மோடி பிரதமாரானதும் தன் அலுவலகத்தில்
ஊழியர்களிடையே ஒரு திருவிழா சூழல் உண்டானதாக ஒரு நண்பர் சொன்னார். பலரிடமும் இந்த
பரபரப்பை பார்க்க முடிகிறது. மோடி கேஜ்ரிவாலை போன்று ஊடகங்களை சரிவர பயன்படுத்த
தெரிந்தவர்; மக்களிடம் நேரடியாக பேச முயல்பவர். மன்மோகனின் கூச்சமும் இறுக்கமும்
அவருக்கு இல்லை. அவர் திட்டங்களை சுணங்காமல் நிறைவேற்றக் கூடியவர். அவருக்கு கீழ்
மந்திரிகளோ அதிகாரிகளோ போக்கு காட்ட முடியாது. கடும் சட்டாம்பிள்ளை. முக்கியமாய்,
அவர் ஒரு முதலாளித்துவ சார்பு ஆட்சியாளர். நிறைய முதலீடுகள் வரப் போகின்றன என
எதிர்பார்க்கிறார்கள். இவையெல்லாம் சரி தான். ஆனால் இதனால் மட்டும் போன காங்கிரஸ்
ஆட்சியில் இருந்து இந்த ஆட்சி வெகுவாக வித்தியாசப்படும் என பொருள் இல்லை. “நல்ல
மாற்றம் வரும்” என வாய் பிளப்பவர்கள் மாறாமல் இருக்கப் போகிறவை எவை என்றும்
யோசிக்க வேண்டும். உண்மையில் மாறாதவை தான் ஒரு நீண்ட ஆட்சிக்காலத்தில் எந்த
அரசாங்கத்துக்கும் தலைவலி அளிக்கக் கூடியவை
.
முதலில் பொருளாதாரம். மோடியால் நிறைய
முதலீடுகளை ஊக்குவிக்க முடியலாம். இதுவரை சூழல் மாசுபடும் அபாயத்தினால் ஒதுக்கி
வைக்கப்பட்ட திட்டங்கள் கேள்வியின்றி ஒ.கெ பண்ணப்படலாம். வனங்களும் விவசாய
நிலங்களும் தாராளமாய் தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் அமைக்க ஒதுக்கபடலாம். குஜராத்
மாடல் படி பார்த்தால் நிலங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு தாமதமாய் கிடைக்கும்.
கிடைக்காமலே போகத் தான் வாய்ப்பும் அதிகம். ஆட்சியில் இல்லாத போதே கணிசமான
ஊடகங்களுக்கு center fruit கொடுத்து தன் டப்பிங்குக்கு மெல்ல வைத்தவர் இப்போது தன்னை எதிர்த்து
பேசும் வாய்ப்பை யாருக்கும் அளிக்க போவதில்லை. இடதுசாரிகளும் ஓய்ந்து விட்டார்கள்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கிராமத்து ஆரம்பப் பள்ளி போல் திருதிருவென
விழித்துக் கொண்டிருப்பார்கள். இந்த மாங்காய் அடி சூழலில் மோடி புகுந்து
விளையாடலாம். ஆனால் அதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகுமென்றோ பொருளாதாரம்
வயாக்ரா போட்டது போல் எழுந்து நிற்கும் என்றோ நாம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை.
இந்தியா மாதிரியான பரந்து விரிந்த
தேசத்தில் சில கார்ப்பரேட்டுகளை ஊக்குவித்தால் மட்டும் உற்பத்தி பெருகாது. அதற்கு
சிறுதொழில்கள் வளர வேண்டும். “கிஸான் கிஸான்” என்று சொன்ன வாயால் “தொழில்முனைவோர்”
என பேசத் தொடங்க வேண்டும். அவர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், கடன்கள், நில,
கட்டுமான வசதிகள் ஆகியவை பண்ணித் தர வேண்டும். நாம் சீனாவின் பாதையில் பயணிக்க
வேண்டும். இப்போதைக்கு வரை நாம் மத்திய வர்க்க மூளைகளை மட்டுமே உற்பத்தி செய்து
பன்னாட்டு சந்தைக்கு கொடுக்கிறோம். ஆனால் ஒரு உற்பத்தி தேசமாக மாறுவது ஒரு ஆட்சி
மாற்றத்தினால் நிகழக் கூடியதல்ல. மாநில வாரியான ஒத்துழைப்புடன் அதற்கு நெடுங்காலம்
பிடிக்கும்.
