Skip to main content

எழுத்தாளனும் வாசகனும்: தெய்வமும் ஊமையும்



நண்பர் செந்தில்குமாரை நேற்று முதன்முறை சந்தித்தேன். நான் எழுதிய கட்டுரை ஒன்று குறித்த தன் கேள்விகளை ஒரு நோட்டுபுத்தகத்தில் குறித்து கையுடன் கொண்டு வந்திருந்தார். நானும் பொதுவாக எழுத்தாளர்களை ஒரு தயாரிப்புடன் தான் சந்திக்க செல்வேன். வரிசையாக கேள்விகள் கேட்பேன்.

கல்லூரிக் காலத்தில் ஜெயமோகனை கிட்டத்தட்ட அவரது அலுவலகத்தில் தினமும் சந்தித்து நான்கு ஐந்து கேள்விகளாவது கேட்பேன். ஒரு நாள் நான் அவருக்காக காத்திருக்க நேர்ந்து மாலை ஆகிவிட்டது. அவர் கிளம்புகிற நேரம் பார்த்து அடைமழை பிடித்தது. அதனால் அவரும் நீண்ட நேரம் அலுவலகத்தில் தங்க நேர்ந்தது. அன்று தொன்மங்கள் பற்றி அருமையாக பேசினார். மழையின் பின்புலத்தில் பிடித்தமான உரையாடலில் ஈடுபடுவது ஒரு கொடுப்பினை. பெங்களூரில் தமிழவனை சந்தித்த போதும் சரி எஸ்.ராவை அவர் வீட்டில் பார்த்த போதும் நான் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன். இத்தகைய பேட்டி சந்திப்புகள் அந்தரங்கமான லகுவான உரையாடலை அனுமதிக்காது. ஆனால் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
சில எழுத்தாளர்களுக்கு அறிவார்ந்த திட்டமிட்ட உரையாடல் ஒவ்வாது. மனுஷ்யபுத்திரன் அப்படியானவர், அவர் எதேச்சையாய் தன்போக்கில் மலரும் உரையாடல்களையே விரும்புவார். அது கசப்பாக, பொருமலாக, நகைச்சுவையாக, அறிவார்ந்ததாக, கவித்துவமாக அன்றன்றைக்கு தோன்றுகிற மனோநிலைக்கு ஏற்ப இருக்கும். ஒரு கட்டத்தில் நான் மனுஷிடம் தயாரிப்புடன் பேசுவதை நிறுத்தி விட்டேன். சிலவேளை ரொம்ப நேரம் பேசிக் கொள்ளாமல் இருப்போம். நான் பாட்டுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். சட்டென்று பேச்சு மலர்ந்து தீவிரமாகவே அரட்டையாகவோ கிளைபிரியும். ஷங்கரராமசுப்பிரமணியனின் கவிதையிலும் உரைநடையிலும் இல்லாத கூர்மையான அங்கதம் பேச்சில் இருக்கும். சீரியஸான முகத்தை வைத்துக் கொண்டு ஜாலியாக பேசுவார்.
நான் எழுத்தாளனை சந்திப்பதில்லை என கொள்கை வைத்திருக்கிறேன் எனக் கூறுபவரை பார்த்திருக்கிறேன். ஏதாவது கசப்பான அனுபவம் காரணமாக இருக்கலாம். சில எழுத்தாளர்களுக்கு வாசகனை எதிர்கொள்ள தெரிவதில்லை.
வாசகர்கள் தெய்வ தரிசனத்துக்காக எழுத்தாளனிடம் போவதில்லை. நட்புறவை நாடி வருகிறார்கள். நண்பரிடம் நடந்து கொள்வதைப் போலத் தான் வாசகரிடமும் பழக வேண்டும். அவர்களை பேச விட்டு கவனித்து அக்கறையும் மதிப்பும் அளிக்க வேண்டும். அப்படித் தான் நல்ல உறவுகள் வளர்கின்றன. சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு தோழி வாய்த்தார். வாசகராக மின்னஞ்சலில் அறிமுகமானார். இரண்டாவது அஞ்சலில் “நான் உங்களை விட அதிக வயதானவள்” என்றார். விநோதமாக பட்டது. “சரி இருக்கட்டுமே” என்றேன். பின்னால் ஒருமுறை என்னிடம் “நீங்கள் என் வயதை சாதாரணமாக எடுத்துக் கொண்டதே மிக பிடித்திருந்தது” என்றார். இப்படி பல சமயங்களில் நட்பை நாடி வருபவர்களின் எதிர்பார்ப்புகளும் தயக்கங்களில் எளியதாக விநோதமாக கூட இருக்கும். இவர்களில் பல அற்புதமான நண்பர்கள் நமக்கு கிடைப்பார்கள்.
