Skip to main content

கமல் என்ன உங்க பக்கத்து வீட்டுக்காரரா?




பெ.கருணாகரனின் “காகிதப் படகில் சாகசப் பயணம்” கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றின் தலைப்பே மேலே உள்ளது. கருணாகரன் குமுதத்தில் வேலை பார்க்கும் போது கமலை பேட்டி கண்டு வெளியிடுகிறார். அதற்காய் கமலை அணுகுவது ஆரம்பத்தில் சிரமமாய் இருக்கிறது. குமுதத்தின் டைரக்டர் வரதராசன் அவரிடம் கமலின் தனிபட்ட எண்ணை பெற்றுத் தந்தால் தான் பேசி பேட்டி வாங்கித் தருவதாய் கூறுகிறார். கருணாகரன் அவ்வாறே செய்து பேட்டியை வாங்குகிறார். அதன் பிறகு அவர் அதே எண்ணில் கமலை அழைத்து பேட்டி எப்படி வந்துள்ளது என கேட்கிறார். கமலும் நன்றாகவே பேசுகிறார். ஆனால் சில நிமிடங்களில் கமலின் பி.ஆர்.ஓ போனில் கருணாகரனை அழைத்து “நீ என்ன கமலுக்கு பக்கத்து வீட்டுக்காரரா? உனக்கு தோன்றினால் அவரை அழைத்து பேசுவதா? இனிமேல் என் மூலமாய் தான் கமலை தொடர்பு கொள்ள வேண்டும்” என கடுமையாய் திட்டுகிறார். அத்துடன் அந்த எண் ரத்து மாற்றப்படுகிறது. எனக்கு இது படித்ததும் கமல் ஏன் அவ்வாறு செய்திருப்பார் என கேள்வி எழுந்தது.
ஒரு நிருபர் சும்மா அவரை தொந்தரவு செய்வதற்காய் போன் செய்யப் போவதில்லை. தமிழின் முக்கியமான இயக்குநர்கள் சிலரை யார் வேண்டுமானாலும் நேரில் சந்திக்கலாம். பா.ரஞ்சித்தை சந்தித்த போது அவர் மிக மிக எளிமையான மனிதராய் இருப்பதைக் கண்டேன். நாசரும் அவ்வாறான மனிதர் தான். நலன் குமாரசாமி “தலைவரே” என்று அழைத்து தான் உரையாடுவார். ஸ்டாலின் போன்ற பெரும் தலைவர்கள் நேரில் மிக எளிமையாய் இருக்கிறார்கள். தமிழில் உள்ள பல பெரும் கலைஞர்களும் அவ்வாறே. நீங்கள் நள்ளிரவில் கூட சுந்தர ராமசாமியை அவர் வீட்டில் போய் பார்க்க முடிந்தது. சுஜாதாவை நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கண்டு பேசியிருக்கிறேன். கமலுக்கு இணையான அல்லது அவரை விட மேலான எழுத்து கலைஞர்களான ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் போன்றோர் யாருடனும் சகஜமாய் உரையாடக் கூடியவர்கள். சாரு சின்ன பையன்களின் தோளில் கையிட்டு ஜாலியாய் பேசக் கூடியவர். இங்கு தம்மை பொதுமக்களில் இருந்து தனித்து காட்ட விரும்புகிறவர்கள் கதாநாயகர்கள் மட்டும் தான். நடிகர்களில் பெரும்பாலானோரை மக்கள் வெளியே பார்த்தால் மொய்க்க போவதில்லை. ரஜினி போன்று ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. பார்த்திபன் தினமும் கடற்கரையில் நடைபழக போவதை பார்த்திருக்கிறேன். ஒருவர் கூட அவரிடம் சென்று பேசி பார்த்ததில்லை. ஒருவேளை ரஜினி கூட தினமும் அங்கு நடைபழகினால் மக்கள் அவரை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள். ஆனால் ஒருவர் நட்சத்திரமாவதே தன்னை கவனமாய் மக்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதன் மூலம் தானே. தன்னை எளிதில் ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதும், ஒரு சாதாரண நிருபர் தன்னிடம் நேரடியாய் பேச முடியும் என்பதும் கமலின் அகந்தையை சீண்டியிருக்க வேண்டும். அதனாலே அவர் தன் பி.ஆர்.ஓவிடம் சொல்லி கண்டிக்கிறார். எண்ணை மாற்றுகிறார். குமுதத்தின் டைரக்டர் அந்த எண்ணில் பேசுவது சிக்கலில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் ஒரு நிருபர் பேசும் போது கமலுக்கு அது கௌரவக் குறைவாக படுகிறது.
கமலை கூட முழுக்க குற்றம் சொல்ல முடியாது தான். தொடர்ந்து ரசிகர்களும் மீடியாவும் அவரை கொண்டாடி கொண்டாடி இரண்டு கொம்புகளை மாட்டி விட்டார்கள். இனி கமலே நினைத்தாலும் கொம்பை அறுக்க முடியாது. ஏனென்றால் கொம்பு இல்லாமல் தன் முகத்தை அவரால் இனி கற்பனையே பண்ண முடியாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...