அடுத்து, உலக பொருளாதாரத்துக்கும் நமக்கும்
உள்ள தொடர்புவலை மிக மிக சன்னமானது. அங்கே காற்றடித்து வலை கிழிந்து பொருளாதாரம்
வீங்கினால் இங்கேயும் விலைவாசி மளமளவென உயரும். “பாரத் மாதா கி ஜெய்” என்று
மைக்கின் முன் நின்று முழங்கினால் ஐரோப்பிய பொருளாதார சந்தை திரும்பி பார்க்காது.
2004இல் பா.ஜ.க ஆட்சியை இழந்த போது அது ஒரு வலுவான பொருளாதாரத்தை விட்டு வைத்து
போனது. உலக பொருளாதாரமும் நமக்கு அனுசரணையாக இருந்தது. இதன் பலாபலன்களை தான்
மன்மோகன் சிங் அடுத்த ஐந்து வருடங்கள் ஈட்டினார் என்கிறார் அவரது மீடியா ஆலோசகர்
சஞ்சயா பாரு தனது Accidental Prime Minister நூலில்.
அதாவது காங்கிரஸின் முதல்கட்ட தேனிலவுக்கு பா.ஜ.கவும் காரணம் தான். பா.ஜ.க
காலத்தில் பொருளாதாரம் மேம்பட்டதற்கு பா.ஜ.க மட்டும் காரணம் அல்ல. அதற்கு
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மன்மோகன் சிங் எடுத்த தாராளவாத நடவடிக்கைகள் தான் விதை.
கேட்ரினா கேயிப்புக்கு ஐந்து சகோதரிகள். அவர்களை பார்த்தால் ஒரு துர்சொப்பனம் பார்த்த
உணர்வு வரும். அவரது அம்மா அப்பாவும் பார்க்க காரை உதிர்ந்த சுவர் போல
இருப்பார்கள். கேட்ரினா கேயிப் இவர்களிடையே நின்றால் வேறு குடும்பத்து பெண் போல்
தெரிவார். நமது பொருளாதாரம் கேட்ரினா போல. அப்பா அம்மாவுக்கு பா.ஜ.கவையும்
சகோதரிகளுக்கு காங்கிரஸையும் ஒப்பிட்டு கொள்ளுங்கள். நமது பொருளாதாரத்தின்
ஆரோக்கியமும் வளர்ச்சியும் நோய்மையும் வீழ்ச்சியும் முழுக்க ஒரு சில நபர்கள்
சம்மந்தப்பட்டது அல்ல.
குஜராத் செழிப்பான வணிகர்களின் மாநிலம்.
அங்கே மோடி அவர்களுக்கு ஏற்ற முதல்வராக இருந்தார். அதாவது சச்சின், திராவிட்,
லஷ்மண், சேவாக் கொண்ட அணியை தோனி தலைமை தாங்கியது போல். அவர் ஒரு சிறப்பான
முதல்வர் என்பதை விட பொருத்தமான முதல்வராக இருந்தார். ஏற்கனவே புஷ்டியாக இருந்த
மாநிலத்தை இன்னும் ஒரு சுற்று உப்ப வைத்தார். ஆனால் இந்தியா எனும் பெரும்
தேசத்தின் தேவைகள் வேறுபட்டவை. சில கோப்புகளில் கையெழுத்திட்டு தயக்கமில்லாமல்
நடைமுறைப்படுத்தினால் சட்டென ஜுரம் நீங்கி இந்த தேசம் எழுந்து விடப் போவதில்லை.