சாதாரணமாக ஒரு நண்பரிடம் செய்வது போல் வாசகனிடம் நலம் விசாரிப்பது, புன்னகையுடன் அன்பாக பேசுவது, கவனிப்பது இதையெல்லாம் செய்வதில் சில எழுத்தாளர்களுக்கு தயக்கம் உள்ளது. இதை ஒரு சமூக பண்பாட்டுக் குறை எனலாம். உதாரணமாக சில வருடங்களுக்கு முன் நான் சத்யம் தியேட்டரில் தியோடர் பாஸ்கரனை சந்தித்தேன். அக்காலத்தில் நான் உயிர்மையில் எழுத ஆரம்பித்திருக்கவில்லை. ஆனால் பாஸ்கரனின் எழுத்து மிகவும் பிடிக்கும். நான் அவரிடம் சென்று இதை சொன்னேன். அவர் என்னை பார்க்காதது போல் திரும்பி பக்கத்தில் நின்ற நண்பரிடம் பேச ஆரம்பித்தார். பின் என்னிடம் எதையும் சொல்லாமல் கிளம்பி விட்டார். இது எழுத்தாளனின் விநோத குணம் அல்ல. சில தனிநபர்களுக்கு உள்ள ஆளுமைக் குறைபாடு. சுஜாதா கூட புதியவர்களை சந்திப்பதில் கூச்சம் கொண்டவர் தான். இந்த கூச்சம் களைவதற்கென இன்றைய காலத்தில் கல்லூரி அளவில் கூட ஆளுமை பயிற்சிகள் அளிக்கிறார்கள்.
சில வாசகர்கள் மாறுபட்ட கருத்துக்களோடு வருவார்கள். உடனே நம் எழுத்தாளர்கள் அவர்களை உட்கார வைத்து வகுப்பெடுப்பார்கள். வாசகர் வெறுத்துப் போவார். ஒரு வாசகர் பாராட்டுவதோ விமர்சிப்பதோ எழுத்தாளனை தூக்கி வைக்கவோ கீழே போட்டு மிதிக்கவோ அல்ல. அதன் உத்தேசம் உறவை ஸ்தாபிப்பது தான். வாசகன் நான் உங்களுக்கு சரிக்கு சமம் என நிறுவ விரும்புகிறான். அப்போது தான் நட்பு சாத்தியப்படும். இந்த பாராட்டு அல்லது விமர்சனம் ஒரு முகமன் போல அல்லது “வானம் ரொம்ப மந்தாரமா இருக்கே, நல்ல மழை வரும் போல” என வானிலை அறிக்கையுடன் பேச்சை ஆரம்பிப்பது போல.
உரையாடலின் போது வாசகனுக்கு எதுவும் புதிதாக புரிய வைக்கும் அவசியமில்லை. தேவையானது அத்தனையும் அவன் பிரதியில் இருந்தே கற்றுக் கொள்கிறான். நல்ல உரையாடல் இரு நண்பர்கள் சேர்ந்து புது ஊருக்கு பயணம் போவது போல. அதில் பேச்சு அல்ல முக்கியம், புதிய விசயங்களை சேர்ந்து கண்டறியும் திகிலும் ஆச்சரியமும் தான்.
இதையெல்லாம் விட்டு விட்டு சிலர் யாராவது வாசகன் என வந்தால் வாயிலும் காதிலும் ஒரு 1000 வாலாவை சொருகி விட்டு தீக்குச்சி உரச துவங்கி விடுகிறார்கள். அல்லது தெய்வம் என்றாவது பேசியதா என்ற கணக்கில் பேசாமல் இருந்து விடுகிறார்கள். மனிதர்களிடம் பேசத் தெரியாதவர்கள் மனிதர்களைப் பற்றி, அதுவும் நன்றாகவே, எழுதுவது விசித்திரம் தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...