Skip to main content

கல்லூரிக்கால அபத்தங்கள்


கல்லூரியில் படித்த காலம் வாழ்வின் சிறந்த பருவம். ஒவ்வொரு நாளையும் அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்ந்தேன். ஒரு வகுப்பு கூட எனக்கு சலிப்பாக இருந்ததில்லை. ஆனால் பரீட்சையை பொறுத்தமட்டில் படுமுட்டாளாக இருந்தேன்.

கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக புது சிந்தனைகளை எழுத வேண்டும் என நினைப்பேன். மற்ற மாணவர்களைப் போல மனப்பாடம் செய்தவற்றை தொகுத்தெழுத பிடிக்காது. ஒருமுறை ஒரு நீண்ட கட்டுரை ஒரே பக்கம் மட்டும் எழுதினேன். அதற்கு மேல் தேவையில்லை என்றொரு நினைப்பு. துறைத்தலைவர் எனக்கு மிக அதிகமாக மதிப்பெண் தந்து பாராட்டிப் போக சகமாணவர்கள் கொந்தளித்து விட்டார்கள். அவர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக மேற்கோள்களோடு எழுதி இருந்தார்கள்.
ஆனால் இன்னொரு பரீட்சையில் தலைகீழாக நடந்தது. திருத்தின ஆசிரியர் வேறு ஆள். அவர் வகுப்பில் நான் அடிக்கடி மறுத்து பேசு கடுப்பேற்றுவேன். பரீட்சையில் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பத்தி தான் எழுதினேன். அதற்கு மேல் எனக்கு மூட் இல்லை என்று கொடுத்து விட்டேன். அவர் நான் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்தி அப்படி எழுதியதாக நினைத்துக் கொண்டார். ஆசிரியர் என்னை வீட்டுக்கு அழைத்து கடுமையாக கண்டித்தார். நான் எனக்கு மூட் போச்சு சார் என்று அபத்தமாக நியாயப்படுத்தேன். அவர் “நீ என்ன பெரிய கவிஞனா? அப்படி என்றால் ஏதாவது ஒரு காகிதத்தில் கிறுக்கி புதரில் எறிந்து விட்டுப் போ. ஆனால் என் பரீட்சையில் அதையெல்லாம் அனுமதிக்க மாட்டேன்” என்றார். அவர் அந்த வெறுப்பில் இறுதிப் பரீட்சை மற்றும் இண்டெர்னல் மதிப்பெண்களில் கைவைத்து விட்டார். பிறகு பிற பரீட்சைகளில் கடுமையாக போராடி அதிக மதிப்பெண் பெற்று மொத்த சராசரியில் முதலிடத்தை பெற நாய்ப்பாடு பட்டேன்.