அதனால் மோடி ஆட்சியின் முதல் ஆறுமாதங்கள் அவருக்கு சோதனையாக இருக்கும். அவர் ஒரு
ஸ்டண்ட் மாஸ்டர். கேஜ்ரிவாலைப் போல. ஒரே வித்தியாசம் எதையாவது செய்து விட்டு
ஸ்டண்ட் அடிப்பார். அதனால் முதல் ஆறு மாதங்கள் தனது அறிக்கைகள் பேச்சுகள்
பார்வையிடல்கள் மூலம் வானில் புள்ளினங்களை பறந்தெழ செய்வார். ஆனால் அந்த பரபரப்பு
அடங்கியதும் பெட்ரோலிய பொருட்களின் விலையுயர்வுடன் சம்மந்தப்பட்ட பல கேள்விகள்
எழும். நாம் எதிர்பார்த்தது போல் மோடி வந்ததும் பொருட்களின் விலை குறையவில்லையே,
சம்பளம் உயரவில்லையே என யோசிக்க ஆரம்பிப்போம்.
இதற்கு அடுத்த ஆறுமாதங்கள் தாம்
நாம் பொருளாதாரத்தின் கிள்ளலை இன்னும் காரமாய் உணர ஆரம்பிப்போம். அப்போது சர்வதேச
அளவில் மந்தநிலை சரியாகி இந்தியாவிலும் கணிசமான பன்னாட்டு முதலீடுகள் வந்திறங்கி
நிலைமை அதுபாட்டுக்கு சீரானால் புது அரசாங்கத்துக்கு நல்லது. அல்லாவிட்டால்
கூச்சல்களும் ஓலங்களும் மீண்டும் எழும். அதாவது 2004இல் இந்திய பொருளாதாரம்
மதமதவென இருந்த போது பா.ஜ.க ஆட்சியை இழந்தது. இப்போது சொதசொதவென சேற்றில்
கிடக்கும் போது ஆட்சியை பிடிக்கிறது. இது ஒரு துரதிஷ்டம் தான்.
அடுத்த முக்கிய பிரச்சனை தேச பாதுகாப்பு. துரதிஷ்டவசமாக,
தேச பாதுகாப்பை ஒரு ஒழுக்கம், கண்டிப்பு சார்ந்த பிரச்சனையாக மட்டுமே நாம்
பார்க்கிறோம். அப்படி பார்க்கிறவர்கள் மதசார்பின்மையை ஒரு மென்மை போக்காக
காண்கிறார்கள். மதசார்பின்மையை கோரும் காங்கிரசார் இஸ்லாமியர்களிடம் தாராளமாக
நடந்து கொள்கிறார்கள் என்பது வலதுசாரிகளின் குற்றச்சாட்டு. இதனால் தீவிரவாதம்
வளர்ந்து, பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாய் கூறுகிறார்கள். POTA போன்ற
ஒடுக்குமுறை சட்டங்களை காங்கிரஸ் நீக்கியதை பல பா.ஜ.க ஆதரவாளர்கள் தீவிரவாத
தூண்டுதல் நடவடிக்கையாக பார்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த
இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொடுமைப்படுத்துவதால் தீவிரவாதம்
குறைவதில்லை. தீவிரவாதம் சர்வதேச அரசியல் சம்மந்தப்பட்ட பிரச்சனை. பாகிஸ்தானுடன்
நல்லுறவு, அரசியல் நல்லிணக்கம், வணிக தொடர்புகள் இருந்தால் இந்தியாவில் தாக்குதல்கள்
நடப்பதை ஓரளவு குறைக்கலாம்.
அதனால் தான் எப்போதெல்லாம் பாகிஸ்தானில்
நிலையான, வலுவான ஜனநாயக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாதம் வலுவிழக்கும். ஆனால்
இரு நாட்டு அரசியல் தலைவர்களும் சந்திக்க போவதாய் சொன்னால் உடனே சில இடங்களில்
குண்டு வெடிக்கும். அது போல் காஷ்மீரில் மோடி நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்த
சென்றால் அதற்கு சில நாட்களுக்கு முன் (மன்மோகனுக்கு நடந்தது போல்)
குண்டுவெடிக்கும். இவை ஒரு பரிபாஷை. ஒரு குறியீட்டு உரையாடல். கணிசமான
குண்டுவெடிப்புகள் சர்வதேச அரசியல் விளையாட்டில் நகர்த்தபடும் வெடிமருந்து
நிரம்பிய காய்கள். தீவிரவாதம் என்பது உள்ளூர் குண்டர்கள், தாதாக்களின் பிரச்சனை
அல்ல மோடி போலீஸ் கமிஷ்னராக ஜீப்பில் வந்திறங்கியதும் காணாமல் போவதற்கு.
