை அவர் பதவியில் இருக்கையில் மரணிக்க கூடும் என வாரிய நிர்வாகிகள் அச்சம் தெரிவித்தனர். ஆனால் எல்லா அரசியல் தலைவர்களையும் போல அவரும் தன் வயது மற்றும் ஆரோக்கியத்தின் நிமித்தம் பதவியை விட்டுத் தர தயாராக இருக்கவில்லை. தால்மியாவின் மரணம் கங்குலி மற்றும் மேற்குவங்க வீரர்களுக்கு ஒரு பின்னடைவாகவும் ஸ்ரீனிவாசனுக்கு தனது இழந்த அதிகாரத்தை மீட்கவுமான வாசல்களை திறந்து விட்டன.
ஸ்ரீனிவாசனுக்கு எதிராய் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு உச்சநீதிமன்றம் அவரை கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கிய சந்தர்பத்தில் அதுவரை அவருக்கு நண்பர்களாய் இருந்த நிர்வாகிகள் பலரும் அவரை விடுத்து எதிரணிக்கு சென்றனர். அடுத்து வந்த தேர்தலில் தாகுர் செயலாளராகவும் தால்மியா தலைவராகவும் தேர்வாயினர். இந்த கூட்டணி ஸ்ரீனிவாசனுக்கு கடும் நெருக்கடி அளித்தது. ஐபிஎல்லில் இருந்து சென்னை அணி தடை செய்யப்பட்ட போது, சென்னையை கலைத்து அதனிடத்தில் புது அணியை உருவாக்கலாமா அல்லது அதே அணியை வேறு பெயரில் புது நிர்வாகிகளையோ (ஸ்ரீனிவாசனின் பினாமிகளையோ) கொண்டு தொடர்ந்து நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டது. சென்னையுடன் ராஜஸ்தானும் இருவருடங்கள் மட்டும் தடைசெய்யப்பட்டுள்ளதால் புது அணிகளை ஏலமெடுத்து உருவாக்குவது இருவருடங்களுக்கு பிறகு ஐபிஎல்லின் அணிகளின் தொகையை அதிகமாக்கி விடும் என ஸ்ரீனிவாசனின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள். தோனி தலைமையிலான அணி ஐபிஎல்லின் ஆக பிரபலமான அணி என்பதால் அதை சிதறடிப்பது ஐபிஎல்லின் புகழை மங்க செய்யும் என்றும் கூறப்பட்டது. ஆனால் வாரிய தலைமையான தாகுரும், தால்மியாவும் ஸ்ரீனிவாசனின் எதிர்முகாம் என்பதால் இந்த சாக்குபோக்குகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதே போல் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தையும் ஸ்ரீனிவாசன் பிரதிநுத்துவப்படுத்த கூடாது என்று வாரியம் வழக்கு தொடுத்தது. அது போல் ஸ்ரீனிவாசன் இனியும் சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராய் பதவி வகிக்க கூடாது என்றும் வாரியம் கருதி அதற்காய் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கிறது. இன்னும் ஒரு வருடம் இதே கூட்டணி நீடித்தால் ஸ்ரீனிவாசனை முழுக்க வெளியேற்றி விடுவார்கள் என நாம் எதிர்பார்த்தோம். அப்போது தான் கதையில் ஒரு திருப்பம். தால்மியா காலமானார்.
