Skip to main content

இளவரசனின் கொலைக்கு நடவடிக்கை எடுப்பாரா ஜெயலலிதா?


இளவரசனின் பிணம் போடப்பட்டுள்ள நிலை, அங்கு வைத்திருக்கும் மதுபுட்டி போன்றவை இது நிச்சயம் ஒரு செட்டப் செய்யப்பட்ட தற்கொலை என காட்டி விடுகிறது. மேலும் அவர் இறந்த நேரத்தில் அவ்வழி எந்த ரயிலும் போகவில்லை. 


திவ்யாவின் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளும் இந்த பின்னணியில் பார்க்க கொஞ்சம் தெளிவாகின்றன. உயிர்மிரட்டல் தான் இத்தனைக்கும் பின் இருந்தது.
திவ்யா முதலில் தன் அம்மாவின் உயிர் குறித்து அஞ்சுவதாக தெரிவித்தார். ஆனால் டி.வி பேட்டிகளின் போது அவரது அம்மா ஒன்றும் ஆரோக்கியம் குன்றியதாக தெரியவில்லை. ஆக அம்மாவின் உடல்நிலை அல்ல பிரச்சனை. அவரது உயிரை பறிப்போம் எனவோ திவ்யாவின் குடும்பத்தையே அழிப்போம் எனவோ வன்னியர் சங்கத்தை சேர்ந்த குண்டர்கள் மிரட்டி இருக்கலாம் என அப்போதே ஒரு சந்தேகம் நிலவியது. ஒரு கட்டத்தில் திவ்யா தனக்கு இளவரசனுடன் வாழ ஆசை எனவும் அம்மாவின் சம்மதத்துக்காக காத்திருப்பதாகவும் சொன்னார். அடுத்து உடனே அதை மறுக்கும் பொருட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து “நான் இளவரசனை விரும்புவதாக வந்த தகவலினால் இன்று நான் ஆதரவின்றி தவிக்கும் நிலை வந்துள்ளது” என்றார். அவர் யார் ஆதரவை குறிப்பிடுகிறார்? வன்னியர் சங்க ஆதரவையா? நிச்சயம் தன் அம்மாவின் ஆதரவை அல்ல. முதலில் சொன்ன கருத்தை மறுத்து பேட்டி அளிக்கும் படி அவரை வற்புறுத்தியது யார்? நிச்சயம் இது குடும்ப தரப்பில் இருந்து தோன்றிய தூண்டுதலாக இருக்காது. மீடியா பிம்பம் பற்றி வன்னியர் சங்கம் போன்ற அமைப்புகள் தான் கவலைப்படும். ஆக அவர்களின் வற்புறுத்தல் தான் திவ்யாவை இப்படி பேச வைத்திருக்கிறது.
அடுத்து “இனி எம் அப்பாவின் நினைவுக்காக, அவரது மரணத்துக்கு பரிகாரம் தேடுவதற்காக கணவனிடம் இருந்து பிரிந்து வாழப் போகிறேன்” என்று ஒரு அபத்தமான கருத்தை தெரிவித்தார் திவ்யா. அப்பாவின் மரணத்துக்கு பரிகாரம் தேட அவர் சாதிப்பிரச்சனையை அல்லவா தீர்க்க வழி தேட வேண்டும். கணவனை பிரிந்தால் அப்பா திரும்ப வந்து விடுவாரா? எந்த திருமணமான பெண்ணும் இப்படி ஒரு காரணம் சொல்லி தனிமையில் வாழ உத்தேசிக்க மாட்டார். ஆக இதுவும் வன்னியர் சங்கத்தின் மூளைச்சலவை தான்.
இணையத்தில் இன்று திவ்யா தான் இளவரசனின் கொலைக்கு காரணம் என பல கொந்தளித்து பேசுகிறார்கள்? ஆனால் எனக்கு இது உண்மையல்ல என படுகிறது. வன்னியர் சங்கத்தினர் இளவரசனை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியிருக்கக் கூடும். அதனால் தான் தன்னால் இனி கணவன், தாயார் ஆகியோர் கொல்லப்பட வேண்டாம் என தீர்மானித்து அந்த பெண் விலகி இருக்க முடிவு செய்திருக்கக் கூடும். ஒரு அப்பாவிப் பெண் எப்படி ஒரு கொலைகார கும்பலின் சதி மிரட்டல் வலையில் மாட்டி தன் வாழ்வை பலி கொடுத்திருக்கிறது பாருங்கள்!
திவ்யா தன் கணவனை பிரிந்து வாழ்வதற்கு கூறிய காரணம் நியாயமானது அல்ல. திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை. அதற்கு ஒரு பொறுப்பு உள்ளது. (இங்கே இளவரசனுக்கு போதுமான வயது ஆக வில்லை என்பவர்களுக்கு நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் பதினைந்தில் இருந்து இருபது வயதுக்குள் மணம் புரிந்து கொடுக்கப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் பிரித்து வைக்கப் போகிறீர்களா?) திவ்யாவுக்கு தன் திருமணம் மீது ஒரு பாத்தியதை உள்ளது. அம்மாவுடன் வாழ விருப்பம் என திவ்யா தெரிவித்ததும் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொண்டு அவரை போக அனுமதித்தார்கள். இறக்கும் முன் ஒரு முறை தன் மனைவியிடம் பேசக் கூட இளவரசனை அனுமதிக்கவில்லை. நீதிபதிகளின் இந்த முடிவில் உள்ள அபத்தம் கண்கூடானது. ஒரு தம்பதி பிரிய ஒரு தகுந்த காரணம் வேண்டும். அம்மாவை மிஸ் பண்ணுகிறேன் என்பதெல்லாம் தகுந்த நியாயம் என்றால் அது ஆண்களுக்கும் பொருந்த வேண்டுமே! நாளை ஒரு ஆண் ஒரு பெண்ணை மணம் புரிந்து கர்ப்பமாக்கிய ஆறுமாதத்தில் எனக்கு என் பெற்றோருடன் தனியாக இருக்க விருப்பம் என மனைவியை கைவிட்டால் அதுவும் நியாயம் தான். அப்படிப் பார்த்தால் இந்த காரணம் சொல்லி ஒரு ஆண் வருடத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். இப்படியான அற்பமான காரணங்களுக்காக ஒரு பெண் கணவனை பிரிய சட்டம் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்ததால் தான் இன்று ஒரு உயிர் பலி வாங்கப்பட்டிருக்கிறது.