ஒழுக்கமும் கண்டிப்பும் தீவிரவாதமும் இருவேறு முனைகள். உளவுத்துறையை
வலுப்படுத்துவது மட்டுமே ஒரு அரசால் செய்ய முடிந்த ஒன்று. ஆனால் இந்தியா போன்ற ஒரு
நாட்டில் ஒரு பையில் வெடிகுண்டை எடுத்து போய் ரயில்நிலையத்தில் வைப்பது எந்த
சாமான்யனாலும் செய்யக் கூடிய காரியம். பிற குற்றங்களுக்கும் தீவிரவாத
தாக்குதல்களுக்கும் உள்ள வித்தியாசம் பின்னதில் குற்ற நோக்கமும் பயனும் தேச எல்லைகளுக்கு
அப்பால் உள்ளது. கண்டிப்பான ஒழுக்க அரசியல் தீவிரவாத்த்தை மட்டுப்படுத்தும் என்கிற
எண்ணம் அமெரிக்காவின் தீவிரவாத கட்டுப்பாடு நடவடிக்கைகளை இங்கே கொண்டு வர முடியும்
என அசட்டுத்தனமாய் நம்புவதனால் தான் ஏற்படுகிறது. நமது பூகோள நிலை, எல்லை அருகாமை,
மக்கள் தொகை ஆகிய பிரச்சனை அமெரிக்காவுக்கு இல்லை.
ஆக மோடி ஆட்சியிலும் குண்டுகள் வெடிக்கும்.
இதற்கு நல்ல உதாரணம் முந்தைய பா.ஜ.க ஆட்சியின் போதான தாக்குதல்கள். ஒப்பிட்டு
பார்த்தால் பா.ஜ.கவின் ஐந்து வருடங்களிலும் காங்கிரஸின் 10 வருட ஆட்சியிலும்
ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையில் தான் ஆட்கள் தீவிரவாத தாக்குதல்களில்
கொல்லப்பட்டிருக்கிறார்கள் (சுமார் 200 பேர்கள்; ராகுல் காந்தியின் 22,000
எண்ணிக்கை மிகைப்படுத்தல் தான்). இன்னொரு குறிப்பிடத்தக்க விசயம் பா.ஜ.க ஆட்சியின்
போது தான் மிக முக்கியமான இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது: 2000இல்
செங்கோட்டை தாக்குதல், 2001இல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தாக்குதல், இந்திய பாராளுமன்ற
தாக்குதல் மற்றும் 2003இல் மும்பையில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு. தேச
பாதுகாப்பை முக்கிய கொள்கையாக பா.ஜ.க முன்வைப்பதால் நிகழப் போகிற தீவிரவாத
தாக்குதல்கள் மோடிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறும். அவரது பிம்பம் வெகுவாக
களங்கப்படும்.
இந்த ஆட்சியின் இன்னொரு அச்சம் மதக்கலவரம். மோடி ஜெயித்த
உடனே பங்களூரில் சில ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் ஒரு மசூதிக்குள் நுழைந்து
தாக்கினார்கள். இது போல் தாக்குதல்களும், கலவரங்களும் பா.ஜ.க வலுவாக இல்லாத
மாநிலங்களில் தூண்டி விடப்படுமா என ஒரு கவலை உள்ளது. ஏனென்றால் போன பா.ஜ.க
ஆட்சியில் இது நடந்தது. மதக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தாமல் தன் பொருளாதார
சாதனைகளை கொண்டு கட்சியை வளர்க்க அவர் முனைந்தால் அதுவே ஒரு தனி சாதனையாக
இருக்கும். ஆனால் இம்முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க அல்ல அந்த முகமூடியில்
ஆர்.எஸ்.எஸ் தான். அதனால் காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 377யை நீக்குதல், பொது
சிவில் சட்டம் ஆகிய அழுத்தங்களை அது அரசுக்கு கொடுத்தபடி இருக்கும்.
