Skip to main content

அற்பங்களின் உலகம்



சின்ன வயதில் இருந்து நான் நடக்கும் போது அடிக்கடி விழுந்து கொண்டிருப்பேன். வீட்டுக்குள் விழுந்து காயம் ஏற்படுவதை தவிர்க்க நான் வீட்டுக்குள் சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கினேன். வெளியில் நடக்கையில் என் காலில் அணிந்திருக்கும் காலிப்பரின் லாக் சரியாக பொருந்தாமல் விழுந்து விடுவேன். இதில் ஒரு விசயம் என்னவென்றால் விழும் போது அந்த அரைநொடி எனக்கு இரண்டு மூன்று நிமிடங்களாய் ஸ்லோமோஷனில் போகும். அப்போது நான் “விழுந்து காலிப்பர் ஒடியக் கூடாதே” என மனதுக்குள் கவலைப்படுவேன். கவலைப்பட்டு முடிக்குமுன் கீழே கிடப்பேன். சரியாய் கீழே விழுந்து தரையில் தொடுகிற தருணம் என் நினைவில் இருக்காது.

 இது போன்ற நேரங்களில் எனக்கு வருத்தமோ பயமோ அவமானமோ ஏற்படுவதில்லை. சீவும் போது சீப்பில் நான்கு தலைமயிர்கள் கொத்தாய் வருவதை பார்ப்பது போல் ஒரு உணர்வு. இதுவரை விழுந்து ஒருமுறை கூட எனக்கு உடம்பில் அடிபட்டதும் இல்லை. விழுந்து விழுந்து அப்படி பழகி விட்டது. ஆனால் பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள். அவர்கள் ரொம்ப கவலைப்படுவார்கள். முன்பு ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் என் வண்டியில் ஏறும் தவறி விழுந்து விட்டேன். மாலை ஏழரை இருக்கும். இருட்டான தனியான பகுதி. ஒருவர் அவ்வழியாய் வந்தார். அவரை அழைத்து என்னை தூக்கி எழுப்பி விடுமாறு கேட்டேன். அவர் என்னை ஏதோ குடித்து விட்டு கிடக்கிறவர் என நினைத்தார். எதற்கு வம்பு என என் பக்கத்தில் வரவே தயங்கினார். நான் அவரிடம் நான் போதையில் எல்லாம் விழவில்லை என விளக்கினேன். பிறகு என் வண்டியை பார்த்ததும் ஊனமுற்றவர் என நம்பிக்கை ஏற்பட்டு உதவி செய்தார். அந்த பகுதி வழியாக இப்போது போகும் போதெல்லாம் எனக்கு இதை நினைத்து சிரிப்பு வரும்.
இன்று ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது காலிப்பர் லாக் விழாமல் நான் விழுந்து விட்டேன். விழுந்த தாக்கத்தில் காலிப்பரின் நான்கைந்து ஆணிகள் கழன்று தெறித்து விட்டன. அதை குத்துமதிப்பாய் பொருத்தி நடந்து வீட்டுக்கு வந்து விட்டேன். நாளை மறுநாள் மதுரையில் சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கில் பேசுகிறேன். என்னுடன் நண்பர் லஷ்மி சரவணகுமார் மற்றும் வீரபாண்டியன் (பருக்கை நாவல்) ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மாலை ரயிலில் புறப்பட வேண்டும். நாளைக்குள் காலிப்பரை ரிப்பேர் பண்ண முடியாவிட்டால் பயணத்தை ரத்து பண்ண வேண்டியது தான்.
 நானெல்லாம் நாய்க்கு மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு மீன் வாங்கி போடுவது பற்றியோ பத்தாயிரம் ரூபாய்க்கு ரெமி மார்டின் எப்படி குடிப்பது என்றோ கவலைப்படுவதில்லை. என் பிரச்சனைகள் சாதாரணமானவை. அற்பமானவை. செருப்பு வார் அறுத்தால் அதை ஒரு தெருவோரக் கடையில் நின்று பொறுமையாய் தைத்து வாங்கி போகும் இந்த நாட்டின் லட்சக்கணக்கான பேர்களைப் போன்றவன் நான். சுதந்திரம் சமத்துவம் போன்ற உயர்ந்த லட்சியங்களை பற்றி யோசிக்கவெல்லாம் நேரம் இருப்பதில்லை. நல்ல சாப்பாடு, வலியில்லாத உடல், கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் பெரிய திருப்தி. வாழ்க்கை என்றால் விலையுயர்ந்த அனைத்து இன்பங்களையும் அனுபவித்து கொண்டாட வேண்டும், அதிகாரத்துக்கு எதிராய் கலகம் செய்ய வேண்டும் என சொல்பவர்களை பார்த்தால் எனக்கு அந்நியமாய் தோன்றும். என் உலகம் சின்ன சின்ன விசயங்களால் ஆனது. இதை ஒரு நண்பரிடம் சொன்னால் “ஏன் கம்யூனிஸ்டுங்க மாதிரி பேசுறீங்க?” என்கிறார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...