Skip to main content

பசுக்கொலை காணொளி: மனிதர்கள் சாகும் போதும்…




தற்போது பரபரப்பாக பரவி வரும் கொடூர காணொளி ஒன்று கசாப்புக்காக பசுக்களை தலையில் சுத்தியால் அடித்து கொல்லுவதைக் காட்டுகிறது. நெஞ்சை பதற வைக்கும் காட்சி. பசுக்கள் எதிர்ப்புணர்வற்று திமிறாமல் காட்டிக் கொடுக்கின்றன. அதைப் பார்க்க ஒரு குழந்தையை மயங்க வைத்து நெரித்துக் கொல்லுவதற்கு இணையாக உள்ளது. ஆனால் நெஞ்சை உறுதியாக்கிக் கொண்டு பார்த்து விடுமாறு நண்பர்களைக் கேட்கிறேன்.

இது பசுவதைக்கு எதிரான காணொளி அல்ல. மேற்கத்திய நாடுகளில் மாட்டுக்கறி அதிகமாக புசிக்கப்படுவதால் இதைவிட எண்ணிக்கை அதிகமான பசுமாடுகள் தொழிற்சாலையில் எந்திரங்கள் மூலம் சில நொடிகளில் அடித்து வீழ்த்தப்பட்டு எந்திரம் மூலமே தோலுரித்து துண்டு துண்டாக்கப்படுகின்றன. இங்கு நம் ஆட்கள் முரட்டுத்தனமாக நேர்த்தியற்று சின்ன சுத்தி கொண்டு அதைப் பண்ணுகிறார்கள். அது தான் வித்தியாசம்.
எனக்கு இதைப் பார்க்கையில் குற்றவுணர்வு ஏதும் எழவில்லை. நான் இன்னும் கூட தயங்காது மாட்டுக்கறி உண்பேன். ஏனென்றால் இந்த உலகத்து ஜீவராசிகளை என் சுயகட்டுப்பாட்டால் வலியில் இருந்து வதையில் இருந்து காப்பாற்றிட முடியும் என நான் கற்பனாவாத கிளர்ச்சி நிலைக்கு போக விரும்பவில்லை. காந்தியைப் போன்றவர்கள் செய்த தவறை நானும் செய்ய விரும்பவில்லை. உலகம் பிரம்மாண்டமானது, சிக்கலானது. இங்கு இதெல்லாம் நடந்தவாறு தான் இருக்கும்.
நான் இதனை நமது அண்டை நாடுகளில் நடந்து வரும் போரின், இனச்சுத்தீகரிப்பின் பெயரிலான மனிதக் கொலைகள், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் நடத்தும் கலவரக் கொலைகள், மலம் அள்ள நிர்பந்திக்கப்படும் மக்களின் அவலம், சாதி ஒடுக்குமுறை, பெண்களின் மீதான வன்முறை, குடும்பத்தில் இருந்து வேலையிடம் மற்றும் அரசியல் அதிகார மட்டம் வரையிலான ஒருவரின் வளர்ச்சிக்காக இன்னொருவரை தயையின்றி பலிகொடுக்கும் நடைமுறை ஆகியற்றோடு பொருத்தித் தான் பார்க்க விரும்புவேன். நாம் தொடர்ந்து மிகப்பெரிய தீமைகளின், கொடூரங்களின், சுரண்டல்களின், வெறுப்பின் இடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காணொளி அதன் ஒரு சிறுபகுதி. ஒரு ஆதாரம்.
தலையில் அடித்துக் கொல்லப்படும் ஒவ்வொரு பசுவும் எனக்கு ஒரு தனி மனிதன் தான். நாம் இந்த கொடுமைகளின் மத்தியில் கண்ணை மூடிக் கொண்டு வாழ்ந்தபடி இருக்கிறோம். அடிக்கடி கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டு இரவெல்லாம் தூக்கம் வராமல் அவதிப்படுகிறோம்.
இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கடந்த பத்து வருடங்களில் அமெரிக்க, சிங்களப்படையினரால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான மனித உயிர்களின் காணொளியையும் யுடியூபில் பார்த்து எதிர்வினை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போகிறது போகட்டும் ஒரு பசு தானே என்றிருந்து விட வேண்டும். மனிதர்கள் சாகும் போதும் அப்படித் தானே இருந்தோம்!

மேலும் படிக்கவும் பார்க்கவும்:

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...