Skip to main content

நன்மை மீதான கசப்பு


எதிர்பாராத நேரத்தில் அவசியமாய் வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும் எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை.

நான் பொருளாதார ரீதியாய் மிகவும் நொடிந்து போயிருந்தேன். முக்கியமான வேலைகளை விட்டு விட்டு அன்றாட செலவுக்கான பணத்துக்காய் ஒரு பிடிக்காத வேலைக்கு போக வேண்டியிருப்பதாய் ஒருவரிடம் தெரிவித்தேன். ஒரு தகவலாய் தான் சொன்னேன். அவரை நான் அடுத்த முறை சந்தித்த போது ஒரு உறையில் சிறிது பணம் வைத்து தந்தார். நான் எதற்கு என்றேன். வாங்க தயங்கினேன். அவர் வற்புறுத்தி வாங்க வைத்தார். மிக மிக அரிதாய் தான் மனிதர்கள் இப்படி நாம் கேட்காமலே உணர்ந்து உதவுவார்கள். அப்பணத்துக்கு அவசர செலவு இருந்தது. சற்று நிம்மதியாய் இருந்தது. ஆனால் பிறகு கசப்பும் ஏற்பட்டது. அவர் தந்திருக்க வேண்டாம் எனத் தோன்றியது. மானப்பிரச்சனை, சங்கடம் ஒன்றும் இல்லை. அவர் என்னை உதாசீனித்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்நகரத்தில் பலரும் அது போல் நம்மை தம் தேவைக்கேற்றபடி பேசி அனுப்பி விடுகிறார்கள். அது போல் இவரும் நடந்து கொண்டால் என் மனம் களிப்படைந்திருக்கும் என நினைத்தேன். நான் ஏன் இப்படி விசித்திரமாய் யோசிக்கிறேன் என வியப்படையவும் செய்தேன். ஆனால் நம் மனம் அப்படித் தான். சிலநேரம் அது காயங்களையும் காயங்கள் மீது யாராவது மிதித்து நசுக்கி ஏற்படுத்தும் வலியையும் விரும்பும்.

18 வயதில் நான் “கரமசோவ் சகோதரர்கள்” படித்தேன். ஒரு நல்ல விரிவான நாவல் என்பது போக அது வேறேப்படியும் என்னை வியப்புற வைக்கவில்லை. அப்போது ஜெயமோகனிடம் அந்நாவல் பற்றி என் எதிர்வினையை சொன்னேன். அவர் சுருக்கமாய் சொன்னார் “இந்நாவலில் தஸ்தாவஸ்கி மனித மனதில் பற்பல விசித்திரங்களை எப்படி சித்தரித்திருக்கிறார், வாழ்க்கையில் நாம் காணும் பலவகை மனிதர்களை எப்படி ஒட்டுமொத்தமாய் நாவலின் பரப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் போன்றவற்றை நீங்கள் அறிய உங்களுக்கு வயதாக வேண்டும். முப்பது வயது கடந்த பின் இந்நாவல் உங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்”. கரமசோவ் சகோதரர்களை மீண்டும் சமீபத்தில் படித்த போது ஜெயமோகன் சொன்னது எவ்வளவு சரியானது எனப் புரிந்தது. ஒரு நாவலை ஆழமாய் படிக்க அறிவும் முயற்சியும் மட்டும் போதாது. வாழ்வில் அடிபட்டுப் பெறும் அனுபவமும் வேண்டும்.

