Skip to main content

அந்நிய நிலத்தில் அந்நியமாய் இருந்தேன் - ரீத்தா டோவ் (தமிழில் ஆர்.அபிலாஷ்)



வாழ்வின் வசியம் அதிஅற்புதமானது என்பதாலே அதை முறியடிக்க அனைத்தும் முயன்றபடி இருக்கின்றன – எமிலி டிக்கின்ஸன்


அது பேருவகை அல்ல. சாதாரண வாழ்க்கையை தவிர்த்து எது தான் பேருவகை சொல்லுங்கள்? மெல்ல தட்டி ஓசைகள் எழுப்பியபடி
மணிக்கணக்காய் செலவழிப்பாள், நாள் முழுதும் கழித்தாள்
தொட்டும் நுகர்ந்தும் சுவைத்தும்...

மகிழ்ச்சியில் சிறைவைக்கப்பட்ட ஒரு உலகில் அதி அற்புதமான வீட்டுவேலைகள்
ஆனால் எப்போதும் அவை அநேகமாய் ஒன்று போலவே தோன்றின
அந்த மகிழ்ச்சியும், இலக்கற்ற அங்கேயே இருத்தலும்.


ஆகையால் அவள் சற்று நேரம் அலைந்தாள், புதரில் இருந்து தோட்டத்துக்கு நிழலுக்கு,
ஒரு குளத்தின் அமைடியற்ற கண்ணாடியில் தன்னை நோக்க தாமதிப்பாள்.
அவர் பிரபஞ்சத்தை பட்டியலிட சென்றிருப்பார், ஒருவேளை,
யாரோ இன்னொருவரின் பெருங்குழப்பத்தை தன்னால் சீராய் தொகுக்க முடியும் என்று பாசாங்கு செய்தபடி.

அப்போது தான் அம்மரத்தை கண்டுபிடித்தாள்
அப்படி ஒரு பேச்சற்ற பொக்கிஷத்தை சுமந்த
கரணைகள் கொண்ட அதன் கரிய கிளைகளை,
சொல்லாமலே அவளுக்கு தெரியும்
அது தடைசெய்யப்பட்டது என. அது
உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல –
இவ்வளவு உன்மத்தமான கச்சிதத்திற்கு
யாரால் உரிமை கோர முடியும்?

அவள் கபாலத்துக்குள் எந்த ஓசையும் எழவில்லை
அந்த இலைகளுக்குள் ஒளிந்திருந்து எந்த கூர்மதியும் கிசுகிசுக்கவில்லை – வெறுமனே ஒரு வலி தான், அது வளர்ந்த போது
அவள் இழந்து விட்டிருந்தாள் எல்லாவற்றையும்
ஆசையைத் தவிர, தன் நீட்டிய உள்ளங்கையில் வெதுவெதுப்பாய் இருந்த
அந்த சிவப்பு பாரத்தைத் தவிர

-     

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...