Skip to main content

எல்.ஐ.சியும் ஊனக் கட்டணமும்



கடந்த முறை உடல்நலமில்லாமல் போன போது மருத்துவமனை செலவு லட்சங்களைத் தொட்டதால் இவ்வருடம் ஒரு உடல்நலக் காப்பீடு எடுக்கலாம் என எல்.ஐ.சியை அணுகினேன். முப்பது வயதைத் தொட்டுள்ளதால் (நெஞ்சு எக்ஸ்ரே! உள்ளிட்ட) பல பரிசோதனைகளை பண்ணிக் கொள்ள வேண்டும் என்றார்கள். பொறுமையாக ஒவ்வொன்றாக முடித்து அத்தனை ஆவணங்களும் பணமும் செலுத்திய பின்னும் காப்பீடு அட்டை தாமதமாகி வந்தது.
ஒருநாள் முகவர் போனில் அழைத்து நீங்கள் வருடம் கூடுதலாக 12,000 செலுத்த வேண்டும் என்றார்கள். விசாரித்ததில் அவர் ஒரு விநோதமான காரணம் சொன்னார். எனக்கு கால் ஊனம் என்பதால் கூடுதல் பிரீமியம் தொகை கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது என்றார். எனக்கு இதன் பின்னுள்ள தர்க்கமே புரியவில்லை.
நாளை எனக்கு வயிற்றுப்போக்கோ காய்ச்சலோ வந்து அட்மிட் ஆனால் அதற்கும் என் கால் ஊனத்துக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது? கால் ஊனம் இல்லாதவர்களுக்கு இந்த நோயெல்லாம் வராதா? நான் ஆஸ்பத்திரியில் சேர்வதற்கு உள்ள எல்லா சாத்தியக்கூறுகளும் ஊனமில்லாத பிறர்க்கும் உரித்தானதே! நான் முகவரிடம் காப்பீட்டை திரும்பப் பெற்றுக் கொள்வதாய் கூறினேன். மூன்று காரணங்கள்.
ஒன்று இந்த விதிமுறை அதர்க்கமாக உள்ளது. இதை எந்த படிப்பறிவுள்ள சுயசிந்தனை உள்ள மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிக ஆபத்தான தர்க்கமும் கூட. நாளை சேரியில் வசிக்கும் அல்லது குறைவான பொருளாதார நிலையில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்டவர் அவரது உடல்நலத்துக்கு சீர்கேடு வர சாத்தியம் என்பதால் கூடுதல் கட்டணம் தேவை என்று கேட்கலாம். அதைப் போன்றே ஐடி போன்று அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் வேலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு வர சாத்தியம் அதிகம் என்று அவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கலாம். என்னவொரு அபத்தம்!
இரண்டு, இது அநியாயமாக உள்ளது. சம்மந்தமில்லாத ஒரு உடல் பிரச்சனைக்காக நான் 12,000 அதிகம் செலுத்த நிர்பந்திப்பது ஒருவித மறைமுகக் கொள்ளை.
மூன்றாவதாக, இப்படி ஊனக் கட்டணம் வசூலிப்பதன் வழியாக அரசாங்கம் என்னைச் சிறுமைப்படுத்தவும் உடற் குறைபாட்டை என் அடையாளமாக ஸ்தாபிக்கவும் முயல்கிறது. நான் என்பவன் இந்த கால் ஊனத்தினால் ஆனவன் அல்ல. அது எனக்கு தெளிவாகவே தெரியும். சொல்லப்போனால் இந்த சமூகத்தில் உள்ள 1% நுண்ணுணர்வுள்ள படைப்பூக்கமும் அறிவும் கொண்ட மனிதர்களில் நானும் ஒருவன். என்னை இந்த பண்புகளால் அடையாளப்படுத்தவே விரும்புவேன். அது தான் உண்மையும். அதில் நான் பெருமையும் அடைகிறேன். அதனால் தான் நிச்சயமாக கூடுதல் பணத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டேன். இது பணம் சம்மந்தமான பிரச்சனை அல்ல; என் கொள்கைப் பிரச்சனை. நான் என் நம்பிக்கைகளின் படி நிற்கிறேன்.
