Skip to main content

கதவை அடைக்காதே

நான் வழக்கமாய்
திறக்கும் கதவை
அடைக்காதே
அவ்விடத்தில்
பத்து புதிய கதவுகளை
திறப்பேன்
என்னை உதாசீனிக்காதே
தொடர்ந்து நினைவு படுத்தியபடியே இருப்பேன்.
என்னை பார்க்க தவிர்த்தால்
உன் பார்வை படும்
இடமெல்லாம் இருப்பேன்
ஒரு மலையுச்சியின் விளிம்பில் இருந்து
தள்ளி விடப் பார்த்தால்
உன் காலை இறுக
பற்றிக் கொள்வேன்


நாம் பரஸ்பரம் நகர்த்தும்
காய்களின் குறுக்குமறுக்கான நகர்வுகளால்
சதுரங்க பலகை
கலைந்தபடியே இருக்கிறது
காலம் கலைந்த எறும்பு வரிசை போலாக
அடுத்தவர் வாழ்வின்
ஒழுங்கு குலைந்து போகிறது
மனிதர்கள் பாதை கலைந்து
அடுத்தவர் வாசலை திறந்து
தம் வீட்டுக்குள் வருகிறார்கள்
வெற்றியின் பாதைகள் தோல்வியிலும்
தோல்வியின் பாதைகள் வெற்றியிலும்
முடிகின்றன
இன்றுள்ள பல
எழுச்சிகளுக்கும் சீரழிவுகளுக்கும்
பாராட்டுக்கும் கண்டனத்துக்கும்
உள்ளாகிறோம்.
சினிமா சண்டைக்காட்சியில் வரும்
கட்டுப்பாட்டை இழந்த காரைப் போல்
நம் காலத்தை
ஒரு வேடிக்கை காட்சியாக்கி விட்டோம்.

போதும்.
நீ ஒரு திசையில்
இழுக்காதே
நானும் இன்னொரு திசைக்காய்
இழுக்க மாட்டேன்
வகுப்பில் சதா கைகளை பிணைத்துக் கொண்டு
ப்ரியமாய் திரியும் குழந்தைகள்
மணியடித்ததும்
கைகளை விடுவிப்பது போல்
விட்டு விடு
வீட்டுக்கு போயாக வேண்டும்.

மாலையாகி விட்டது
இருட்டிலும் களைப்பிலும்
நிழலுருவங்களாய்
தொலைதூர சதுர ஒளிப்புள்ளிகளை
நோக்கி நிற்கிறோம்.
முதலில்
கையை விடு!
இதோ
பொங்கி வழியும் கோப்பையின்
நீர் போல்
நீ என்னிலிருந்து

அகல்கிறாய்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...