Skip to main content

போகன் சங்கர்


கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில் போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை சாப்பிட்டே குண்டாகி விடுகிறார்கள் என்று. பெரும்பாலான நம் கவிஞர்கள் தம் கவிதைகளையும் சுற்றி உள்ளோர் கவிதைகளையும் படித்து படித்தே மூச்சுத்திணறி விடுகிறார்கள். அவர்கள் நாவல், கட்டுரை, தத்துவம், அரசியல், சமூகவியல், வரலாறு என நகர மாட்டார்கள் (விதிவிலக்குகள் உண்டு). போகன் அப்படி அல்ல. அவரது பரவலான தீவிரமான வாசிப்பு வியப்பூட்டுவது. மன அழுத்தம் பற்றின Noonday Demon எனும் தடிமனான நூலை வாசிக்க தொடங்கினேன். எதேச்சையாய் ஒரு நூலகத்தில் கண்டெடுத்த நூல் அது. மிக முக்கியமான அடர்த்தியான பதிவு. தன்வரலாறும் உளவியலும் கோட்பாடுகளுமாய் மன அழுத்தத்தை ஆராயும் ஒரு சாதனை நூல். ஒரு நாள் எதேச்சையாய் போகன் அந்நூலைப் பற்றி முகநூலில் போகிற போக்கில் குறிப்பிட்ட போது ஆச்சரியமானேன். ஆனால் வாசிப்பதை அப்படி முழுங்கி எழுத்தில் மேற்கோள்களாய் துப்ப மாட்டார். சுருக்கி தன் கட்டுரையாக எழுத மாட்டார். அதை ஜீரணித்து தன் கருத்தாக்கி புது பார்வையில் அளிப்பார். போகனின் கவிதைகளில் காணும் ஆழ அகலத்துக்கு இந்த வாசிப்பும் தீராத் தேடலும் ஒரு காரணம்.
முகநூலில் ஒரு விளையாட்டுத்தனமான முகமூடி அணிந்து பகடி பண்ணித் திரிவார். முகநூலில் பல நல்ல கவிதைகளையும், பல அரைகுறை கவிதைகளையும் சமமாக எழுதியிருக்கிறார். எழுதுகிற அனைத்தையும் பிரசுரித்து விடுவார். அவரது கவிதை மனம் அடையும் ஏற்ற இறக்கங்களை முகநூலில் அவரை தொடர்ந்தாலே பட்டவர்த்தமாகி விடும். எந்த மறைவுகளும் அற்ற இன்றைய காலத்துக்கான டிப்பிக்கல் கவிஞர்.
போகனின் மொழியின் அழகு யார் கண்ணிலும் படாத அவரது அற்புதமான உவமைகள். ஒரு கதையில் குழந்தையின் உதட்டைப் பற்றி சொல்லும் போது குளிர்ந்த ஆரஞ்சு சுளை போல என்பார். இப்படி பல எதிர்பாராமல் முதுகைத் தொட்டழைக்கும் உவமைகள் அவரிடம் உண்டு. அவரது impressionable ஆன மனம் எலிகளை பிடிப்பதற்கான பசை அட்டை போல என நினைக்கிறேன். அதில் கோடிக்கணக்கான காட்சிகள் ஒட்டிக் கிடந்து கைகால்களை போட்டடிக்கின்றன. அவை அவர் மொழி வழி இறங்கி வெளியே ஓடுகின்றன. நான் அடிக்கடி படித்து பொறாமைப்படுகிற மொழி போகனுடையது. அந்த மொழி, நாம் நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பலவித நெருக்கடிகளின் உளவியல், அறம் போன்ற அவரது தீவிரமான பேசுபொருட்கள், பகடி ஆகியவை தான் இத்தனை பேரை அவரது எழுத்து நோக்கி கடந்த சில வருடங்களில் இழுத்து வந்துள்ளது.
போகனை ஒருமுறை சென்னையில் இரு கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். காப்காவின் விசாரணை நாவலில் வரும் நாயகன் போலவே நடந்து கொள்வார். ரொம்ப சிரித்து பேசினால் கைது பண்ணி விடுவார்களோ எனும் பாவனை. கசப்பான ஒரு நகைச்சுவை பேச்சில் தொனிக்கும். முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு சுண்டு விரலால் கண்ணாடியை அடிக்கடி மூக்கின் மேல் அட்ஜஸ்ட் செய்யும் மேனரிசம். குறிப்பாக மனதிற்குள் எதையோ நோண்டியெடுத்து வெளியே சொல்லும் போது அப்படி செய்வாராக இருக்கலாம். பார்த்தவுடன் ஒட்டிக் கொள்கிற மனிதராக தெரியவில்லை. ஒரு சின்ன நுண்ணோக்கியுடன் தனக்குள் ஓடும் கடிகாரத்தை ஆய்வு செய்து நகர்கிற அகவயமான மனிதர்.
ஆனால் அவருக்குத் தான் எத்தனை எத்தனை ரசிகைகள். இரண்டாம் முறையாக அவரை உயிர்மை கூட்டத்தில் சந்தித்த போது “உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண் விசிறிகள் அமைகிறார்கள்?” என்றேன். “எனக்கே தெரியலீங்க” என்றார். அவரது உணர்ச்சி கொப்புளிக்கும் மொழி, அதன் எளிமை, நாடகீயம், மென்மை, தொட்டாற் சிணுங்கும் குழந்தை போன்ற தொனி ஆகியவை காரணமாய் இருக்கலாம் என என் மூளை சொன்னது. அதே மேடையில் இருந்த மனுஷ்யபுத்திரனிடம் முன்பு பலமுறை இக்கேள்வியை கேட்டிருக்கிறேன். “அதுக்கு நீங்க கவிதை எழுதணுங்க” என்பார். கவிஞர்கள் பேரழகர்களாக இருக்க வேண்டியதில்லை. கவிமொழியில் ஒரு மேஜிக் இருந்தால் போதும்!


இந்த பீடிகை எல்லாம் இன்று பிறந்த நாள் காணும் போகன் சங்கருக்கு வாழ்த்து சொல்லத் தான். தமிழ்க் கவிதையில் ஒரு அற்புத நிகழ்வு நீங்கள் நண்பா! தொடர்ந்து பயணியுங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...