கார்கில் நிதி, பூகம்ப நிதி போன்ற ஏதாவது ஒரு நிதிக்காக அரசாங்கம் என்னிடம் மாதம் 12,000 கேட்கட்டும். கொடுத்து விட்டுப் போகிறேன். ஆனால் என் காலை முன்னிட்டு ஐந்து காசு கூட தர மாட்டேன். நான் ஒரு எழுத்தாளனாகவும் பேராசிரியனாகவும் இரட்டிப்பு வேலை செய்கிறவன். தினமும் நான் எழுதுவதற்கு இந்த சமூகம் எனக்கு காலணா கூட தந்ததில்லை. சொல்லப்போனால் இந்த சமூகம் தான் எனக்கு பணம் தர வேண்டும்; நான் சமூகத்துக்கு அல்ல.
இப்படியான அபத்த சட்டங்களை இயற்றி வலியுறுத்துபவர்கள் எந்த வித பண்பாட்டு நடைமுறை சமூக அறிவோ அற்ற அரசு அதிகாரிகள் என அறிவேன். இந்தியா போன்று அறிவியல் அறிவு வெறும் வேலைக்கான உபகரணமாக பயன்படுத்தப்படும் ஒரு நாட்டில் இதற்கு மேல் மக்கள் தர்க்கரீதியாக சிந்திப்பார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது. நாம் மனிதர்களாகப் பண்பட இன்னும் சில நூறு வருடங்கள் ஆகும் என்பதையே இது காட்டுகிறது. ஏனென்று சொல்கிறேன்.
அமெரிக்காவில் உள்ள நலக் காப்பீட்டு விதிகள் ஒருவருக்கு நீரிழிவு, மாரடைப்பு போன்ற வியாதிகள் இருந்தால் கூட ஏற்றுக் கொண்டு பொருளாதார பாதுகாப்பு தரும். இந்தியாவில் எந்த நோயோ குறைபாடோ இல்லாதவர்களுக்கு மட்டும் தான் காப்பீடு. அவர்களுக்கு எதற்கு காப்பீடு என்கிறேன். அமெரிக்காவில் இந்த முற்போக்கான காப்பீட்டை கொண்டு வந்த ஒபாமாவை பாராட்டும் படியாக Obama Care என்று இதை சிலாகித்த மக்கள் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். நம்மூர் மக்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து என்ன தேவை என்கிற தெளிவே இல்லை. தேர்தலுக்கு முந்தின சில மாதங்களில் அவர்களின் மனநிலை விலைவாசி நிலையை பொறுத்து எப்படி அமைகிறதோ அதுவும், சாதி மத ஓட்டுக்களின் விகிதமும் மாநில-தேசியக் கட்சிகளின் பணப் பேரங்களின் வீச்சும் வெற்றியை தீர்மானிக்கின்றன. முக்கியமாக, அமெரிக்காவில் சிரமப்படும் பிற்படுத்தப்படும் மக்களின் நலனை முன்னோக்கி சட்டங்கள் இயற்றப்படுவதை கவனியுங்கள். நம்மூரில் என்றால் ஒருவன் சிரமப்படுகிறான் என்றால் அது அவன் விதி; போன ஜன்மத்தில் பாவம் பண்ணியிருப்பான். அதனால் நலமாக இருப்பவர்களை மட்டும் கவனிப்போம் என்றே சிந்திப்பார்கள். இதைத் தான் பண்படாத காட்டுமிராண்டி மனநிலை என்கிறேன்.
உலகில் உள்ள ஒவ்வொரு இனத்துக்கும் கடவுள் ஒரு உடல் தோற்ற அடையாளத்தை கொடுத்திருக்கிறான். சிலருக்கு சப்பை மூக்கு, சிலர் அட்டைக்கறுப்பு என. இந்தியர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு வாலைக் கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நமக்கு அது மட்டும் தான் இப்போதைக்கு ஒரே குறை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...