ராஜூ முருகனின்
“வட்டியும் முதலும்” படித்து விட்டு படத்தயாரிப்பாளர்கள் சாக்கு மூட்டை நிறைய பணத்துடன்
அவரது வரவுக்காக காத்திருப்பதாக ஒரு இயக்குநர் சன் நியூஸின் “திரைப்படமும் இலக்கியமும்”
என்கிற விவாதத்தின் போது குறிப்பிட்டார். உடனே அதன் ஒருங்கிணைப்பாளர் குறுக்கிட்டு
அந்த பத்தியை அவர் ஏதாவது சிறுபத்திரிகையில் எழுதியிருந்தால் கவனித்திருப்பார்களா என்றார்.
அதை விட முக்கியமாக அடுத்து ஒன்று சொன்னார்” “ராஜு முருகனை விட செறிவாக பலர் சிறுபத்திரிகைகளில்
எழுதுகிறார்கள். அவற்றை சில நூறு பேர் படித்து கடந்து போகிறார்கள். இது ஒரு அவலம்”
என்றார். எனக்கு இதைக் கேட்க அந்த ஒருங்கிணைப்பாளர் மீது சட்டென்று ஒரு மரியாதை தோன்றியது.
இப்படி பேச ஒரு தைரியம் வேண்டும். பொதுவாக வெகுஜன மீடியாவில் வெகுமக்கள் ரசனைக்குற்பட்ட
விசயங்களை விமர்சிக்க மாட்டார்கள்.
சில மாதங்கள் முன்பு
விஜய் டிவியில் இப்படித் தான் நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜூ முருகனை அமர வைத்து
பூரண கும்பம் எடுத்தார்கள். அவர் மலைக்கு போகும் சீருடையில் இருந்தார். ஒரு எழுத்தாளன்
அடிப்படையில் சுயசிந்தனை கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் சடங்குகளுக்குள் சிக்குபவனாக
இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை. அப்படி சிக்குபவனுக்கு விழிப்புணர்வு இல்லை.
அவன் உயர்வாக எழுதவும் முடியாது. உண்மையில் அந்த வேடத்தில் ராஜுமுருகனை பார்க்க எனக்கு
சின்ன அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சிறுபத்திரிகை வட்டத்தில் ஒரு எழுத்தாளன் அது போல்
நெற்றி முழுக்க பட்டையுடன் மேடையேறி நான் பார்த்ததில்லை. ஆனால் இவர் வேறு ரகம் என பட்டது.
ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது.
ராஜூ முருகன் ஒரு
மாதிரி கலவை எழுத்தாளர். தமிழ் வார இதழ் நிருபர்களின் ஜிலுஜிலுவென்கிற போலி நடை + எஸ்.ராவின்
செண்டிமெண்டும் உருவக பாணியும் கலந்த இலக்கிய நடை. அவரது “வட்டியும் முதலும்” தொடர்
நானூறு பக்க தொகுப்பாக வந்திருக்கிறது. அதைப் புரட்டிப் பார்க்கும் போது சில விசயங்கள்
புலப்பட்டன.
இது ஒரு வணிக வெற்றிபெற்ற
தொடர். விஜய் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது கூட இருந்த கவிதா முரளிதரனிடம் “நீங்க
எப்பிடி இதை ரசிக்கிறீங்க? ரொம்ப செண்டிமெண்டலா இருக்கே” என்று கேட்டேன். அதற்கு அவர்
“நாமெல்லாம் sentimental fools தானே” என்றார். நான் இதை ஒரு விமர்சன தரப்பாக அல்ல பொதுவாக
முருகனின் வாசகர்களின் ரசனை தரப்பாக கருதுகிறேன். அதன் அடிப்படையில் பார்க்கும் போது
இவ்விசயம் தோன்றுகிறது. அவரது கணிசமான கட்டுரைகள் தோல்வியுற்ற சீரழிந்த மனிதர்களைப்
பற்றியது; ஆனால் அவர் சீரழிவின் ஆன்மீகத் தளத்தையோ உளவியலையோ தொடுவதில்லை. லௌகீக தோல்விகள்.
