Skip to main content

இன்றைய ஞாயிறு

the last day by mikeshkaos

காலை எழுந்ததும்
இது ஒரு ஞாயிற்றுக்கிழமை
என நம்பத் தொடங்குகிறேன்
சோம்பல் முறித்து
கண்ணோர பீளையை துடைத்து
தடுமாறியபடி நடந்து
கழிப்பறை போகிறேன்
மூத்திரம் போகையில்
துண்டுத் துண்டுக் கனவுகள்
முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் ஊற்றியது போல்
ஒவ்வொன்றாய்…


எங்கோ வானொலியில் யாரோ உற்சாகமாய் தடதடத்து பேச
பறவைகள் கத்துகின்றன
சாலையில் ஒரே ஒரு ஆட்டோ மெதுவாய் நகர்ந்து போகிறது
சில்லென எதுவோ விழுந்து உடைகிறது
ஜன்னல் துண்டுக் காட்சியில்
பக்கத்து வீட்டு வரவேற்பறையில்
 கூட்டமாய் தரையில் இருந்து
சாப்பிட்டபடி
எனக்குத் தெரியாத டிவி ஒன்றைப் பார்க்க்கிறார்க்ள்
நிச்சயமாய் இது ஞாயிற்றுக் கிழமை தான்

உடம்பின் இந்த முறுக்கிக் கொள்ளும் சோம்பல்
நரம்புகளில் அதிரும் மென்வலி
இமைகளின் கனம்
ஜவ்வு போல் நீளும் நேரம்

டிவியை இயக்க
சிறப்பு நிகழ்ச்சிகள் ஒடுகின்றன
மனைவி வந்து
நேரம் ஆகி விட்டதென்கிறாள்
கடிகாரத்தைக் காட்டுகிறாள்
அவள் குளித்து
கொண்டை கட்டி
முகத்தில் களிம்பு பூசியிருக்கிறாள்
குளிர்ப்பெட்டியில் இருந்து வெளிவந்த முட்டை போல
பளிச்சென்று இருக்கிறாள்
அலுவலக ஆடை அணிந்து கொண்டு
அடிக்கடி தன் நுண்பேசியை பார்க்கிறாள்.
அவள் ஞாயிற்றுக் கிழமையில் இல்லை.
அது புதன் கிழமை என்கிறாள்.

சோபாவில் கிடக்கும் ஒரு வாரத்திற்கான நாளிதழ்க்ளை
கொத்தாய் கொண்டு வருகிறாள்
அவற்றில் போன ஞாயிறில் ஆரம்பித்து
புதன் வரை இருக்கிறது
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, கொடும் கொலைக்ள்
என ஆரம்பித்து
மென்மையான ஊழல்கள், அதிராத குற்றச்சாட்டுகள்
என புதன் வரும் போது
ஒரு ஆறுதலான நிலைமை தெரிகிறது
ஆனால் வியாழன், வெள்ளி, சனி எங்கே?
ஞாயிறு பத்திரிகை என்றும் தாமதம் தானே
அதுவே ஒரு ஆதாரம் அல்லவா?

அவள் புதன் பத்திரிகையின் தேதியை
நுண்பேசியை
நாட்காட்டியை
டிவியின் தகவல்பெட்டியின் விபரங்களைக்
காட்டுகிறாள்
ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டைக் கடந்து போகும்
தகர டிரம்மில் பிரம்மாண்ட எலிகள் ஓடுவதான பத்து ரயில்களின் சத்தமும் உடலைத் துளைத்து ஓடும் விசில்களும்
கேட்கும் போது உரையாடலை நிறுத்தி கூர்ந்து கவனிக்கிறோம்
ஓய்வு நாளில் இத்தனை ரயில்கள் ஓடாது தெரியுமில்லையா?
இன்றைய வேலையை காலைக்குள் முடித்து விடும்படி
என் மேலாளர் அனுப்பின குறுஞ்செய்தியைக் காட்டுகிறாள்.
நான் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காட்ட
அது தினமும் வருவது தானே என்கிறாள்.

எனக்கு ஒரே ஆதாரம் தான்
எல்லா வேலை நாளும்
ஞாயிறு என்று பொறுமையாய் தூங்கி விட்டு
துள்ளி எழுந்து
அவசரமாய் கிளம்புவேன்
இன்று மட்டுமே
அவசரமாய் எழுந்து

பொறுமையாய் யோசிக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...