அடுத்தது ஊழல். சிலர் சொல்லுவது போல் மோடி ஊழல் கறையற்ற
பரிசுத்தமானவராகவே இருக்கட்டும். அப்போதும் கூட பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளை இந்த
ஆட்சி சந்திக்க போகிறது. ஒரு மாநில ஆட்சியில் மந்திரி சபை ஊழலை கட்டுப்படுத்துவது
சுலபம். ஆனால் மைய ஆட்சியில் அவ்வாறு எளிதாக இருக்காது. மோடிக்கு கடும்
கட்டுப்பாடு தன் மந்திரிகளின் மீது இருந்தாலும் கூட. ஏனென்றால் ஊழல் என்பது
முழுக்க மந்திரிகளின் ஒழுக்கம் சம்மந்தப்பட்டதும் இல்லை. போன பா.ஜ.க ஆட்சியிலும் 2G, நிலக்கரி போன்ற (ஆனால்
கொஞ்சம் மலிவான) ஊழல்கள். நடந்தன. அப்போதைய பா.ஜ.க தலைவர் சூட்கேஸ் வாங்கிய
காட்சிகள் நினைவிருக்கும். அது போல் பிரபலமானது சவப்பெட்டி ஊழல். ஆனால் கவனிக்க
வேண்டிய விசயம் “கமிஷன்” வாங்கும் பாணி ஊழல் இரு ஆட்சிக்கும் பொதுவானது என்பது.
இம்முறை பா.ஜ.க மிக ஆவேசமாக பொதுத்துறையை தனியார்மயமாக்கப் போகிறது என்கிறார்கள்.
அதாவது கொஞ்சம் கொஞ்சமாய் பிய்த்து விற்கப் போகிறார்கள். காங்கிரசும் இதை செய்தது.
மோடி துரிதப்படுத்தப் போகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் ஓடுகின்றன
என அரசுகளால் பொதுவாக இதை நியாயப்படுத்தும். ஆனால் உண்மைக்காரணம் விற்பனையின் போது
அரசின் முகவர்களுக்கு ஆயிரமாயிரம் கோடி லாபம் வரப் போகிறது என்பது. முந்தைய பா.ஜ.க
அரசு இந்திய சுற்றுலா கார்ப்பரேஷனின் 19 ஓட்டல்களை சல்லிசாய் விற்று 2G பாணியில் ஊழல் செய்தது. அது போல் 6000 கோடி மதிப்புள்ள BALCO நிறுவனத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வெறும் 551 கோடிக்கு விற்றது.
இப்படி செய்யப்படும் ஊழல் பணத்தை பங்காரு லஷ்மண் பாணியில் சூட்கேஸில் ஒரு மந்திரி
வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமுள்ள முதலாளிகள் கணிசமான
லாபத்தை அடைவார்கள். அது மறைமுகமாய் கட்சிக்கார்ர்களுக்கு செல்லும். அரசு உடைமையை
தனியாருக்கு முதலில் சல்லிசாய் விற்று அதனை அந்த தனியார் நபர் பின்னர் இன்னொரு
நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்கிற ஊழல் முறையை ராபர்ட் வத்ரா பின்பற்றினார் என
அறிவோம். இதே பாணியில் தான் 2002இல் அரசுக்கு சொந்தமான செண்டோர் ஓட்டலை
ஆர்.எஸ்.எஸ் ஆதரவு முதலாளியான பத்ரா வாங்கி விற்று 149 கோடி லாபம் பார்த்தார்.
