Skip to main content

சமூகம் எனும் மலைப்பாம்பு




எனக்குக் கூட சிலவேளை ஒரு தீவிரவாதியாகவோ சைக்கோ கொலைகாரனாகவோ ஆனால் என்ன எனத் தோன்றும். அப்போதெல்லாம் இன்னொரு எண்ணமும் வரும்: இந்த சமூக விரோதிகள் உண்மையில் தீவிர சமூக அக்கறை கொண்டவர்கள் என்று. என்ன தம் அக்கறையை எதிர்மறையாக காண்பிக்கிறார்கள். அழிப்பதன் மூலம் நானும் உங்களில் ஒரு பகுதி என பொது சமூகத்திடம் சொல்ல தலைப்படுகிறார்கள். அப்படிப் பார்த்தால், சமூக விரோதிகள் நீட்சேயியவாதிகளாக இருக்க முடியாது. அவர்களுக்கு சமூகத்திடம் மரியாதையும் தொடர்புறுத்தும் விருப்பமும் உண்டு. சமூகம் தமக்கு இணை என நம்புகிறார்கள். இல்லை என்றால் இவ்வளவு பிரயத்தனித்து சமூகத்தை திருத்தவோ அல்லது பழிவாங்கவோ முயல்கிறார்கள்?

இவர்களுக்கு சமூகம், வரலாறு குறித்து ஒரு கண்மூடித் தனமான நம்பிக்கை உள்ளது. ஒசாமா பின்லாடன் குறித்து படித்தவர்களுக்கு அவர் ஒரு லட்சியவாதி என புரியும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு இந்திய மாணவன் தான் படித்த வகுப்பு மாணவர்களை தாக்குவதற்காக நிமிடத்தில் ஐநூறு ரவுண்டுகளுக்கு மேல் சுடும் துப்பாக்கி ரவைகளை சேமித்து வைத்திருந்தான். ஆனால் தாக்குதலுக்கு முன்னரே மனம் சோர்ந்து தற்கொலை பண்ணி விட்டான். தனக்கு கிடைக்காது அவர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்று கருதி இருக்கலாம். அல்லது அமெரிக்க சமூக அமைப்பு மீதுள்ள கோபமாக இருக்கலாம். ஆனால் இந்த சமூக அமைப்பும் ஜனங்களும் யாரையும் பொருட்படுத்துவதில்லை. சமூக இயக்கம் ஒரு குருட்டு மலைப்பாம்பு. அது அனைவரையும் முழுங்கி செரித்து நகர்ந்து மெத்தமனாய் கொண்டிருக்கும். மேற்குலகின் மீதான ஒசாமாவின் போர் ஒரு சின்ன பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது அவ்வளவு தான். நடைமுறை வாழ்வு அதன் பாட்டுக்கு முன் போலத் தான் இருக்கிறது. ஆனால் ஒசாமா தன்னால் வரலாற்றை மாற்றலாம் என்றெல்லாம் நம்பினார்.
ஒரு சின்ன பரிசோதனைக்கு நீங்கள் உங்கள் டீக்கடையில் அல்லது அலுவலகத்தில் யாரிடமாவது ஒரு கருத்தை சொல்ல தலைப்படுங்கள். அவர்கள் காது கொடுத்து கேட்காமல் தம் கருத்தை சொல்லத் தலைப்படுவார்கள். தம் கருத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்காது. பாதியில் சொல்லிக் கொண்டிருக்கும் போது வேலை வந்தாலோ கவனம் திரும்பினாலோ எழுந்து போய் விடுவார்கள். அல்லது அவர்கள் உங்களை நலம் விசாரிக்கும் போது விலாவரியாக உங்கள் பிரச்சனைகளை பேசிப் பாருங்கள்; கொட்டாவி விடுவார்கள். அல்லது கேட்காமல் பக்கத்தில் உட்கார்ந்து இறகை சிலுப்பும் ஈயை கவனிப்பார்கள். சரி போகட்டும், பொதுப்பிரச்சனை பேசுங்கள். அது பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அகந்தையுடன் விளக்குவார். சரி போகட்டும், அவரது பிரச்சனையை பேசுங்கள். என்னைப் பற்றி எனக்குத் தெரியும், அதைச் சொல்ல நீங்கள் யார் என உங்களை மூக்கைத் தொட்டு சொல்வார்கள். சாம்பிளுக்கு இந்த நான்கு பேரே இப்படி இருக்கும் போது லட்சம் கோடி மக்கள் மீது ஒருவர் அக்கறை காட்டி வெடிகுண்டு வைப்பது ஏன்? ஜனங்கள் பற்றின தவறான புரிதலினால் தான். எப்போதும் போராளிகள், மீட்பர்களை அவர்களின் மக்களே சிலுவையில் அறைவது தான் நடக்கும்.

சரி நாம் யாருடம் தான் அக்கறை கொள்வது? இந்த உலகில் யாருமே அக்கறை காட்டாத ஒருவர் இருக்கிறார். அவரிடம். யார் அவர்? நீங்கள் தான். சுய அக்கறை சின்ன குற்றவுணர்வையும், சலிப்பையும் அதிருப்தியை தரும். ஆக உங்கள் வழியாக சமூக அக்கறை காட்ட துவங்குங்கள். நீங்கள் உங்களுக்கு செய்யும் சேவை இறுதியில் சமூக வளர்ச்சிக்குத் தான் உதவுகிறது. இருத்தலியவாதிகள் சொன்னது போல நான் தான் சமூகம். என்னை கிள்ளினால் சமூகத்துக்கு வலிக்கும். என்னை வளர்த்தால் சமூகம் வளரும்.
இந்த செவிட்டு குருட்டு சமூகத்துக்கு ஒரு மூளை உள்ளது. அதனுடன் நம்மால் உரையாட முடியும். சமூகத்தை பேசவோ கேட்கவோ வைக்க மூன்றாம் பிறை படத்தில் கமல் செய்வது போல குட்டிக்கரணம் அடிக்காமல் நாம் இந்த மூளையுடன் பேச எத்தனிக்கலாம். வரலாற்று நாயகர்களாக சுயமாய் நிறுவிக் கொண்டவர்கள் என்னதான் செய்தாலும் பேசினாலும் சமூகம் அதன் பாட்டுக்கு கவனிக்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் என்றேன். ஆனால் வரலாற்றுடன் அந்தரங்கமாக உரையாடிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமக்கு தாமே அறியாமல் சமூகக் கருவிகளாக மாறுகிறார்கள். அவர்கள் குண்டு வைப்பதோ பிரசங்கம் செய்வதோ இல்லை. ஆனாலும் வரலாறு பிறகு அவர்களையும் தின்று செரித்தே நகரும்.
போகிற போக்கில் நாயை கல்லால் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் உலகை மாற்ற கிளம்புபவர்களும் ஒன்று தான். ஒன்று நாய் வள்ளென்று ஓடும். இல்லையென்றால் நின்று பார்த்து உறுமும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...