தால்மியாவுக்கு கங்குலி மிகவும் நெருக்கமானவர். இருவரும் ஒரே மாநிலத்துக்காரர்கள். தால்மியா இந்திய வாரியத்தின் தலைவராக இருந்த காலத்தில் தான் திராவிடை விடுத்து கங்குலியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆக்கினார்கள். தால்மியா இம்முறை ஒரு சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்தார். அதில் லஷ்மண், சச்சின், கங்குலி இடம்பெற்றனர். தால்மியாவின் வலதுகையான கங்குலி வாரியத்துக்குள் அதிகாரம் மிக்கவராய் வளர்ந்து வந்தார். தால்மியாவின் மரணம் ஒரு கிரிக்கெட் நிர்வாகியாக கங்குலியின் வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு தான். அது மட்டுமல்ல தால்மியா தொடர்ந்திருந்தால் வங்க அணி வீரர்களுக்கு தேசிய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கும். மேற்குவங்க வீரர் மனோஜ் திவாரி இதற்கு நல்ல உதாரணம். கடந்த சில ரஞ்சி கோப்பை ஆட்டங்களிலோ ஐபிஎல்களிலோ திவாரி அதிகமாய் ஆடவோ ஓட்டங்கள் எடுக்கவோ இல்லை. ஆனாலும் தால்மியா தலைவர் ஆனதும் திவாரி எதிர்பாராத விதமாய் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்கு தேர்வானார். அந்த பயணத்தொடரில் அவர் மோசமாய் சொதப்பினார். திவாரியை போன்றே சாஹா மற்றும் பிற மேற்குவங்க அணி வீரர்களுக்கும் குறுக்குவழியில் இந்திய அணிக்கு தேர்வாகி தொடர்ந்து ஆடும் கனவு இருந்திடுக்கும். இனி அக்கனவுகள் கனவுகளாய் மட்டுமே இருக்கும். அது மட்டுமல்ல தால்மியா தொடர்ந்திருந்தால் தோனியின் ஓய்வுக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டிருக்கவும் கூடும்.
இந்த சந்தர்பத்தில் ஸ்ரீனிவாசன் பரபரப்பாய் காய்களை நகர்த்தினார். அவருக்கு இப்போதும் வாரியத்தில் பாதிக்கு மேல் ஆதரவாளர்கள் உண்டு. பா.ஜ.கவிலும் ஆதரவு உண்டு. வாரிய விதிமுறைப்படி இம்முறை கிழக்கு மாநிலங்களில் இருந்து ஒரு பிரதிநிதி மட்டுமே தலைவராக முடியும் என்பதால் ஜார்கண்டை சேர்ந்த அமிதாப் சௌத்ரி எனும் ஸ்ரீனிவாசன் ஆதரவாளர் தலைவராகக் கூடும் என்றார்கள். அப்போது முன்னாள் வாரிய தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமான சரத் பவார் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இந்நேரம் பவாரை ஸ்ரீனிவாசன் சென்று சந்தித்து அரசியல் பேரம் பேசியதாய் கூறப்பட்டது. ஸ்ரீனிவாசனும் பவாரும் பழைய நணபர்கள். ஆனால் சமீபமாய் விரோதியானார்கள். ஊழல் விவகாரத்தில் ஸ்ரீனிவாசனை கடுமையாய் எதிர்த்தவராய் பவார் இருந்தார். ஆனால் இப்போது இருவரும் கைகுலுக்கி மீண்டும் நண்பர்கள் ஆயினர். பவார் தலைவரானால் ஐசிசி தலைவராக ஸ்ரீனிவாசனின் பதவிக்கு ஆபத்து இருக்காது; ஐபிஎல்லில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முடிவுக்கு வரக் கூடும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் கதையில் மீண்டும் ஒரு திருப்பம். திரைமறைவில் மற்றொருவரும் காய்கள் நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் வாரிய செயலாளரான தாகுர்.
தாகுர் பா.ஜ.கவின் அருண் ஜேட்லியுடன் சேர்ந்து ஒரு எதிர்-ஸ்ரீனிவாசன் கூட்டணிக்காய் முயன்று வந்தார். அவர்கள் நாக்பூரை சேர்ந்த வழக்கறிஞரும் முன்னாள் வாரிய நிர்வாகியுமான ஷஷாங் மனோகரை அணுகினர். மனோகர் ஸ்ரீனிவாசனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். அவருக்கு பா.ஜ.வில் ஆதரவு அதிகம். ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு+ ஆளுங்கட்சி அதரவு என இரு பிளஸ்கள் ஷஷாங்க் மனோகரின் வடிவில் சேர பவார் மைனஸ் ஆனார். அவர் போட்டியில் இருந்து விலகினார்.
ஷஷாங்க் மனோகர் தான் அடுத்த வாரிய தலைவர் என்பது கிட்டத்தட்ட நிச்சயம். ஆனால் அரசியலில் தான் ஒன்றும் நிச்சயம் இல்லையே. எதுவும் நடக்கலாம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...