Skip to main content

நாயைத் துரத்தும் முயல்


நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை

முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது.
மனைவி கறிக்கடையில் வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி விட்டது.

 நாய் எங்கு போனாலும் கூடவே போகும். நக்கிக் கொடுக்கும். மூக்கை பின்புறத்தை முகரும். நாய்க்கும் அபார பொறுமை. பின்னர் ஒருமுறை நாய்க்கு பிஸ்கட் கொடுத்தேன். முயல் போய் அதன் வாயில் இருந்து பிஸ்கட்டை பறித்தது. நாய்க்கு கடும் கோபம். ஆனாலும் கடிப்பது போல் பாவனை செய்து துரத்தி விட்டது. பிறகு அது நாயை தூங்க விடாமல் செய்தது. நாய் தூங்கினால் அங்கு போய் மூக்கை நுகரும். நாய் எழுந்து வேறிடம் போகும். அங்கு போய் தொந்தரவு பண்ணும். நாலைந்து முறை தொடர்ந்து நடந்த பின் நாய் ரொம்ப எரிச்சலாகி உறும ஆரம்பித்தது. ஆனாலும் கடிக்கவில்லை. நாங்கள் தான் அதன் அவஸ்தை பொறுக்காமல் நாயைத் தூக்கி சோபாவில் தூங்க வைத்தோம்.
இந்த முயலுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் என நாய்க்கு புரிந்து விட்டது. இப்போதெல்லாம் முன்பு போல் அது முயலிடம் குழைவதில்லை. கௌரவமாகத் தான் இருக்கிறது. முயலோ விடுவதில்லை. நாயின் கால்களுக்கிடையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் காலை எழுந்ததும் நாய் என்னை வரவேற்கும் விதமாக தன் கீக்கீ பொம்மையை எடுத்து வாயால் அழுத்தி ஆரவாரமாய் சத்தம் எழுப்பும். இன்று நாய் அப்படி செய்து முடித்ததும் முயல் வெளியே வந்து பார்த்தது. பிறகு ஓடிப் போய் கீக்கீ பொம்மை பக்கமாய் நின்று என்ன செய்வது என முழித்தது. நாய் தன் சாப்பாட்டு பக்கமாய் பூனைகள் போனால் அப்படி ஆவேசம் வந்தது போல் துரத்தும். ஆனால் முயலோ அசட்டையாய் நாய் சாப்பாட்டை உட்கார்ந்து மெல்லுகிறது. நாயும் போகட்டும் போ என அமைதியாய் பார்க்கிறது.
ஏற்கனவே இரண்டு பூனைகள் உண்டு. அவை முயலை ஜாதிபிரஷ்டம் செய்து விட்டன. பக்கத்தில் போனால் சீறுகின்றன. இதைப் பார்த்தால் வேறு அறைக்குள் சென்று விடுகின்றன. இதனால் முயலும் நாயைத் தான் எல்லாவற்றுக்கும் நம்பி இருக்கிறது. நாய் நடக்கும் போது கூடவே சென்று ஏதோ புற்தரையில் இரை தேடுவது போல் அது நடப்பது காண தாய்க்கோழியுடன் நடக்கும் கோழிக்குஞ்சைப் போல் உள்ளது.
நாய் முயலை வேட்டையாடும் என யார் சொன்னது? இருக்கிற இடம் பொறுத்து தலைகீழாகவும் ஆகும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...