வடநாட்டில் இது போன்ற கௌரவக் கொலைகள் வாடிக்கை என அறிவோம். நம்மூரிலும் இது அரிது அல்ல. காதலுக்காக சொந்த பெண்ணையே கொன்று வீட்டுக்குள் புதைப்பது மதுரைப்பக்கம் சாதாரணமாக நடக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நம் கண் முன்னாலே ஒரு அமைப்பு திட்டம் இட்டு ஒரு காதல் திருமணத்தை முன்னிட்டு இரு கிராமங்களை அழித்து, திருமண ஜோடியை பிரித்து வைத்து, காலையில் அப்பெண்ணை எனக்கு கணவன் வேண்டாம் என பேட்டி கொடுக்க வைத்து மதியம் கணவனை கொன்று ரயில் தண்டவாளத்தில் போடுவது நடந்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு வன்னியர் சங்கத்தால் இதை செய்ய முடிகிறது என்றால் தம்மை தண்டிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தானே காரணம்.
இந்த கொலைக்காக வன்னியர் சங்கத்தை தடை செய்து கொலைகாரர்களை கைது செய்து அவர்களுக்கு வழி காட்டிய ராமதாஸையும் உள்ளே தள்ள வேண்டும். அரசியல் அனுகூலங்கள் கருதி ஜெயலலிதா தாமதித்தார் என்றால் இந்த அப்பாவி இளைஞனின் கொலையில் அவருக்கும் மறைமுக பங்கு உண்டு என அர்த்தம். கடவுளும் இளவரசனின் ஆன்மாவும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். ஜெயலலிதா கலைஞர், வைக்கோவை கைது செய்த தருணங்களில் அது ஒரு அரசியல் பழிவாங்கல் என நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ராமதாஸை கைது செய்து தூக்கில் போட்டால் கூட வழக்கமாக தூக்குத்தண்டனையை எதிர்க்கும் பலர் கூட அதை ஆதரிப்போம். அஜ்மல் கசாபை விட கொடூரமானவர் அவர்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...