Skip to main content

ஒரு கிறித்துவர் படம் பார்க்கிறார்




குமரி மாவட்ட கிறுத்துவர்கள் பொதுவாக திரையரங்குக்கு குடும்பமாக போக மாட்டார்கள். வாலிபர்கள் ஒளிந்து பதுங்கி ஏ படம் பார்ப்பது போல் சினிமாவுக்கு போவார்கள். வீட்டில் டி.வியில் அல்லது திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

திருநெல்வேலி கிறித்துவர்கள் இன்னும் கட்டுப்பெட்டியாம். என்னுடைய நண்பர் அப்படி ஒரு ஆச்சார கிறித்துவப் பெண்ணை காதலித்து மணந்தார். அப்பெண் தன் வாழ்நாளில் படமே பார்த்தது இல்லை. அவரை முதன்முதலாக நண்பர் திரையரங்குக்கு அழைத்துப் போனார். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று மனைவி ஜெர்க்காகி கணவனிடம் “எனக்கு படமே புரியவில்லை” என புகார் செய்தார். அவர் விசாரிக்க மனைவி பிளேஷ் பேக் காட்சியை குறிப்பிட்டு “ஏன் திடீரென்று படம் பின்னால் போகிறது, எனக்கு குழப்பமாய் இருக்கிறது” என்றார். நண்பர் எவ்வளவு விளக்கியும் அவருக்கு பிளேஷ் பேக் என்கிற உத்தி புரியவில்லை. அத்தோடு அவர்கள் சேர்ந்து படம் பார்க்க போவதும் நின்று போனது.
இதில் எனக்கு ரெண்டு விசித்திரங்கள் பட்டன. ஒன்று தமிழகம் சினிமாவை வழிபடும் மாநிலம் எனப்படுகிறது. ஆனால் இங்கு பெரிதும் கொண்டாடப்படுகிற சமகால படங்களைக் கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் சினிமாவின் பாதிப்பே இல்லை. ஒரு கறுப்புவெள்ளை புகைப்படம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடும் ஆச்சாரங்களை மேற்கொள்ளுகிற பிராமணர்கள் கூட இப்படி இல்லை. இஸ்லாமியர்களைப் பற்றி தெரியாது. ஆனால் மேற்கில் கிறித்துவ நாடுகளில் கூட இல்லாத ஒரு ஒழுக்கம் இங்கு ஆங்கிலப் பெயர் வைத்திருக்கும், நவீனப்பட்டதாய் நாம் நம்பிக் கொண்டிருக்கும் கிறித்துவர்களிடம் உள்ளது.
அடுத்தது பிளேஷ் பேக். பிளேஷ்பேக் புரியாத ஒருவருக்கு எந்த கதையையும் வாசிக்க கேட்க அறிய முடியாது. நம் சிந்தனைகளை கோர்ப்பது, நினைவை மீட்பது, சம்பவங்களை கதைப்பது என அனைத்திலும் பிளேஷ் பேக் உள்ளது. அதை புரிய முடியாத ஒருவர் எப்படி ஒரு மொழியில் உரையாடுகிறார் என்பதே புரியாத பெரும் விசித்திரம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...