சமீபத்தில் குஜராத்தில் மோடி டாட்டாவுக்கு இது போல் மலிவு விலையில் நிலங்களை
கொடுத்து அரசுக்கு நஷ்டமேற்படுத்தியது சர்ச்சையானது. அடுத்த இரண்டு வருடங்களில்
பொதுத்துறையை தனியார் மயமாக்கும் பெயரில் பல 2G பாணி ஊழல்கள்
கட்டவிழ இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த ஒரு ஒழுக்கமான கராறான பிரதமர் மட்டும்
போதாது – ஒட்டுமொத்த கட்சியின் கட்டமைப்பும் பரிசுத்தமாகவோ அல்லது பிரதமரின்
சாட்டைக்கு ஒடுங்குவதாகவோ இருக்க வேண்டும். இது மிக மிக சிக்கலானது. பா.ஜ.கவின்
இதுவரையிலான செயல்பாட்டு பாணியை பார்க்கையில் அது வேறு பெயரில் வேறு முகங்களுனான
காங்கிரசாய் இருக்க சாத்தியங்கள் உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள தீவிரவாத
தாக்குதல்கள், ஊழல் பட்டியலை பார்த்தால் காங்கிரஸ், பா.ஜ.க என்பவை வெறும் பெயரளவிலான
வேறுபாடுகள் மட்டுமே விளங்கும். மோடி இருக்கிறாரே என சிலர் கேட்கலாம். ஆனால்
குஜராத்தில் மோடி மட்டுமே ஆண்டார், ஆனால் இந்தியாவை ஆளப்போவது அவர் மட்டுமல்ல, பா.ஜ.க
எனும் பெருங்கட்சியும் அதற்கு நிதியளித்த கார்ப்பரேட்டுகளும் தாம் ஆளப் போகின்றன.
ஆக, அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரம், தீவிரவாதம்
மற்றும் ஊழல் ஆகியவை மீண்டும் இந்த ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக போகின்றன.
பொருளாதாரத்துக்கு முதலுதவி கொடுக்க மட்டுமே மோடியால்
முடியும் என முதலில் பார்த்தோம். மற்றபடி அது எப்படியான ராட்சச மிருகமாக வளரப்
போகிறது என்பது யார் கையிலும் இல்லை. தனியார்மயமாக்கலை எடுப்போம். அதற்கு தொழிற்
சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய தொழிற் சங்கம்
ஆர்.எஸ்.எஸ்ஸினுடையது – பாரதிய மஸ்தூர் சங்.
சமையல் எரிவாயுவின் விலையை காங்கிரஸ் உயர்த்தாமல் இதுவரை
தாமதித்து வந்த்து. ஆனால் மோடி வந்த சில மாதங்களில் எரிவாயு விலை கடுமையாய் உயரப்
போகிறது. எல் நினோ கணிப்புப்படி ஜூன் – செப்டம்பரில் மழை குறைவாக இருக்கப் போவதால்
விளைச்சல் குறைந்து ஏற்கனவே ஷீணித்துள்ள பொருளாதாரத்தை இது மூச்சுப்பிடிக்க வைக்க
போகிறது. இன்னொரு பிரதான பொருளாதார நெருக்கடி வங்கிகளின் கடன் நிலை. திரும்பப் பெற
முடியாத பெரும் அளவிலான கடன்களால் வங்கிகள் மூச்சுத் திணறுகின்றன. இது ஏதோ
விவசாயிகள் வாங்கிய கடன்கள் அல்ல. கணிசமானவை கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி
அதிகாரிகளுக்கு லஞ்சம் பெற்று வாங்கி விழுங்கிய கடன்கள். இந்த வங்கிகளின் நிலையை
சீர்ப்படுத்தாமல் மீண்டும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான முதலீடுகளை செய்வது
அசாத்தியம். குஜராத் ஏற்கனவே முதலீடுகள் கொண்ட மாநிலம். அங்கே முதலீடு செய்பவர்களை
ஊக்குவித்தால் போதும். ஆனால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாய் ஒரு முதலீட்டு
பற்றாக்குறை உள்ளது.
