Skip to main content

ஜெயலலிதாவின் உடல்நிலை


ஜெயலலிதாவுக்கு கல்லீரல் கோளாறு, சிகிச்சைக்காய் வெளிநாடு செல்கிறார் என படித்தேன். கடுமையான முட்டி வலி ஏற்படுகிறது என போட்டிருந்தார்கள். சற்று மோசமான நிலையில் தான் அத்தகைய அறிகுறி தோன்றும் என நினைக்கிறேன். ஆனால் இதனால் உடனடி அரசியல் மாற்றங்கள் வரும் என நான் நினைக்கவில்லை. இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. மோசமான உடல் நிலை என்றாலும் கூட செலவு செய்து மீண்டு வந்து விடுவார்கள். 2006இல் நான் மாலைமலரில் வேலை செய்த போது ஒரு மூத்த சப் எடிட்டர் கடுமையான திமுக எதிர்ப்பாளர். அப்போது கலைஞரின் உடல் நிலை மோசமாய் இருந்தது. தேர்தல் நெருங்கி வந்தது. அதற்கு முன்பா பின்பா கலைஞர் காலமெய்துவார் என தினமும் அலுவலகத்தில் விவாதம் நடக்கும். திமுக ஆட்சியில் அப்படி நடந்தால் தடபுடலாய் அவருக்கு கடற்கரையில் சிலையெல்லாம் வைப்பார்கள் என்பதால் அதற்கு முன்னரே சம்பவம் நடக்க வேண்டும் என அவர் ஆவெசமாய் சொல்லுவார். ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. அதிகாரபூர்வமாய் தாத்தாவாகி விட்ட தன் மகனையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர். மேடையில் நா குழறினாலும் நக்கலும் கூர்மையும் போகவில்லை. இன்னும் நான்கு வருடங்கள் எப்படியாவது ஆட்சி செய்து விடுவார் என நினைக்கிறேன். நம் உடம்புக்குள் ஒரு கடிகாரம் ஓடுகிறது. அதை யாராலும் பார்க்க முடியாது. அதனால் ஒருவரது ஆயுள் பற்றி ஊகிப்பது பல சமயம் நம்மையே முட்டாளாக்கக் கூடியது.



இந்த ஆட்சியில் ஜெயலலிதா பெரும்பாலும் ஆட்சி செய்யவில்லை. ஓய்வு, சிகிச்சை, வழக்கு, சிறை என பரபரப்பாய் இருந்தார். ஆனாலும் தமிழகம் ஆட்டொமெட்டிக் எந்திரம் போல் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. முக்கியமான திட்டங்கள் பற்றின முடிவுகள் தள்ளிப் போடப்படுகின்றன; நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அன்றாட வாழ்வில் எந்த சலனமும் இல்லை. முன்பு எம்.ஜி.ஆர் இரண்டு வருடங்கள் நோய் முற்றி செயலற்று இருந்த நிலையிலும் முதலமைச்சராய் இருந்தார் எனப் படித்தேன். இதையெல்லாம் நாம் தான் அனுமதிக்கிறோம். இந்திய வாக்காளர்கள் செண்டிமெண்ட் பார்க்கிறவர்கள். முதுமையை மதிக்கிறவர்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான துடிப்பான நிர்வாகியை விட முதிர்ச்சியான நிதானமான ஆட்சியாளர் வேண்டும். அதனால் முழுமையாக குணமடையாத நிலையிலும் மீண்டும் அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே தேர்ந்தெடுக்கப்படலாம். அதற்கு அடுத்தாற் போல் கலைஞர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே ஆட்சி செய்யலாம். இதெல்லாம் நம்மூருக்கு சகஜம் தான்ஜெயலலிதா தன் உடல்நிலையை ரகசியமாய் வைத்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல, அவர் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என கலைஞர் சமீபமாய் மேடையில் பேசினது கூட வெறும் நக்கல் தான், வம்புக்கு இழுக்கும் அவரது விளையாட்டு தான். உடல்நிலைக்கும் தமிழக முதலமைச்சராய் இருப்பதற்கும் பெரிய சம்மந்தம் இல்லை என அவர் நன்றாய் அறிவார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...