Skip to main content

டிவில்லியர்ஸ்: என்னடா பண்றது உன்னை?




தோனி, கெய்ல், மேக்ஸ்வெல் போன்று பல ராட்சச மட்டையாளர்கள் இருந்தாலும் அவர்களின் வாணவேடிக்கை ஷாட்கள் ஒருவழி டிராபிக் தான். தோனிக்கு பந்து நேராகவோ காலிலோ விழ வேண்டும். கெய்லுக்குக்கும் கிட்டத்தட்ட அது தான் ஏரியா. மேக்ஸ்வெலுக்கும் கால்பக்கம் அடிக்க பிடிக்கும். அவருக்கு வாரியடிக்கும் விதம் பந்தை கொஞ்சம் வைடாக போட்டால் இன்னும் இஷ்டம். தூக்கி அடிக்கையில் மட்டையின் அந்த வளைவு அவருக்கு முக்கியம். இவர்களை பலவீனமான இடங்களில் பந்து வீசி தடுக்க முடியும். ஆனால் ஆப், நேரே, உயரப்பந்து, கால் திசை என எங்கும் சமநிலை இழக்காமல் சிக்ஸ் அடிக்கக் கூடியவர் எ.பி.டிவில்லியர்ஸ் தான். நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தை அவர் தன்னந்தனியாக வென்றளித்தார். மகாபாரதத்தில் அர்ஜுன்ன் அம்பு ஒன்று பத்தாகி, பத்து நூறாகி ஆயிரமாகி பொழிவது போல் இருக்கிறது ஏ.பி அடிக்கும் சிக்ஸர்கள். 360 கோணத்தில் அனாயசமாய் சிக்ஸர்கள் விளாசக் கூடியவர் இவர் மட்டும் தான்.
இது எப்படி சாத்தியமாகிறது? முக்கிய காரணம் தோனி, கெய்ல் போன்று டிவில்லியர்ஸுக்கு ஒரு நிலைத்த ஸ்டான்ஸ் இல்லை. ஒரு பனிச்சறுக்கு வீரரை போல் நிற்கிறார். கையில் மட்டையும் இளகலாக லேசாக பற்றியிருக்கிறார். மைய குச்சியை காட்டியபடி விலகி நிற்கிறார். கால்பக்கம் விழுந்தால் மேக்ஸ்வெல் பாணியை குறுக்கே கோரி அடிக்கிறார். நேராய் வந்தால் தோனி பாணியில் அடிக்கிறார். அதே பந்து ஆப் குச்சியில் விழுந்தால் மிட் ஆப் அல்லது கவருக்கு மீதாக சிக்ஸ் அடிக்கவும் முடிகிறது. இப்படித் தான் அடிக்கப் போகிறேன் என திட்டமிடாத திடமற்ற ஸ்டான்ஸும் அபாரமான சமநிலையும் தான் டிவில்லியர்ஸை இந்த அதிசயங்களை செய்ய உதவுகிறது. முன்பு இதே போல் ஒரு பந்தை இறுதி நொடியில் எந்த திசையிலும் மாற்றி அடிக்கக் கூடியவராக சச்சின் இருந்தார். இந்த பாணி மட்டையாட்டத்தின் உச்சம் அவர் நேற்று ஸ்டெயினின் படுவேக பந்தை கொஞ்சம் ஆப் பக்கம் விலகி முட்டியிட்டு ஸ்வீப் சிக்ஸர் அடித்தது தான். அதையும் அவர் திட்டமிடாமல் தான் நின்றபடி தான் நிகழ்த்தினார். சட்டென காலை வழுக்கி திரும்பி லகுவாக பற்றியிருந்த மட்டையின் பிடியை மாற்றி அடித்து விட்டார்.
டிவில்லியர்ஸுக்கு ஒரு சின்ன பலவீனம் உண்டு. ரவுண்ட் த விக்கெட், அதாவது நடுவருக்கு வலப்பக்கமாய், வந்து கால் குச்சியில் இருந்து நடுக் குச்சிக்கு போகிற மாதிரி வீசிப் பார்க்கலாம். இது அவரது இளகலான ஸ்டான்ஸை அனுமதிப்பாது. பொதுவாக நான் பார்த்தது வரை இடதுகை வீச்சாளர்களும் கால் சுழல் வீச்சாளர்களும் அவரிடம் நன்றாகவே வீசி வந்துள்ளார்கள். ஹஷீம் ஆம்லாவைப் போல் கவர் மற்றும் கல்லி பகுதிகளில் பந்தை தூக்கி அடிக்கும் ஒரு சின்ன பலவீனமும் அவருக்கு உண்டு. ஆனால் ஆம்லாவைப் போல் கால்பக்கம் போட்டால் தன் சுழலும் மணிக்கட்டை பயன்படுத்தி சொடுக்கி அடிக்கும் திறன் டிவில்லியர்ஸுக்கு இல்லை.
யாரும் இந்த உத்தியை அவருக்கு எதிராக இன்னும் பயன்படுத்தி பார்க்கவில்லை. எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு எங்கு போட்டாலும் சிக்ஸர் அடிப்பார், யார்க்கரே ஒரே உபயம் எனும் எண்ணம் தான் பந்து வீச்சாளர்களுக்கு. யாரேனும் வித்தியாசமாய் முயல்வார்களா எனப் பார்ப்போம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...