ஏற்கனவே பணவீக்கம் உள்ள நிலையில் அரசால் உள்கட்டமைப்பு
பணிகளில் அதிக பணம் செலவிட இயலாது. கட்டமைப்பு வளர்ச்சி இல்லாமல் அந்நிய
முதலீடுகள் கிடைக்காது. டாட்டா நானோ தொழிற்சாலையை குஜராத்தில் நிறுவியது போல் இது
எளிதல்ல. இன்னொரு பக்கம் பணவீக்கமும், GDP
வளர்ச்சி குறைவும் காரணமாய் பெட்ரோல், நீர், உணவு என பல
பொருட்களுக்கு அரசு இதுவரை அளித்து வருகிற மானியங்களை மோடி குறைக்க அல்லது நிறுத்த
வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கோருகிறார்கள். ஆனால் மானியங்களை நிறுத்தினால்
அன்றாட பொருட்களின் விலை கடுமையாக உயரும். மோடியை வளர்ச்சியின் நாயகனாக
கொண்டாடியவர்கள் ஒரேயடியாய் தூற்ற துவங்குவார்கள். நம் மக்களுக்கு “வளர்ச்சி”
என்றால் விலைவாசி என்று பொருள். பத்து வருடங்கள் பொறுங்கள் குஜராத் போல் ஆக்கி
காட்டுகிறேன், அதுவரை வயிற்றை கட்டிக் கொண்டிருங்கள் என்றால் அதற்கு யாரும் தயாராக
மாட்டார்கள்.
இதுவரையிலான நமது பொருளாதார மந்தநிலைக்கு மன்மோகன் சிங்கின்
மந்தநிலை அல்ல பிரதான காரணம். ஊழலில் மூழ்கிய கூட்டணிக் கட்சிகளும்
தனிப்பெரும்பான்மை காங்கிரசுக்கு இல்லாததும் கூட அல்ல. இவை மேலோட்டமான காரணங்கள். பொருளாதாரம்
நல்ல நிலையில் இருந்த போது மன்மோகன் தன் முதல் ஆட்சி காலத்தில் பல சமூக நல
திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். மானியங்களை தந்தார். மக்கள் அவரை
பாராட்டினார்கள். ஆனால் ரெண்டாம் ஆட்சி காலத்தில் பொருளாதாரம் படுத்து விட அவரால்
நலத்திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் முன்பு போல் செலவழிக்க முடியவில்லை.
செலவழிக்காமல் இருந்தால் விலைவாசி உயர்ந்து மக்கள் அதிருப்தி அடைவார்கள்.
செலவழித்தாலோ பணவீக்கம் இன்னும் அதிகமாகும். பணவீக்கத்தை குறைக்க புது முதலீடுகளை ஊக்குவிக்க
பணம் வேண்டும். அது இல்லாத நிலையில் அந்நிய முதலீடுகளை ஓட்டம் பிடித்தன. எப்படி
மன்மோகனின் கையில் நிற்காமல் பொருளாதாரம் வழுவிச் சென்றபடி இருந்ததோ மோடிக்கும்
அதுவே நிகழப் போகிறது.
அதாவது பொருளாதாரம் நோய் வாய்ப்பட்டு படுத்தால் அதன் நிலை
வயதான நோயாளியை போன்றது. மருத்துவரால் அறுவை சிகிச்சையோ தீவிரமான பிற சிகிச்சைகளோ
செய்ய முடியாது. உயிருடன் வைத்திருக்கலாம். மன்மோகனின் அரசு கடந்து ஐந்து
வருடங்களில் அதைத் தான் செய்தது. இப்போது நீங்கள் ஆஸ்பத்திரியை மாற்றி
இருக்கிறீர்கள். ஆனால் நோயாளி அதே தான்.
அடுத்த தேர்தலின் போது ரெண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இருந்த அரோக்கியமான
நிலைக்கு பொருளாதாரம் தன்பாட்டுக்கு திரும்பலாம். காத்திருக்கும் நோயாளியின்
உறவினர்களிடம் மோடி கண்களில் வியப்புடன், கைகளை வானை நோக்கி விரித்து “God is great” என கூறலாம்.
அல்லது நோயாளி செத்துப் போகும் நிலையில் உறவினர்கள் அவரை புரட்டி போட்டு
அடிப்பதற்கு மருத்துவமனையை சூழ்ந்தும் கொள்ளலாம். மதிலில் ஏறி குதித்து அவர்
குஜராத்துக்கு சென்று விடலாம்.
நன்றி: உயிர்மை, ஜூன் 2014