”கரமசோவ் சகோதரர்களில்” அப்பா கரமசோவ் சதா தன்னைத் தானே கோமாளியாக்கிக் கொள்வதில் களிப்படைபவர். அவர் வயதானவர். பணக்காரர். ஆனால் சிறுவயதில் இருந்தே சமூகம் தன்னை கேலி செய்கிறது, மதிக்கவில்லை எனும் ஆழமான வடு ஏற்படுகிறது. அப்போதில் இருந்து அவர் பிறர் தன்னை மேலும் மேலும் இழிவு படுத்தும்விதம் நடந்து கொள்கிறார். அடுத்தவர்கள் அவரை கோமாளி, முட்டாள், ஸ்திரிலோலன், முரடன், நாகரிகமற்றவன் என பழிக்கும் போது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. மடம் ஒன்றில் நடக்கும் காட்சியில் துறவி ஸோஸிமா அவரிடம் இதையே வற்புறுத்திக் கூறுவார். “உன்னைப் பிறர் கேவலமாய் நினைப்பதை இப்படி ரசிக்கும் வரையில் நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பாய். உனக்கு நிம்மதியே கிடைக்காது. ஏனென்றால் நீ பொய்களை விரும்பி ரசித்து பொய்களுக்குள் மூழ்கிப் போய் திளைக்கிறாய். உன்னை யாரும் கீழாக நினைக்கவில்லை எனும் உண்மையை ஏற்க நீ தயங்குகிறாய்” என்பார். ஒரு மனிதன் ஏன் தன்னை பிறர் தாழ்வுபடுத்தவில்லை என நம்ப மறுக்கிறான்? எப்படி பிறர் நம்மை மதிக்கிறார்கள் என நினைப்பதில் கிளர்ச்சி அடைகிறோமோ அதே போல் பிறர் நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள் என உணர்வதிலும் நாம் அதே போன்ற கிளர்ச்சியும் சிலாகிப்பும் அடைவதுண்டு.

என் சொந்த ஊரில் தந்தை கரமசோவ் போன்ற சில மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். தம்மை யாராவது மட்டம் தட்டினால் அதற்காய் மனம் கசிந்து அழுவார்கள். புலம்புவார்கள். ஆனால் யாரும் கேலி செய்யாத போது பதற்றமாகி அதற்கான சூழலை உருவாக்குவார்கள். தம்மைப் பற்றி தாமே மோசமாய் பேசுவது, பிறரை வம்புக்கிழுப்பது, சிக்கல்களை தோற்றுவிப்பது ஆகியன செய்வார்கள். இவர்கள் சற்று அப்நார்மலானவர்கள் என நினைத்தேன். ஆனால் அது உண்மை அல்ல. மிக நார்மலாய் தெரியும் என்னைப் போன்றவர்களிடமும் இம்மனநிலை செயல்படும். சுற்றிலும் தீயவர்கள் நின்று என்னை மட்டம் தட்டுவதாய், நான் துன்புறுவதைக் கண்டு ரசிப்பதாய் எண்ணுவதில் பரவசம் கொள்வேன். இப்படியான மனநிலை முன்பு எனக்கு இருந்ததில்லை. ஆனால் மின்னல் போல் எனக்குள் அது தோன்றி மறைகிறது. அப்போது நல்லவர்கள் என்னை எரிச்சல்படுத்துகிறார்கள். என் மீது யாராவது வெறுப்பு கக்க மாட்டார்களா என ஏங்குகிறேன்.


ஒருவேளை தஸ்தாவஸ்கியும் இம்மனநிலையை கடந்து போயிருக்கலாம். யாரோ அண்மையில் உள்ளவரிடம் இதை கவனித்திருக்கலாம். அவர் மிகப்பெரும் கலைஞனாய் அறியப்படுவது மனித மனதை ஒரு விஞ்ஞானியை போல் துல்லியமாய் ஊடறுத்து பார்க்க முடிவதால் தான். ஒரு நாவலாசிரியன் வெறுமனே கதை சொல்வதில்லை. சமூக நிலையை, வரலாற்றை பதிவு செய்வதில்லை. உங்களை அழவோ சிரிக்கவோ வைப்பதில்லை. அவன் தன் நாவலின் பாத்திரத்தின் மனதையும், அப்பாத்திரத்தின் செயல்பாடுகளையும் துல்லியமாய் அறிந்து வைத்திருப்பான். தஸ்தாவஸ்கியை போல் மனித மனதை நுணுகி அறியும் போதே ஒரு நாவலாசிரியன் கலைஞன் ஆகிறான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...