Skip to main content

மூன்றாவது நபர்



நான் உன்னிடம்


ஒரு எதிரியாக

முழுமையாக ஒப்புக் கொண்ட போது

உன்னிடம் பேச வார்த்தைகளே

இருக்கவில்லை


உன்னிடம் காட்ட

உணர்ச்சிகளே இல்லை

எதிரியை இவ்வளவு

நெருக்கமாய் பார்ப்பதைப் போல்

திக்குமுக்காட செய்வது

வேறொன்று இல்லை என்கிறாய்

புணர்ச்சியின் போது

சட்டென்று ஒளியின் பிம்பம் விழுவது போல்

நீ என்னை அவ்வளவு

சந்தேகமாய் பார்க்கிறாய்.

என்னிடம் பேச நினைத்தது அத்தனையும்

வேறொருவருக்கானது

என்று உணர்கிறாய்

ஒரு குழந்தையின் பழுதான பொம்மைகளைப் போல

உனது ஆயுதங்களை மறைக்கிறாய்

உனது கூர்நகங்கள் நெகிழ்ந்து

என் மயிர்க்கால்களை மிருதுவாக ஸ்பரிசிக்க

நான்

ஒரு பனிப்பிரதேசத்தை போல விரிசல் காண்கிறேன்.



பிறகு

என் கையை பிடித்துக் கொண்டு

விறுவிறுவென்று

என்னை அழைத்துச் சென்று நிறுத்துகிறாய்

துலங்கும் ஒரு கண்ணாடி முன்பு

நான் சொன்னேன்

“இந்த கண்ணாடி ஒரு குறியீடு

இந்த கண்ணாடி காட்டுவது

என்னை அல்ல

உனது பிம்பத்தை தான்”

நீ சொன்னாய்

”நான் அதைப் பார்க்க

உன்னை அழைத்து வரவில்லை”

அப்போது சட்டென்று நீ

என் கையை விடுத்து

விலகிச் செல்கிறாய்

காலதாமதித்த ஒரு பனித்திரையைப் போல.



உற்றுப் பார்க்க

அக்கண்ணாடியில் மூவர் இருப்பது

புலப்படுகிறது

நீ என்னை தனியே விட்டுப் போன

பின் இத்தனைக் காலமும்

நான் இங்கெயே தான்

நிற்கிறேன்

அந்த மூன்றாவது நபரின்

அடையாளம் தேடியபடி.

ஒருநாள் எதேச்சையாய்

நீ

கடந்து சென்ற போது கேட்டேன்

மூன்றாவது நபர் யாரென்று

கண்ணாடியை பார்ப்பவன் முதலாவது ஆள் என்றாய்

கண்ணாடியில் பார்க்கப்படுபவன் இரண்டாவது ஆள் என்றாய்

கண்ணாடியை குறியீடாய் பார்ப்பவன் மூன்றாவது ஆள்

ஒரு எதிரியை

இவ்வளவு பக்கத்தில் வந்து

அறிந்து விட்ட

உன்னை

மூன்றாவது நபரைக் கொண்டல்லாவது

வேறு எப்படி கொல்வது என்றாய்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...