Skip to main content

மற்றொரு இனிய பயணமும் சுவையான உரையாடல்களும்



கடந்த சனிக்கிழமை (04-02-12) திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நானும் முத்துக்கிருஷ்ணனும் உரையாற்றினோம். எனக்கு இது இரண்டாம் முறை. முத்துக்கிருஷ்ணன் ஊடகம் பற்றி நான் சிறுகதைகள் குறித்து. அந்த பள்ளியில் உள்ள இனிமையான உபசரிப்பு மற்றும் அமைதியான சூழல் ஒரு பயணியின் உல்லாசத்தை ஏற்படுத்தும். அங்குள்ள புத்திசாலியான மாணவர்கள் தொடர்ந்து இலக்கியம் படிப்பு மீது நமது நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள். இம்முறை பேசும் போது பெரிய கூட்டம். போன முறை கவிதை பட்டறையில் பார்த்த மாணவர்கள் அன்பாக ஆர்வமாக ஒளிதுலங்கும் கண்களுடன் கூட்டத்தின் நடுவில் இருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தனர். நவீன சிறுகதைக்கான பண்புகள், பிரபலமான மேற்கோள்கள், ஏழு வகையான சிறுகதைகள் என அறிமுகப்படுத்தினேன். பின்னர் செக்கோவின் வான்கா கதையை வாசித்து உரையாடினோம். ஒன்றரை மணிநேரம் போனதே தெரியவில்லை.
கடந்த முறை பகலெல்லாம் விருந்தினர் அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். உள்ளே செல்போன் டவர் எடுக்காது. எந்த மனிதக் குரலும் மனித வாடையும் உணராமல் ஒரு நூதனமாக தனிமை இருக்கும். இம்முறை முத்துக்கிருஷ்ணன் கூட இருந்ததால் அவருடன் பேசி சிரித்துக் கொண்டே இருந்தேன். கல்லூரி விடுதி நினைவுகள் கிளர்வதை தடுக்க முடியவில்லை. மனதுக்கு வயதாவதில்லை என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நன்றாக மனம் விட்டு சிரிக்க தடை நாம் வாழும் மாறாத இறுக்கமான சூழல்கள் தாம் என நினைத்துக் கொண்டேன்.
வரலாறு மற்றும் கணித ஆசிரியர்கள் முரளி மற்றும் ராதாகிருஷ்ணனை சந்தித்து போன முறை நிறுத்திய இடத்தில் இருந்து தொடர்வது போல் சரளமாக பேசிக் கொண்டிருந்தேன். முரளி தான் வாசிக்கும் நூல்கள் பற்றி சொன்னார். ராதாகிருஷ்ணன் தனக்கு ஒரு நாவல் எழுத திட்டம் உள்ளதாய் சொன்னார். எனது “கிரிக்கெட்டின் மாறும் நிறங்களை புத்தக கண்காட்சியில் வாங்கி வாசித்ததாய் சொன்னார். பொதுவாக கல்வி முறை, அதில் உள்ள ஊழல் என சுவாரசியமாக பேசினார். ஒரு அரசு உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு externalஆக சென்றாராம். அங்கு மாணவர்கள் C++ நிரலை மனப்பாடமாய் ஒப்பிக்கிறார்களாம். ஆனால் லேபில் ஒரு கணினி கூட திறந்து பயன்படுத்தப்படாமல் உறைபிரிக்காமல் இருக்கிறதாம். புத்தம் புதுசாய் இருக்கும் கணினிகளை பார்த்து அவருக்கு வியப்பு. விசாரித்தால் கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்று தெரிய வந்ததாம். இப்போதைக்கு காம்ர்ஸ் வாத்தியார்கள் தாம் கணினிக்கும் பொறுப்பாம். இப்படி ஆரம்பித்து பள்ளிக்கு externalஆக வந்த உடனே ஒரு வார சாப்பாட்டுக்கான மெனு பட்டியலை அளிக்கும் நபர்கள் வரை குறிப்பிட்டு விரிவாக பேசினார். சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்களுக்கு மிக கவர்ச்சியாக உள்ளதாக நேரடி பயன்பாட்டு பயிற்சிகள் மிகுந்ததாக உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் சற்று அதிகமாக எளிமைப்படுத்துப்படுவதாக, அதனால் தரம் தாழ்ந்து விட்டதாக விசனித்தார். மேலும் அப்பாடத்திட்டத்தின் படி பாடம் எடுக்க நிறைய உதவிக்கருவிகள் தேவைப்படுமாம். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே போதுமானதாக இல்லாத நிலையில் யார் கருவிகளை வாங்கப் போகிறார்கள் என்று அவநம்பிக்கை தெரிவித்தார்.
அங்குள்ள மெஸ் உணவில், குறிப்பாக பரோட்டா, நான் படித்த விடுதியின் அதே சுவை கொண்டிருந்தது. பொதுவாக விடுதி உணவு ஒரு சுவையில்லாத சுவையை கொண்டிருக்கும். ஒருவிதமாய் நாவு அதற்கு பழகிப் போய் விடும்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசன் ஒரு நல்ல இலக்கிய வாசகர், சமூக ஆர்வலர். அவர் எஸ்.ராவுடன் இணைந்து சிறுகதைகளை புதுமையாக கற்பிக்கும் ஒரு புது புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறுகதை வாசிக்கப்பட்டு, நாடகமாக்கப்பட்டு, திரும்ப சொல்லப்பட்டு விளக்கப்படுவதே அந்த முறை. சிறு சிறு பிரிவுகளாய் மாணவர்களை பிரித்து ஒரே கதையில் வேறுபட்ட முறைகளில் இவ்வாறு இயங்க வைப்பார்கள். அவர் தனது புது திட்டங்களை சொல்ல சொல்ல கல்வித்துறை மீது எனக்குள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுவானது. தனிநபர்களாலும் ஒரு சீரழிந்த சூழலை ஓரளவுக்கு சீர்திருத்த முடியும். முழுக்க கட்டமைப்புகளையே குற்றம் சொல்லி ஓய்வதில் பயனில்லை. எங்காவது ஓர் அணில் ஒரு சிறுகல்லை தூக்கிப் போட்டால் போதும். எதிர்காலம் நோக்கின பாலம் எழுந்து விடும்.
எஸ்.ஆர்.வி பள்ளியில் ஆண்டுமலரை பார்த்தேன். கனமான பிரம்மாண்ட இதழ். புரட்டியபோது அசோகமித்திரன் உள்ளிட்ட பல முன்னோடிகள் அங்கு வந்துள்ளதை கண்டேன். மிக நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிக்கு வந்த அனுபவத்தைக் குறிப்பாக எழுதுகையில் கூட அசோகமித்திரனின் நகைச்சுவையும் கூர்மையும் பளிச்சிடுகின்றன.
திரும்ப ஞாயிறு சென்னைக்கு திரும்பியதுமே எழுத வேண்டியவை, படிக்க வேண்டியவை, செய்ய வேண்டிய வேலைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், தூங்க வேண்டிய தூக்கம் என்று பரபரப்பு பழையபடி தொற்றிக் கொண்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...