Skip to main content

பெருமாள் முருகன் சர்ச்சை: யார் துரோகி?


இன்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் சினிமா தணிக்கை, சர்ச்சை, பெருமாள் முருகன் பிரச்சனை ஆகியவை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பெருமாள் முருகன் ஏன் தனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தும் தொடர்ந்து போராடாமல் பின்வாங்கினார் எனக் கேட்டார். இது குறித்து ஒரு விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் வேறு பெருமாள் முருகன் தேவையில்லாமல் பயந்து பின்வாங்கியதை கண்டித்து டிவிட்டரில் எழுதியதாக ஒரு சேதி பரவி உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. எழுதப் போவதில்லை எனும் அவரது அறிக்கை தோல்வியை ஒப்புக் கொள்ளும் செயல்பாடா? அது தன் ஆதரவு அமைப்புகளுக்கு அவர் செய்த துரோகமா? மேலோட்டமாய் இந்த பின்வாங்கல் ஒரு துரோகம் போல் தோன்றினாலும் அடிப்படையில் பிழையான வாதம் இது.

இரண்டு விதமான போராட்டங்கள் உள்ளன. தனிப்பட்ட போராட்டம், பொதுமக்கள் நலனுக்கான போராட்டம். தனிப்பட்ட போராட்டங்களின் போது வெளிஆதரவு இருந்தாலும் கூட அதிலிருந்து பின்வாங்கும், அதை பாதியில் கைவிடும் உரிமை தனிநபருக்கு உண்டு. அது துரோகம் அல்ல. ஆனால் பொது பிரச்சனைக்கான போராட்டத்தில் அப்படி அல்ல. முள்ளிவாய்க்காலின் போதான கலைஞரின் மௌனம் ஒரு துரோகம். ஏனென்றால் அதில் ஒரு பொது பிரச்சனையும் பொது கொள்கை நிலைப்பாடும் சம்மந்தப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட போராட்டங்கள் அப்படி அல்ல. ஒரு பெண் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்காக போராடுகிறாள் எனக் கொள்வோம். எப்போது வேண்டுமானாலும் தன் போராட்டத்தை அவள் கைவிடலாம். தனிப்பட்ட நெருக்கடி, இயலாமை காரணமாய் வழக்கை வாபஸ் வாங்கலாம். சமரசமாக போகலாம். அப்போது அதுவரை அவரை ஆதரித்து வந்த பெண்ணிய அமைப்புகள் அவரை துரோகி என அழைக்க முடியாது. ஏனென்றால் அவருடையது ஒரு தனிப்பட்ட போராட்டம். என்னதான் பொது ஆதரவு இருந்தாலும் அது பொதுப் போராட்டம் அல்ல. ஐரோம் ஷர்மிள ஒருமுறை தான் காதலித்து மணம் புரிந்து குடும்பமாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தன் உண்ணாவிரதத்தை முடிக்க விடாதபடி அவரது ஆதரவாளர்கள் சிலர் தடுப்பதாக கூறுகிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு தனிநபர் போராட்டம் பொது அமைப்புகளால் ஹைஜேக் செய்யப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். பெருமாள் முருகனின் நாவல் சர்ச்சையில் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்க முயலும் போது நாமும் அவரது தனிப்பட்ட பிரச்சனையை ஒரு பொது இலக்குக்காக ஹைஜேக் பண்ணவே முயல்கிறோம். அது நியாயம் அல்ல.

துரோகத்தை நாம் இப்படி வரையறுத்துக் கொள்ளலாம். ஒருவரது பின்வாங்கல் பிறரை பாதிக்குமானால் அது துரோகம். ஆனால் பெருமாள் முருகன் விசயத்தில் அவரே பாதிக்கப்படுபவராக இருக்கிறார். பிறர் அல்ல. அவரது முடிவு அவரைத் தான் பாதிக்கிறது. பிறரை அல்ல. பாதிக்கப்படுபவர் யார் என்பது தான் துரோகத்தை தீர்மானிக்கிறது. பெருமாள் முருகன் தனக்குத் தானே துரோகம் செய்ய இயலாது. அதனால் அவர் துரோகி அல்ல.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...