Skip to main content

கார்டூன் சர்ச்சை: மாறுபட்ட கோணங்களும் தீர்க்கமான பார்வையும்

கார்டூன் சர்ச்சையில் critical pedagogy என்று சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை தந்தாலும் அதை ஒரு மைய பார்வைக்குள் கொண்டு வரவேண்டியது முக்கியம். 



இந்தி எதிர்ப்பு கார்டூனுக்கு கீழ் இப்படியான வாசகம் வருகிறது:
“initially seen as a threat to Indian nationalism, regional politics in Tamil Nadu is a good example of the compatibility of regionalism and nationalism
ஆனால் பிராந்தியவாதம் பிரிவினை அல்ல என்று சொல்வது மட்டும் போதாது. இந்த கார்டூன் எழுப்பும் விமர்சனத்தையும் அலச வேண்டும்..அதை அப்படியே விடுவது பொறுப்பின்மை. அதாவது இந்தி படித்தால் முன்னேறலாம்என்று 60களில் ஒருதரப்பு மக்கள் நம்பினார்கள். ஆர்.கெ லக்‌ஷ்மண் இதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது தரப்புக்கு இடமளிக்கும் போதே இதன் நடைமுறை உண்மையையும் பேச வேண்டும். இந்தியை விட மக்களின் முன்னேற்றத்துக்கு ஆங்கிலம் தான் தகுதியான மொழி என்று இன்று நிறுவப்பட்டாகி விட்டது. அன்றும் நமக்கு ஐயமிருக்க இல்லை. உண்மையில் இந்தியால் ஆங்கிலம் எனும் உலக மொழி முன் நிற்கவே முடியாது. உண்மையில் சுதந்திரத்துக்குப் பின் தேசியவாதம் ஒரு பெரிய எழுச்சி அலையாக இருந்தது. நூற்றுக்கணக்கான பிராந்தியங்களை இணைத்து இந்தியாவை உருவாக்கியதால் ஒரு ஒருங்கிணைந்த அடையாளம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தி அப்படியான ஒரு ஒருங்கிணைப்பு சக்தியாக கருதப்பட்டது. ஆனால் இந்த கார்டூன் இந்தி கற்காததால் மக்கள் முன்னேறாமல் போய் விடுவார்கள் என்ற சித்திரத்தை வைக்கிறார்கள். “இந்த பையனுக்கு ஆங்கிலம் கூட தெரியாதே என்கிறார் ராஜாஜி. ஆனால் இன்று வட-இந்தியர்களை விட தமிழர்கள் கல்வியில் முன்னேறி இருக்கிறோம். நல்ல ஆங்கிலம் பேசுகிறோம். அன்றும் நாம் ஒன்றும் காட்டுமிராண்டிகளாக இருக்கவில்லை. எப்படியும் இந்த கார்டூன் ஒரு தவறாக சித்திரத்தை தருவதை மாணவர்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். ஒரு பாடத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு அபிப்ராயம் கூட அதில் தனியாக தொங்கிக் கொண்டிருக்கலாம் என்கிறார் NCERT செயர்மேன். இது மாணவர்களை குழப்புமே அல்லாது உதவாது. 

 
மற்றொரு கார்டூன் பாமர மக்களை சுரண்டுவதற்காக ஒரு உத்தியாக இந்த போராட்டத்தை காட்டுகிறது. ஆனால் வரலாற்று உண்மை என்ன? ஒரு காலத்தில் தமிழர்கள் மத்திய அரசு பரீட்சைகளை எழுத முடியாமல் திணறினர். காரணம் அது முழுக்க இந்தியில் இருந்தது. இந்தி மூலம் தேசிய ஒருமைப்பாடு என்கிற காங்கிரஸ் வலதுசாரிகளின் மிகை-ஆர்வம் மற்றும் பதற்றம் காரணமாகவே இப்படியான மொழித் திணிப்புகள் அக்காலத்தில் நடந்தேறின. இதை யாராவது எதிர்த்தால் பிரிவினைவாதம் என்று ஆட்சேபிக்கப்பட்டது. ஒரு காலத்தில் திமுக தடை செய்யப்படவதற்கும் சூழல் ஏற்பட்டது. இந்த பிரச்சனையை அந்த காலகட்ட அரசியல் சூழலை கொண்டு பார்க்க வேண்டும். காங்கிரஸின் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா என்கிற முரட்டு ஒற்றைபட்டை அரசியலாக்கத்தின் பிடியை தளர்த்த அன்றைய பிராந்தியவாத எழுச்சிகள் உதவின. தமிழகம், கர்நாடகா, கேரளாவை இணைத்து ஒரே பிராந்தியமாக்க எல்லாம் முயற்சிகள் மத்தியில் நடந்தன. அவற்றை எல்லாம் முறியடிக்க பிராந்தியவாத போராட்டங்களும் பெரியார் போன்ற தலைவர்களும் தான் உதவினர். இன்று அன்றைய அரசின் நிலைப்பாடுகள் அவசியமற்ற overreactions என்று விளங்குகிறது. இதை எல்லாம் விட்டு விட்டு நாம் இதை வெறும் பாமரர்களின் மொழிப் போராட்டமாக பார்க்கக் கூடாது. துண்டு துண்டு மொழி சமூகங்கள் தங்கள் அடையாளத்தை இழக்காதிருக்க ஒரு மைய அரசுடன் போராடியதன் அடையாளமே இது. அன்றைய மைய அரசுக்கும் அவர்களுக்கான நியாயம் இருந்தது. ஆனால் இந்த முரண்-இயக்கமே இன்றுள்ள வளர்ச்சிக்கு, தமிழ் அடையாளத்துக்கு ஆதாரம். இது இல்லாததால் கேரளிய கலாச்சாரம் ஒரு சமிஸ்கிருத கலாச்சாரமாக, அவர்களின் மொழி ஒரு கலவை மொழியாக மாறியது. நமக்குள்ள தனித்த அடையாளம் அந்தளவு உக்கிரத்துடன் ஆழத்துடன் அவர்களிடம் இல்லை. நமக்கு உள்ளது போல் ஒரு சங்க மரபு அவர்களிடம் இல்லை.

.மேலும் இந்த மாறுபட்ட கண்ணோட்டங்களை அப்படியே தருகிறோம் எனும் கொள்கை ஆபத்தானது. சரி, நாளை காஷ்மீர் தீவிரவாதம் பற்றி பாடம் என்றால் இந்திய அரசுக்கு எதிரான அவர்களின் முஜாஹிதீன் பிரச்சாரத்துக்கு இடம் கொடுப்பார்களா? ஹிட்லரைப் பற்றி பாடம் என்றால் அவரது இனவாத நியாயத்தை தந்து அதற்கு தங்கள் கருத்தை சொல்லாமல் விடுவார்களா? மாட்டார்கள். ஏனென்றால் அது ஆபத்தானது. ஆக எல்லாருக்கான நியாயங்களும் இருக்கத் தான் செய்கின்றன. மனதை விரிவாக்கி அதை புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் அதே வேளை நமக்கான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவும் பாடநூல் உதவ வேண்டும். NCERT பாடபுத்தக கட்டுரைகள் அப்படி இல்லாத தோற்றத்தை தான் ஏற்படுத்துகின்றன.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...