Skip to main content

“மாதொரு பாகன்” சர்ச்சை: புனைவும் நிஜமும்



நேற்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடையில் பேசின டான் அசோக்கிடமும் இன்னும் சிலரிடமும் “மாதொரு பாகன்” அபுனைவு என்கிற மாதிரியான குழப்பத்தை பார்க்க முடிந்தது. அது திருச்செங்கோட்டின் பெயரை பயன்படுத்துகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு நம்பிக்கையை, சடங்கை பற்றினது என நாவலின் முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. சமூகவியல் ஆய்வை நாவலாக எழுதுவதற்காய் நிதி வாங்கி உருவாக்கப்பட்டது என்பது, ஆகையால் அது அபுனைவு, கட்டுரை நூலில் பெண்களை ஆதாரமின்றி இழிவுபடுத்திவிட்டார் இவர்களின் வாதங்கள்
.
 இறுதியான கருத்து பற்றி முதலில் ஒரு விசயம். நிதி வாங்கி எழுதினால் அது ஏதோ நம் ஊரை வேற்றாளுக்கு காசு வாங்கி காட்டிக் கொடுக்கிற காரியம் என்பதாக பார்க்கப்படுகிறது. இது சுத்த அபத்தம். எழுத்தில் காட்டிக் கொடுப்பது, துரோகம் என்றெல்லாம் இல்லை. அது உணர்வுகளை புண்படுத்துகிறதா, உங்களுக்கு தடவித் தருகிறதா என்பதும் முக்கியமில்லை. இரண்டே தகுதிகள் தான் ஒரு படைப்புக்கு இருக்க வேண்டும்.
1)   உண்மையை பேச வேண்டும். ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு உண்மை கோணம் இருக்கலாம். அதை நம்பும்படியாய் ஆழமாய் முன்வைக்க வேண்டும்.
2)   Story of O போன்ற நாவல்கள் செய்வது போல் மனிதனை கொச்சைப்படுத்த, இழிவுபடுத்தக் கூடாது. இழிவை அப்படியே காட்டலாம். ஆனால் இல்லாத இழிவை உருவாக்கக் கூடாது. மாற்று ஆணின் மூலமாய் குழந்தைபேறு இழிவு என நீங்கள் கருதினால் அது உங்கள் பிரச்சனை. அந்த வழக்கத்தை ஒரு புனைவு மீள்கட்டமைக்கலாம். அதன் மூலம் மனித செயல்பாடு பற்றி ஆய்வு செய்யலாம். ஒரு பெண் அவ்வாறு செய்வதில் எந்த குற்றமும் இல்லை. அவளுக்கு அதில் பரிபூரண உரிமை உள்ளது. சொல்லப் போனால் இது ஒரு குடும்ப அமைப்பு மீறல். அதனால் தான் இவ்விசயத்தில் ஆண்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. இது குறித்து போகன் சங்கர் முகநூலில் எழுதியது போல, நாவல் பெண்களை இழிவு படுத்தவில்லை. ஆனால் குடும்ப அமைப்பை மீறும் வழமை நமது கடந்த காலத்திலும் இருந்துள்ளதை சொல்கிறது. அதைத் தான் நம்மால் தாங்க முடியவில்லை. குடும்பம் தமிழர்களின் புனிதப் பசு.

