Skip to main content

அழகியசிங்கரின் அப்பாவும் புத்தகங்களும்



இந்த மாத அமிர்தாவில் அழகிய சிங்கர் புத்தகங்கள் வாங்கி சேர்க்கும் பழக்கம் பற்றியும் அது சம்மந்தமாக வரும் தொந்தரவுகள் பற்றியும் சுருக்கென்ற நகைச்சுவை மிக்க பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதில் என்னை கவர்ந்தவை:


அழகிய சிங்கரின் புத்தக அடுக்குகளை பார்க்கும் போதெல்லாம் அவரது அப்பா “நீ இவ்வளவு புத்தகங்களையும் படித்து முடிக்க எத்தகை சகாப்தங்கள் ஆகும்?” என்று கிண்டலடிக்கிறார். தொடர்ந்து புத்தகங்கள் வாங்கியே தன் மகன் போண்டியாகிப் போனதாகவும் வருத்தப்படுகிறார். இதில் அபத்தம் என்னவென்றால் அழகிய சிங்கருக்கு 60 வயது. அவர் அப்பாவுக்கு  வயது 90. இந்த வயதிலும் போய் என்னை எல்.கெ.ஜி பையன் போல கண்டிப்பதா என அழுகிறார் சிங்கர்.

அழகிய சிங்கரின் நண்பர் ஒருவருக்கு ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் அவர் வீட்டுக்கு வந்தாலும் இரண்டு புத்தகங்களையாவது வாங்கிக் கொண்டு போய் விடுகிறார். இலக்கிய நட்பின் விதிப்படி அது திரும்ப வராது. இதைத் தவிர்க்க சிங்கர் அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்து சந்திப்பதாய் சொல்லும் போது புத்தக அறையை பூட்டி வைத்து விட்டு வேறு அறையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். நண்பர்: “ஏன் இங்கே இருக்கிறாய்? வழக்கமாய் அந்த புத்தக அறையில் தானே இருப்பாய்?” சிங்கர்: “அந்த அறையின் சாவி தொலைந்து போ விட்டது”. அப்போதிருக்கும் அறையில் ஜெ.கெயின் சில உரைகளைக் கொண்ட ஆடியோ கேசட்டுகள் இருக்கின்றன. நண்பர் புத்தகம் கிடைக்காவிட்டால் இருக்கட்டும் என அவற்றில் இரண்டை எடுத்துக் கொண்டு போய் விடுகிறாய். இறுதியில் அழகிய சிங்கர் இப்போதைய காலத்தில் இப்படி புத்தக அபேஸ் பண்ணுவதற்கு கூட யாரும் தன்னை வந்து பார்ப்பதில்லையே என விசனிக்கிறார்.

இத்துடன் புத்தகம் சேமிப்பவர்கள், எழுதுபவர்களுக்கு உள்ள சங்கடங்கள், அவமானங்கள், அவலம் என துயரம் இழையோடு அங்கதத்துடன் பேசிப் போகிறார். எஸ்.ரா முன்பு இதுபோல் புத்தகம் வாங்குவது பற்றி தன் இணையதளத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. புத்தகம் ஒன்று வாங்கி சேமிக்கும் போது நம்முடன் அந்நூல் இருக்கும் கிளர்ச்சியே ஒரு பெருமிதத்தை தரும் என்கிறார் எஸ்.ரா. புத்தகம் என்பது வாசிக்க மட்டுமே அல்ல. அது நம் வாழ்க்கைத்தரத்தை உளவியல் ரீதியாக ஒரு ஏத்து ஏத்துகிறது. அழகிய சிங்கரும் தான் வாங்கிக் குவித்த நூல்களில் பலவற்றை படித்ததே இல்லை, ஆனாலும் அவை தனக்கு முக்கியம் என்கிறார்.

அழகிய கட்டுரை!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...