Skip to main content

ஜெயா வழக்கு தீர்ப்பும் அதிமுகவினரின் நாடகமும்


ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என்பது ஒரு முக்கியமான தீர்ப்பு. அந்த நீதிபதியின் குசும்பைப் பாருங்கள். 3 வருடம் என்றால் இன்றே ஜாமீன், அல்லாவிட்டால் இன்றைக்காவது சிறையில் இருப்பார் என ஒரு வருடம் கூட்டிக் கொடுத்துள்ளார். ஏனென்றால் தண்டனை பெயருக்குத் தான், ஜெயலலிதா ஜெயிலில் தண்டனை அனுபவிக்க மாட்டார் என அவர் அறிவார். அதனால் குறைந்தது ஒன்று ரெண்டு நாளாவது உள்ளே இருக்கட்டும் என நினைத்திருக்கிறார் போலும்.

 அரசியல் தலைவர்கள் நீண்ட நாள் சிறையில் இருப்பது என்பது நம் வரலாற்றிலேயே இல்லை. சும்மா பெயருக்கு தண்டனை வாசிப்பார்கள். அதற்கு தடை, ஜாமீன், அப்பீல் என போய்க் கொண்டே இருக்கும். தண்டனைக்குள்ளானவரை குறைந்தது முப்பது வருடமாவது தொடர்ந்து தேர்தலில் தோற்கடித்து மக்கள் தான் இவர்களுக்கு எல்லாம் தண்டனை அளிக்க முடியும். அரசியல்வாதிக்கு வேறெதுவும் பொருட்டான தண்டனை இல்லை.

தமிழகம் பூரா ஆர்ப்பாட்டம் செய்து கடைகளை அடித்து நொறுக்கி பேருந்துகளை எரிக்கும் ஆதிமுகவினர் ஏதோ உணர்சசி வேகத்தில் செய்வதாக நான் நினைக்கவில்லை. இப்படி ஒரு தீர்ப்பு வரப் போகிறது என ஏற்கனவே கட்சியினருக்கு தெரியும். அதற்காக தயாராக தான் இருந்திருக்கிறார்கள். அவரக்ளின் இலக்கு எப்போதுமே பொதுமக்களும் சாதாரண வியாபாரிகளும் தான். ஒரு நட்சத்திர ஓட்டலுக்குள் போய் தாக்குவார்களா? நீதிமன்றம் முன்பு போய் தர்ணா பண்ணுவார்களா? மாட்டார்கள். டாஸ்மாக் அதன் பாட்டுக்கு திறந்தே ஜெகஜோதியாக இயங்குகிறது. அதை உடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு போய் குடித்து விட்டு கிடைக்கிற மிதப்பில் தானே ஆர்ப்பாட்டம் பண்ண முடியும். பொதுச்சொத்தை ஆளுங்கட்சியினர் உடைப்பதை வேடிக்கை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஏதோ பள்ளிக்கூட பிள்ளைகளை விளையாட விட்டு கண்காணிக்கும் டீச்சரை போல் தோன்றுகிறார்கள். கடைகுள் புகுந்து குண்டர்கள் உடைத்ததுமே அங்கு ஒரு போலீஸ்காரர் போய் “போதும் போங்க என அமைதிப்படுத்துகிறார். மாணவர்கள் சாலை மறியல் செய்தால் மாட்டடி அடித்து சிறையில் ஏற்றும் இவர்கள் ஏதோ குடித்து விட்டு கலாட்டா பண்ணும் மாப்பிள்ளையை சமாதானம் பண்ணும் மாமனாரை போல் நடந்து கொள்கிறார்கள். இதைப் போல் மற்றொரு அவலம் இல்லை. இதையெல்லாம் சேர்த்து பார்க்கையில் இந்த ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா, போலீசார் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் எனத் தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு தேவை கட்சியில் தான் இன்னும் ஒரே தலைவர் என வலுவான ஒரு சேதியை விடுப்பது; இன்னும் கட்சியினர் தன் மீது மட்டுமே விசுவாசமாக இருப்பதாய் சித்தரத்தை உருவாக்குவது. அந்த காட்சி கச்சிதமாக நடந்தேறி விட்டது.
எப்படியும் அடுத்தது திமுக ஆட்சி தான். ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பு வராதிருந்தாலும் கூட விலைவாசி உயர்வு. மின்சார பிரச்சனை காரணமாய் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் எப்படியும் அடுத்த தேர்தல் முடிவுகள் திமுகவும் சாதமாகத் தான், இந்த தீர்ப்பு எப்படி இருந்தாலும், இருக்கும். ஜெயலலிதா அதுவரை சோனியா காந்தி போல் நிழல் அரசாங்கம் நடத்தலாம். ஆனால் அடுத்த தேர்தலுக்கு அடுத்த தேர்தல் தான் முக்கியம். அப்போது அவரால் தேர்தலில் நிற்க முடியுமா என்பது தான் பிரதான கேள்வி. எப்படியும் அவர் சிறைக்கு போகப் போவதில்லை. கட்சி அதிகாரம் வழியாய் மொத்த அதிகாரமும் அவரிடம் தான் இருக்க போகிறது. ஆனால் ஜெயலிதாவின் நஷ்டம் இரண்டு விசயங்களில் உள்ளது. ஒன்று அவர் கௌரவத்துக்கு ஏற்பட்டுள்ள சின்ன இழுக்கு. புறங்கையால் துடைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார். அடுத்தது 100 கோடி அபராதம். அவரது சொத்து மதிப்பு லட்சங் கோடிகளில் இருக்கும். 100 கோடி என்பது பத்து பைசாவுக்கு சமானம். சல்லிப்பைசா அபராதம் விதித்து அவரை இப்படி அவமானப்படுத்துவது நியாயமல்ல!


இதைப் பார்த்து பிற அரசியல் தலைவர்கள் ஊழலில் இருந்து விலகி இருப்பார்களா? பரவலாக அரசியல் தலைவர்களுக்கு இது போல் தண்டனை அளிப்பது மட்டுமல்ல தண்டனைகளை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே அப்படி ஒரு அச்சம் ஏற்படும். ஆனால் ஊழலை கொண்டாடுகிற, ஈனமான முறையில் ஈட்டும் பணத்துக்கு பெரும் சமூக கௌரவம் உள்ள ஒரு நாட்டில் ஊழல் செய்ய யாரும் தயங்க மாட்டார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...