சரி பிரதான விசயத்துக்கு வருகிறேன். புனைவா அபுனைவா?
நாவல் என்றாலே புனைவு தான். நிதி பெற்றாலும் இல்லாவிட்டாலும். புனைவு ஒரு செய்தியின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட கற்பனை. அத்துடன் அச்செய்தி அதன் நம்பகத்தன்மையை நடைமுறையில் இழக்கும். பிறகு அதன் நம்பகத்தன்மை கற்பனையில் வாசகனுக்குள் மட்டுமே இருக்கும். வெளியே நடப்பில் அதற்கு மதிப்பில்லை.
உதாரணமாய், “பொன்னியின் செல்வன்” நாவல் வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சோழர் வரலாற்றை பேசுகிறது. அதனால் அது வரலாற்று நூல் என கூற முடியாது. புனைவு தான். நாவலில் ஆதித்த கரிகாலனுக்கு அவனது சகோதரியான நந்தினி மேல் காம இச்சை இருந்ததாய் சித்தரிக்கப்படுகிறது. கரிகாலன் அவ்வாறு உறவை விரும்பினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பார்ப்பனரான கல்கி தமிழர்களை கேவலப்படுத்த அவ்வாறு எழுதினார் எனக் கூறி நாம் “பொன்னியின் செல்வனை” எரிக்கலாமா? கூடாது. ஏனென்றால் அது உண்மை என நம்பினால் கல்கியே அதை கட்டுரையாக எழுதி இருப்பார். அவர் நாவலாக எழுதும் போதே வாழ்க்கையில் நடந்ததை அல்ல நடக்க சாத்தியமுள்ளதை பேசத் தான் முயல்கிறார் என ஆகிறது.
அந்த இடத்தில் கரிகாலனை வைத்துப் பார்க்க வேண்டியதில்லை. அம்மா, மகன், சகோதர சகோதரிகளுக்கிடையே இச்சை ஏற்படுவது பிறழ்வு என்றாலும் அது உண்மை தான். நம் மனதின் அடியாழத்தில் இந்த இச்சைகள் தூங்குகின்றன. இது குறித்த விரிவான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த இச்சை நம்மை அறியாது வெளிப்படுமானால் என்ன ஆகும் என பரிசோதிக்க கல்கி விரும்புகிறார். நாவலில் அது ஆழகாக சித்தரிக்கப்படவில்லை என்றாலும் தொட்டுக் காட்டி இருக்கிறார்.
கல்கி எழுதுவது நடப்பியல் உண்மையா என்றால் இல்லை. ஆனால் உண்மைக்கான சாத்தியமா என்றால் ஆமாம். உண்மையின் ஒரே நிரூபணமான தரப்பை அபுனைவு முன்வைக்கிறது. புனைவு நிரூபிக்க முடியாத உண்மையின் எண்ணற்ற தரப்புகளை காட்டுகிறது. புனைவை கண்டு உண்மை என குழப்பிக் கொண்டவர்கள் தான் எம்.ஜி.ஆரையும் ரஜினியையும் முதல்வராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஆக்கினார்கள். அவர்களே தான் சுஜாதா முதல் ரசூல், மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன் வரை வேட்டையாடினார்கள்.
கயிறைப் பார்த்து பாம்பென்று பயந்து கூவினால் அது பாம்பின் தவறல்ல. நீங்கள் இருட்டில் இருப்பது தான் தவறு. வெளிச்சத்திற்கு வாருங்கள். அப்போது தரவு சார் உண்மையும், உண்மை போல் தோற்றமளிப்பதும் வேறுவேறு என புரியும். ஒன்று நடப்பியல் வாழ்வுக்கானது, இன்னொரு தத்துவ, உளவியல், கலாச்சார ஆய்வுக்கானது.
இறுதியாய் ஒரு கேள்வி. ஏன் நாம் புனைவைக் கண்டு இவ்வளவு கோபப்படுகிறோம். இந்த சாமி பிள்ளை விவகாரத்தை பற்றி ஆய்வுபூர்வமான கட்டுரை நூல்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்டு வந்துள்ளனவே. அவற்றை ஏன் பொருட்படுத்தாமல் புனைவை மட்டும் பொருட்படுத்துகிறோம்? பிரபாகரன் பற்றின விமர்சன கட்டுரைகளை விட புலி ஆதரவாளர்களுக்கு ஏன் ஷோபா சக்தியின் கதைகள் இவ்வளவு எரிச்சலை கோபத்தை உண்டு பண்ணுகின்றன?

உண்மையை விட புனைவு ஏன் இவ்வளவு உண்மையானதாக தோன்றுகிறது? இதற்கான விடையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...