அந்த காலத்தில் ஜெயமோகனின் இணையதளம் எல்லாம் வரவில்லை. அவர் திண்ணை தளத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தார். ஒருமுறை மகாராஜபுரம் சந்தானத்தைப் பற்றி ஒரு குறிப்பெழுதியிருந்ததை படித்து அவரை கேட்டேன். மனிதர் ஆரம்பத்திலேயே என்னை சுண்டி இழுத்து விட்டார். அறையில் சதா சந்தானம் தான் உருகிக் கொண்டிருப்பார். அதிலும் ”சின்னஞ்சிறு கிளியே” எனக்கு உயிர். அவரது பாரதியார் பாடல்கள் கேஸட்டை திரும்பத் திரும்ப போட்டு பக்கத்து அறை நண்பர்களை இரவில் தூங்க விடாமல் டார்ச்சர் கொடுப்பேன். எங்களுக்கு இந்திய இலக்கியம் பாடத்தில் பாரதியாரும் இருந்தார். அந்த பாட பரீட்சைக்கு வெகு சீக்கிரம் காலையில் எழுந்து சுமார் ரெண்டு மணிநேரம் சந்தானம் பாரதி வரிகளை பாடுவதை திரும்பத் திரும்ப கேட்டு ஒரு ”சன்னத” நிலைக்கு போய் அப்படியே பரீட்சை ஹாலில் நுழைந்தால் அன்று பாரதியார் கவிதை பற்றி ஒரு கேள்வி. நான் அன்று எழுதியதை பின்னர் அதைத் திருத்திய பேராசிரியர் குறிப்பிட்டு பாராட்டினார். எம்.ஏயில் நான் மிக அதிகமாக மதிப்பெண் வாங்கியதும் அந்த பரீட்சையில் தான். பேராசிரியர் பாராட்டுகையில் மகாராஜபுரம் சந்தானத்தை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.
பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் போதும் ஹெட்போன் மாட்டி பாட்டுக் கேட்டுத் தான் பளு தெரியாமல் உழைப்பேன். ஆசிரியர் ஆன பிறகு மட்டும் எப்படி பாட்டுக் கேட்டபடி பாடம் நடத்துவது என தெரியவில்லை. ஆனால் இப்போதும் எதாவது எழுதும் மனநிலை கூட வேண்டுமென்றால் கேட்பதற்கு சில பாடல்கள் வைத்துள்ளேன். அதைக் கேட்டால் என் மனைவி தெறித்து ஓடி விடுவாள்.
திரும்ப இன்று மகாராஜபுரத்தை கேட்கும் போது கல்லூரிப் பருவத்தில் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என புரிகிறது. அவ்வளவு ஈடுபாடும் தவமும் வீண். அந்த ஆத்மார்த்த ஈடுபாட்டில் விளைந்த மதிப்பெண்களும் வீண். சும்மா கிடைக்கிற நேரத்தில் உருப்போட்டதை வைத்து ஏதாவது கிறுக்கி இருந்தாலும் இன்று என் வாழ்க்கை ஒன்றும் அதிகம் மாறி இருக்காது. 

கல்லூரியில் வேலையின் போது எத்தனையோ விடைத்தாள்களை திருத்தியிருக்கிறேன். எல்லாமே ஒப்பித்தல் வகை தான். ஆனால் என்னைப் போல் ஒரே ஒரு பைத்தியத்தை மூன்றாவது வருடத்தில் பார்த்தேன். ஹைதராபாதை சேர்ந்த தால்ஸ்தாய், நீட்சே வாசகனான ஒரு மாணவன். சொந்த கருத்துக்களை சொந்த மொழியில் எழுதியிருந்தான். தான் எழுதியதன் மீது அவனுக்கு மதிப்பு இருந்தது. நாங்கள் நண்பர்கள் ஆனோம். கல்லூரியில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று “இப்போது இந்த மொத்த வளாகத்தில் தால்ஸ்தாய் பற்றி பேசுகிறவர் நாமாக மட்டும் தான் இருப்போம்” என வியப்பாக நினைத்துக் கொள்வேன். அது ஒரு தனி உணர்வாக இருக்கும். மொத்த உலகத்துக்கும் எதிர் அச்சில் நாங்கள் சுழல்வது போல். பிற மாணவர்களும் ஆசிரியர்களும் எங்களை விசித்திர ஜீவிகள் போல பார்த்து செல்வார்கள். அவனுடைய தனித்துவம் காரணமாகவே ஆசிரியர்கள் மட்டத்தில் இருந்து பல பிரச்சனைகள் அவனுக்கு வந்தன. நான் அவனிடம் பேசக் கூடாது என்று கூட தடை போட்டார்கள். அது தான் நடப்பியல் உலகம். நீட்சே, தால்ஸ்தாய், முராகாமி பற்றி பேசினால் தடை. எனக்கு அவனை பார்க்கையில் என்னுடைய மாணவப் பருவத்து லட்சிய கனவுகளும் அதைப் பின் தொடர்ந்த என் ஆவேசமும் நினைவு வரும்.
 

ஆனால் நாம் அப்படித் தான் என்றும் நடைமுறைக்கு விரோதமான முட்டாள்களாக இருந்திருக்கிறோம்! நமக்காக நாமே நம்மை ஏமாற்றிக் கொள்வது இனிமையான காரியம் தானே!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...