Skip to main content

தமிழக வானிலை அறிக்கை – மோனிகா, ரமணனில் இருந்து கடவுள் வரை



ஆரம்பத்தில் வானிலை அறிக்கைகள் தொலைக்காட்சி செய்தியின் முடிவில் சில அசுவாரஸ்யமான வாக்கியங்களாக சுருக்கப்படுவதில் இருந்து இன்று கிராபிக்ஸ் மற்றும் வரைபடங்களையும் கொண்டு செல்வி மோனிகாக்கள் திக்கித் திக்கி தலையை ஆட்டி ஆட்டி விளக்குவது வரை வளர்ந்துள்ளது. பருவநிலை அறிக்கைகள் அறிவியல்பூர்வமாகிய சூழலில் அறிவிப்பாளினியும் மரபான சேலையில் அல்லாமல் நவீன ஆடையில் வருவதும் கவனிப்புக்குரியது. இந்த மசாலா சேர்க்கைக்கு ஒரு காரணம் இந்தியாவில் பொதுவாக மழைக்காலங்களில் தான் வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பது.
காய்கறி விலை ஏற்றம், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு செய்திகளில் இருந்து அன்றாட போக்குவரத்தை பாதிக்கும் இன்று குடை மழைகோட்டு எடுக்க வேண்டுமா, சாலையில் எந்தளவு நீர்த்தேக்கம் போன்ற கேள்விகள் வரை உயிர் பெறுகின்றன. நமது பருவகாலம் நான்காக பிரிக்கப் படுகிறது. குளிர்காலம், கோடை, முன்மழைக்காலம், மழைக்காலம். ஆனால் நமது பருவச்சூழல் ஐரோப்பாவில் போல் இங்கு தினசரி வாழ்வை தொடர்ந்து பாதிக்கிற ஒன்றாக இல்லை. போக்குவரத்தை பாதிக்கும் கடும் பனிப்பொழிவு, புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்கள் இங்கு குறைவே.
போலாந்து இயக்குநரின் டெகலாக்ஸ் எனும் தொலைக்காட்சி படங்களில் ஒன்றில் ஒரு விஞ்ஞானி தனது மகனுக்கு வெளியே விளையாடுவதற்கு தோதாக சூழல் உள்ளதா என்று வானிலையை சில அறிவியல் சூத்திரங்கள் கொண்டு ஆய்ந்து சொல்வார். வெளியே தரையில் அடர்த்தியான பனி படர்ந்துள்ளது. குறிப்பாக, உறைந்துள்ள ஒரு ஏரியில் பனிச்சறுக்கு விளையாட குழந்தைகள் பிரியப்படுகிறார்கள். வானிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறக் கூடியது. அப்பாவின் விஞ்ஞான கணிப்புக்கு எதிராக ஏரி உருகி அவரது மகன் மூழ்கி இறந்து போகிறான். நாத்திகவாதியான அப்பா தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு அழுகிறார். ஒருவிதத்தில் மனித அறிவு எவ்வளவு குறைபாடுள்ளது, நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வளவு பிரம்மாண்டமான எளிதில் வரைவறுக்க முடியாத கணித சூத்திரங்களால் இயங்குவது என்பதை நடைமுறை வாழ்வில் அடிக்கடி நினைவுபடுத்துவதற்கான ஒரு கருவியாகவும் வானிலை அறிக்கைகள் இயங்குகின்றன. இவ்வாறு மழை நாட்களில் ரமணனின் சொற்களில் அடிக்கடி கடவுளும் எட்டிப் பார்க்கிறார்.
மனித அறிவின் எல்லை பற்றி இப்படியான உயர்ந்த தத்துவ விசாரங்களில் இருந்து டீ.வியில் ரமணனின் கணிப்புகளும், அவரைத் தொடர்ந்து “இன்று டீவியில் மழை பெய்யாது என்றால் கண்டிப்பாக பெய்யும் என்று நக்கலாக குடை எடுத்துக் கொண்டு செல்லும் சினிமா நகைச்சுவை பாத்திரம் வரை நமது மீடியாவிலும் பொதுமக்கள் பிரக்ஞையிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. வானிலை கணிப்பின் நிச்சயமின்மை ஜோதிடத்தை போன்றே அதனளவிலான சுவாரஸ்யம் கொண்டது. இதனாலேயே கிரகங்களின் நிலையை அவதானித்து வாழ்வைப் போன்றே பருவநிலையையும் கணிக்க இந்தியர்கள் கி.மு 300இலேயே முயன்றிருக்கிறார்கள். 
(2011 டைம்ஸ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...