Skip to main content

மாட்டுக்கறி விருந்து போராட்டங்களின் பிரச்சனை என்ன?

என்னுடைய சமீபத்திய பகடியில் மாட்டுக்கறி உண்பதை எதிர்ப்பு வடிவமாய் சிக்கலை குறிப்பிட்டிருந்தேன். மாட்டுக்கறி உண்பவர்களை நான் கொச்சைப்படுத்துகிறேனா என சிலர் கேட்டார்கள். அவர்களுக்கானது இந்த விளக்கம்.
தொன்ம ஆய்வாளரும் எழுத்தாளருமான தேவ்தத் பட்நாயிக் இது குறித்து இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மாட்டுக்கறியை தடை செய்ய வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் கோரும் போது அதன் உள்ளர்த்தம் என்ன? இஸ்லாமியர் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்காய் மாட்டுக்கறி உண்கிறார்கள் அல்லது அவர்கள் உண்பது உணர்வுகளை புண்படுத்துகிறது என்பது தான். முற்போக்காளர்கள் இத்தடையையும், தடையை ஒட்டின ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதற்காய் வெளிப்படையாய் மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்களை நடத்த துவங்கினார்கள். எழுத்தாளர் ஷோபா டே “நான் இப்போது மாட்டுக்கறி உண்கிறேன். முடியுமென்றால் என்னை இப்போது வந்து கொல்லுங்கள்” என டிவிட்டரில் எழுதினார். இதைத் தொடர்ந்து வேறு சில பிரபலங்களும் இவ்வடிவத்தை முன்னெடுத்தனர். சமூக வலைதளங்களில் பலரும் தாம் ஓட்டலிலும் வீட்டிலும் மாட்டுக்கறி உண்பதாய் படமெடுத்து வெளியிட்டனர். விரைவில் சென்னையில் பல அறிவுஜீவிகள், போராளிகள் பங்கெடுக்கும் மாட்டுக்கறி விருந்து கருத்தரங்கு ஒன்று நிகழப் போகிறது. மதியம் மாட்டுக்கறி விருந்து, காலை மற்றும் மாலையில் இந்துத்துவாவுக்கு எதிரான விவாதம். இது போன்ற போராட்டங்களில் நாம் மாட்டுக்கறியை உண்பதென்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மகிழ்ச்சியையே அளிக்கும் என்பது பட்நாயிக்கின் வாதம். ஏனென்றால் இந்துக்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்துவதற்காய் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் மாட்டுக்கறியை உண்கிறார்கள் என அவர்கள் வாதத்தை வளர்ப்பார்கள். அவர்களின் வாதத்திற்கு இப்படியான போராட்டங்கள் வலு சேர்க்கவே செய்யும்.
மாட்டுக்கறி உண்பது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் என்பது ஒரு இந்துத்துவா discouse என்றால் நாம் அதை எதிக்கிறோம் எனும் பெயரில் உண்ணும் போது அதே discouseஇல் பங்கு பெற்று அதை செல்லத்தக்கதாக்குகிறோம்.
உணர்ச்சி பெருக்கில் யோசிக்கும் போது மாட்டுக்கறியை உண்பதாய் பிரகடனம் செய்வது ஒரு துணிச்சலான காரியமாய் தோன்றும். ஆனால் அது எதிர்தரப்புக்கு நியாயம் சேர்ப்பதாயே போய் முடியும்.
சரியான வழிமுறை என்ன? இந்துத்துவா அமைப்பினரின் “பசுமாடு புனிதம்” எனும் பரப்புரையின் அபத்தத்தை அம்பலப்படுத்துவதன் தான் சரியான வழிமுறை. நான் சமீபத்தில் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை இதை சரியாக செய்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் தொடர்ச்சியாக இந்த இந்துத்துவா அரசியல் “ஒரு போலியான கட்டமைப்பு” என நிறுவி வருகிறார். மேற்சொன்ன கருத்தரங்கும் மிக முக்கியமான எதிர்ப்பு வடிவமாய் இருக்கும். ஆனால் அங்கும் நாம் ஷோபா டே போல் “வாங்கடா நான் மாட்டுக்கறி தின்கிறதை தடுங்கடா” என முழங்கி நம் கத்தியால் நம் கையையே அறுத்துக் கொள்ள கூடாது. நிதானமாய் யோசித்தால் என் வாதம் உங்களுக்கு புரியும்.
மற்றொரு உதாரணம் தருகிறேன். ராமதாஸ் “காதல் நாடகம்” என ஒரு சர்ச்சையை கிளப்பினார். இதை ஒட்டி தன் கட்சியை பயன்படுத்தி இளவரசனை காவு கொடுத்தார். திட்டமிட்டு தலித் குடியிருப்புகளை தாக்க வழிவகுத்தார். தலித்துகள் திட்டமிட்டு மேல் சாதி பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பது அவரது பரப்புரை. அப்போது “ஆமாம் அப்படித் தான் செய்வோம்” என நாம் பேசியிருந்தால் அது ராமதாஸின் வாதத்தை செல்லத்தக்கதாக்கியிருக்கும். ஆனால் நம் மீடியாவும் முற்போக்காளர்களும் இதை சரியாக கையாண்டார்கள். ஆனால் இந்துத்துவா பசுவதை தடை என்பது ராமதாஸின் பரப்புரை போல் வெளிப்படையானது அல்ல. அது நுணுக்கமானது. நாம் மிக எளிதாய் அந்த பொறியில் போய் மாட்டிக் கொள்கிறோம்.
கர்த்தர் “ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டு” என சொன்னது தியாகத்திற்காகவோ அன்புக்காகவோ அல்ல. திரும்ப அடித்தால் நாம் எதிரியின் வன்முறை discourseஐ ஏற்று நியாயப்படுத்தி விடுவோம் என்பதால் தான். நான் இதை ஒரு முக்கியமான அரசியல் அறிவுரையாகத் தான் பார்க்கிறேன். ஆன்மீக கூற்றாக அல்ல.
“மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு வீட்டு செல்ல நாய் ஊளையிட்டால் அரசாங்கம் நடுங்காது” என நான் எழுதியது மிகையாக, புண்படுத்தும் நோக்கம் கொண்டதாய் தோன்றலாம். ஆனால் அதன் அடிப்படை கருத்து மேற்சொன்ன விளக்கம் தான். உடனே போராளிகளை “நாய்” என்று கூறி விட்டாய் என நீங்கள் கொந்தளித்தால் உங்களை நான் காப்பாற்ற முடியாது. எல்லாவற்றையும் நேரடியான பொருளில் தான் எடுத்துக் கொள்வேன் என அடம் பிடித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...