Skip to main content

புத்தக விற்பனையும் எளிய மக்களும்

புத்தகங்களை இலவசமாக விற்கலாமா என க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் புத்தகங்களை தரமாக அச்சிடுவது மிக விலைபிடிப்பான காரியம் என்றும், நாம் இன்னொரு புறம் புத்தகங்களை இலவசமாக கொடுக்க கேட்கிறோம், இது நியாயமில்லை என்றும் வாதிட்டிருக்கிறார். பண்பாட்டு அறிவு இலவசமாக ஒரு சமூகத்துக்கு கொடுக்கப்படும் என கேட்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை புத்தகங்களுக்கு அரசும் மையசமூகமும் மீடியாவும் எந்த ஆதரவும் அளிக்காமல் பதிப்பாளர்களை மிகுந்த நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. எனக்குத் தெரிந்த பதிப்பாளர் தனது பத்திரிகை விலையை பத்து ரூபாய் உயர்த்தினார். எப்படி மக்கள் வாங்குவார்கள் என கேட்ட போது “பால் விலை ஏறினால் பால் குடிக்காமல் இருக்கிறார்களா?” என திரும்பக் கேட்டார். ஆனால் உணவு அத்தியாவசியப் பொருள். அதனை ஒரு பண்பாட்டு அறிவுச்சாதனத்துடன் ஒப்பிட இயலாது. ஆனால் பதிப்பாளரை அவ்வாறு பேச வைப்பது முழுக்க கைவிடப்பட்ட நிலை தான்.


இன்னொரு புறம் நாம் மத்திய, கீழ்மத்திய, அடித்தள மக்களின் கண்ணோட்டத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். ஒரு உதவி இயக்குநர் நண்பரிடம் பேசும் போது தனக்கு சம்பளம் நாலாயிரம் ரூபாய் என்றார். எப்படி சமாளிக்கிறீர்கள் எனக் கேட்க “எனக்கு எந்த தேவையும் பெரிதாய் இல்லை. புத்தகம் வாங்கவும் வெளியே போக வண்டி செலவுக்கும் பணம் கிடைத்தால் போதும்” என்றார். இந்த சமூகத்தில் அவரைப் போன்றவர்கள் புத்தகங்களை வெறுமனே வேடிக்கை பார்த்து கடந்து விட வேண்டும் என நாம் கூற முடியாது. புத்தகங்கள் வாசிப்பது ஒரு அடிப்படை உரிமை. அதை இந்த அரசும் சமூகமும் தனிமனிதனுக்கு அளிக்க வேண்டும். ஆனால் காலங்காலமாக விலை காரணமாய் புத்தகங்கள் சாதாரண மக்களூக்கு ஒரு கனவாகவே உள்ளது. நான் சிறுவனாய் இருக்கையில் பதினைந்து வயதில் தான் என் அப்பாவிடம் மிகவும் கெஞ்சி ஒரு புத்தகத்தை முதன்முதலில் வாங்கினேன், பிற்பாடும் என் வாசிப்பு இரவல் நூல்கள் வழி தான் நடந்தது. இது ஒரு அவல நிலை. ஒரு நாகரிக சமூகத்தில் சமூகத்தில் எந்த மூலையிலும் நூல்கள் எளிதாக எவர் கைக்கும் எட்டும்படி இருக்க வேண்டும்.

புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்படுவது ஒன்றும் தவறல்ல. பண்பாட்டு அறிவு இலவசமாக கிடைப்பது நல்லது தானே. அதற்கான செலவை அரசு பார்த்துக் கொள்ளலாம். அரசு லேப்டாப் இலவசமாக வழங்குவது போல் நிறைய நூல்களை வாங்கி மாணவர்களுக்கு அளிக்கலாம். கல்லூரி வரையிலான மாணவர்கள் பதிப்பிப்பதற்கு அரசு ஒரு இலவச பதிப்பகம் ஆரம்பிக்கலாம். அதற்கு ஒரு நல்ல எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரை பொறுப்பாக வைக்கலாம். பிறகு இந்த சேவையை எளிய பொது மக்களுக்கும் நீட்டிக்கலாம். அரசின் உதவியின்றி மக்களுக்கு புத்தகங்களை கொண்டு சேர்ப்பது மிக சிரமம்.

புத்தகத்தின் விலை பற்றி கிரியா ராமகிருஷ்ணன் கூறுகையில்  மேற்தட்டினரின் சல்லித்தனத்தை சாடுகிறார். அவர் மாதம் ஆறாயிரம் சம்பாதிக்கிற ஆட்களின் நிலையையும் யோசிக்க வேண்டும். அவர்களெல்லாம் வாங்கவே முடியாது. பதினைந்தாயிரம் சம்பாதிக்கிறவர்கள்  புத்தக விழாவில் பதினைந்து புத்தகங்கள் வாங்கினால் அந்த மாதம் சாப்பிட முடியாது. அதனால் பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்தின் 70% பிரதிகளை மலிவான தாளில் அச்சிட்டு 60% குறைவான விலையில் விற்பதையும் முயற்சித்து பார்க்கலாம். என்னிடம் சேகரத்தில் உள்ள கணிசமான நூல்கள் நடைபாதைகளில் பொறுக்கியவை. அழுக்கானவை, கிழிந்தவை. எனக்கு அவற்றை படிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மிக உயர்வான தாளில் பளபள அட்டையில் தந்தாலும் ராணிமுத்து தாளில் தந்தாலும் புத்தகத்தின் உள்ளடக்கம் தான் முக்கியம். மேலும் இன்றைய காலத்தில் புத்தகங்களை வருடக்கணக்கில் பாதுகாத்து வைப்பதும் நடைமுறைக்கு ஒவ்வாத காரியம். ஒரு முறை வாசித்தால் நிலைக்கும் அளவுக்கான தரத்தில் இருந்தால் அதுவே தாராளம். ரஷ்ய மொழியாக்க நூல்கள் முன்பு ரெண்டு, மூன்று ரூபாய்க்கு மலிவாக கிடைத்தன. அது போன்ற ஒரு நிலை தமிழ் நூல்களுக்கு வர வேண்டும் என்பது என் கனவு. புத்தகங்கள் மேட்டுக்குடியினருக்கு ஆனதாக மாறி வருகிறது. அந்நிலை மாற வேண்டும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...