Skip to main content

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்





இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்

எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை


இன்று உன்னை வாழ்த்தியவர்களை
அழுத்தமாய் நினைவில் வைக்கிறாய்
அவர்கள் உன் நினைவில் கடந்து போனவர்கள்
உன் முகத்தை நிமிர்ந்து நோக்கும் அவகாசம் அற்றவர்கள்
எத்தனையோ பெயர்களில் ஒன்றாக உன்னைக் கருதி உரையாடுபவர்கள்
ம்ஹும் இன்று உனக்கு விரோதிகளோ நண்பர்களோ இல்லை
இந்த நாளில் உன்னைச் சுற்றி
வாழ்த்துகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்

இந்த நாளுக்காக அவ்வளவு
தயாராக இருந்தாய்
இந்த நாள் உனக்காகவே அச்சடிக்கப்பட்டு
வெதுவெதுப்பாய்
உன் உள்ளங்கையில் காத்திருக்கிறது
இந்த நாள் முடியும் முன்
வாழ்த்தினவர்களுக்கு
அவசர அவசரமாய் நன்றி
சொல்லிக் கொண்டு வருகிறாய்
உன் செல்போன் ஓயவில்லை
குறுஞ்செய்தி பெட்டி வழிகிறது
முகநூல் பக்கம் ஒரு சரம் போல் நீண்டு செல்கிறது
இன்று நீ
களைக்கவே மாட்டாய்
இன்றைய நாள்
உனக்கும் வாழ்த்துகிறவர்களுக்கும் இடையிலானது
இன்றைய நாள்
மெல்ல மங்கி இருண்டு
கேக்கின் கடைசி துண்டை
நீ வாயில் மெல்லும் போது
வைனின் இறுதித் துளியை
நுனிநாவில் வழிய விடும் போது
நீ ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே எண்ணுகிறாய்

இதோ கடிகார முள்
நாளின் இறுதி விநாடியை கடக்கும் போது
முதன்முறை அக்களைப்பை உணர்கிறாய்
இந்த முப்பது வருடங்களாய்
உணர்ந்த களைப்பை உணர்கிறாய்
ஒரே ஒரு பிறந்தநாளில் கடந்து விடக் கூடிய அக்களைப்பை
ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வெறும் களைப்பு என
உன் கண்ணாடியிடம் கூறி விட்டு
அரைதூக்கத்தில் விழுகிறாய்
ஆனால் அதற்கு முன்
அத்தனை வாழ்த்து செய்திகளையும் நினைவுகளையும் எண்ணிப் பார்த்து
கோப்பில் இட்டு மூடுகிறாய்
பரிசுகளை பரணில் பத்திரப்படுத்துகிறாய்
கசங்கிப் போன புத்தாடையை
அழுக்குத்துணி குவியல் மீது வைக்கிறாய்
வியர்வை வீச்சத்துடன் பிசுபிசுப்புடன்
ஏப்பங்களுடன் கண்ணெரிச்சலுடன் -
களைப்பு முழுமையாய்
மூடிக் கொள்கிறது

கடைசியாக ஓர் அழைப்பு
தாமதமாய் வாழ்த்துவதற்கு மன்னிப்பு கேட்டபடி
ஒரு பரிச்சயக் குரல்
ஒரு முழுநாளின் அலுப்புக்கு பின்னரும் மிச்சமுள்ள
சின்ன அன்புடன்.
“நேற்று முடிந்து போயிற்றே” என்கிறாய்
சின்ன வருத்தத்துடன்.
“எங்கே இன்னும் ஒரு நிமிடம் ஒரு நொடி இருக்கிறதே
என் கடிகாரத்தில்” என அங்கிருந்து நினைவுறுத்தப்படுகிறது
சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்ள
“நன்றி” கூறுகிறாய்
அப்போது
கண்ணில் திரண்ட
அத்துளிக்கு
அர்த்தமே
விளங்கவில்லை
உனக்கு.
எல்லா பிறந்தநாள் முடிகையிலும் அழுகிறேனே
என உன்னையே கடிந்து கொள்வதன்றி
வேறெதுவும் தோன்றவில்லை
உனக்கு.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...