Skip to main content

சிரமம் எனும் கற்பனை


இன்று காலையில் ஆந்தெனி ரோபின்ஸின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சில வேலைகளை சிரமம் என எண்ணி தள்ளிப் போடுகிறோம். ஆனால் சிரமம் உண்மையில் அவ்வேலை மீது ஒரு எதிர்மறை உணர்ச்சியாக திணிக்கப்படுகிறதே அன்றி எந்த வேலையும் அதன் அடிப்படையில் சிரமம் அல்ல. ஒருவேலையை எளிது, சுவாரஸ்யம் என யோசிக்க பழகிக் கொள்ளலாம். பிறகு மெல்ல மெல்ல அதை செய்வதற்கான தயக்கம் போய் விடும் என்கிறார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. இந்த விளம்பரங்கள் தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை நமக்கு தேவை என நம்ப வைத்து நம் மேல் திணிக்கவில்லையா? அப்படி இருக்க நாமே ஏன் நம்மை நம்ப வைக்க முடியாது? அதுவும் நமக்கு உபயோகமான விசயங்களுக்கு.


அதற்காக பிடிக்காத வேலையை பிடிக்கிறது என நம்ப வைக்க முடியாது. பிடிக்காத மனைவி அல்லது கணவனை பிடிக்கிறது என பிடிவாதமாய் ஏற்க முடியாது. ஆனால் பிடிக்காத விசயங்களை ஏன் தொடர்ந்து செய்கிறோம் என யோசிக்கலாம். அந்த முடிவை எடுக்க ஏன் தள்ளிப் போடுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? முடிவெடுத்த பின் நம் நிலை இன்னும் மோசமாகாது, சிறப்பாகவே இருக்கும் என நம்மை நம்ப வைக்கலாம். அதன் மூலம் தயங்கி தயங்கி நரகத்தை அனுபவிக்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறலாம்.

ஆந்தொனி ரோபின்ஸின் வாதம் ஒருவித கருத்துமுதல் வாதம். அதாவது எல்லாம் மனமே, மனம் நினைத்தால் எதையும் மாற்றலாம் எனும் நம்பிக்கை. இதில் மிகை உள்ளது தான். ஆனால் ஓரளவு உண்மையும் உள்ளது.


என்னுடைய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை அதன் சிரமம் காரணமாய் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரது பேச்சை கேட்ட பின் இந்த “சிரமம்” ஒரு கற்பனை தான் எனப் புரிந்தது. உட்கார்ந்து எழுதி விட்டேன். இன்றைய காலைப் பொழுது உபயோகமாய் ஆனது. 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...