அவற்றின் பின்னுள்ள ஒழுக்கம். இழந்த கனவுகளின் நடைமுறை வருத்தம். அது தான் அவர் திரும்ப
திரும்ப பேசுவது. இது நமக்கு ஏன் பிடித்திருக்கிறது என யோசித்தேன். ஒன்று, முப்பது
நாற்பதுகளில் உள்ள பலரும் பற்பல சமரசங்கள், இயலாமைகளுடன் வாழ்பவர்கள். ஏதோ ஒரு வேலை,
குடும்பம் என சமூக கட்டமைப்பில் அங்கங்கே ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். எல்லோருக்கும்
தாம் வாழ்வில் வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என்கிற ஏக்கமும் பச்சாதாபமும் இருக்கிறது.
இந்த பச்சாதாபத்தை தான் ராஜூ முருகன் தூண்டுகிறார். படித்ததும் கண்ணீர் விட்டு ச்சே
நானும் இப்படித் தான் சீரழிந்து போனேன் என நினைத்துக் கொள்கிறோம்.
இது சுரண்டல் எழுத்து.
ஏனெனில் முருகன் உங்கள் பிரச்சனைகளுக்கான விடை தேடுவதில்லை, காரணத்தை அலசுவதில்லை.
அவர் உங்களது முரடு தட்டிப் போன புண்ணில் ஊசி கொண்டு குத்தி துளி ரத்தம் வரவழைக்கிறார்.
அவ்வளவு தான்.
நானூறு பக்கங்களுக்கு
மேல் தொடர்ந்து எழுத நீங்கள் நிறைய வாசித்து தேடி கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் ராஜூ
முருகன் ஒரு பயிற்சி பெற்ற உரைநடையாளர் அல்ல. அவர் அடிப்படையில் சிறுகதையாளர். ஒரு
சின்ன மன உந்துதல், உணர்ச்சி வேகம் கொண்டு கதையை பின்னுகிறவர். இயல்பாகவே அவர் பாத்திர
சித்தரிப்புகளை தான் இந்த பத்தியிலும் முயன்றிருக்கிறார். கணிசமானவை போலியாகவே தோன்றுகின்றன.
சிறுகதையாளன் இப்படி கட்டுரை வடிவுக்கு வரும் போது ஒரு அடிப்படியான சிக்கல் உணர்ச்சிகளைக்
கொண்டு ரொம்ப காலம் டீ ஆற்ற முடியாது என்பது. ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கை பதிவுகள்
நமக்கு அலுப்பு தட்டுகின்றன. இந்த சின்ன வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு தான் பார்த்து
எழுத முடியும்? அதனால் தான் “வட்டியும் முதலும்” தேய்ந்த ரெக்கார்டு போல ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரே மாதிரி மனிதர்கள், ஒரே வாழ்க்கை, ஒரே பிரச்சனை, அதற்கு ஒரே மேலோட்டமான கண்ணீர்
நியாயங்கள்.
பின்னட்டையில்
ராஜூமுருகனின் படத்தோடு தொடருக்கு ஓவியம் வரைந்தவரையும் போட்டு ஏதோ பிரமாத உலக சாதனை
போல் சிலாகித்திருக்கிறார்கள். ஆனால் கவனித்து பார்த்தால் அந்த ஓவியங்கள் எளிய வடிவ
பிழை கொண்டவை, கற்பனை வறட்சி கொண்டவை என தெரியும். உதாரணமாய், சினிமாவில் பாடலாசிரியனாக
வந்து பிம்பாக மாறியனுக்கு ஒரு படம். அவன் கையில் நான்கைந்து போன்களுடன் நிற்கிறான்.
விகடன் நிறுவனத்தாருக்கு உண்மையில் ஓவியம் பற்றிக் கூட ஒன்றும் தெரியாதா? இதற்கு தினத்தந்தி
நிருபர்கள் பரவாயில்லை. அவர்கள் ஒன்றும் மேதாவிகள் இல்லை என்று அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.
