Skip to main content

ஒரே முகபாவம் கொண்ட பூனை



ஒரே முகபாவம் கொண்ட பூனையின்
முகம்
வெளிப்படையாய் காட்டுவது
உண்மை அல்ல
ஏனெனில்
அம்முகம் ஒருபோதும் மாறாமல்
இருக்கிறது

யாருக்கோ காத்திருப்பது போல்
மறந்த எத்தனையோ முகங்களைப் போல்
அது மாறினாலும் மாறாமலே இருக்கிறது

அது முகமோ
அம்முகத்தின் ஜாடை ஒரு சேதியோ
அல்ல
என்று உறுதியாக தெரிகிறது

நிலைத்த முகமென்பதால்
அது சிந்தனை வயப்பட்டும் இல்லை
என்று
நம்பத் தலைப்படுகிறோம்

மணிக்கணக்காய் ஒரே இடத்தில்
நகராமல் கிடந்தாலும்
அது
எதற்கும் காத்திருக்கவில்லை

காத்திருப்பவர்கள்
எதை நோக்கியோ நகர்ந்து கொண்டிருப்பவர்கள்

ஒரு கனத்த இறுக்கமான
கருங்கல் குன்று
எதற்காகவும் காத்திருக்கவில்லை
அதைப் போன்றே
பூனையும்

பூனை
புது இடத்திற்கு நகர்வது
ஒரு பூகோள வரைபடத்தை
இடம் மாற்றி வைப்பது போல

விநோத ஓசைகளுக்கு
தன் செவிகளை திருப்பி
திசைகளை சோதிக்கும் பூனை
நகர்வுகளை நம்புவதில்லை

காற்று அடிப்பதும்
சூரியன் உதிப்பதும்
பேராறுகள் புதுத் தடங்களை தேர்வதும்
ஒரு பூ உதிர்வதும்
ஒரு சொல் மற்றொரு சொல்லை நோக்கி செல்வதும்
பிரயாணம் அல்ல
எந்த இடத்துக்கும் சொந்த மில்லாத ஒன்று
எந்த இடத்துக்கு செல்ல முடியும்
என பூனை கேட்கிறது

வீடெங்கும் தன் மயிர்களை
உதிர்க்கும்
பூனை
தான் அவ்விடங்களில் எல்லாம்
இருக்கவில்லை
என்று வாதிக்கிறது

அடிக்கடி வழமையான இடங்களில்
இருந்து மறையும் பூனை
இருட்டிலோ வெளிச்சத்திலோ
மறைவிலோ வெட்டவெளியிலோ
எங்கும் இருக்கலாம் என்பதாலே
அதை தேடுவதும்
மிக சிரமமாகிறது

டீவி பார்க்கும் பூனை
பாட்டு கேட்கும் பூனை
எலி பிடிக்கும் பூனை
மடியில் மட்டும் தூங்கும் பூனை
ரகசியமாய் குட்டிகளிட்டு வெளிப்படும் பூனை
குழந்தைகளால் துன்புறுத்தப்படும் பூனைகள்
ஒரு ஓய்வுப் பொழுதில் நம்மை தேடி வரும் அனாமநேய பூனை
ஏதோ ஒரு பொறுப்புடன் திரியும் பூனைகள்
யாவும் பூனைகள் அல்ல

அவை
பல்வேறுபட்ட வேடங்கள்

அசலான பூனை
தன் வேடத்தை ஒரு போதும் களையாது
தன் முகத்தை
ஒரு போதும் மறக்க முடியாததால்
அது
எந்த முகத்துடன் பேசினாலும்
ஒரே முகத்துடன் கவனிக்கும்

பூனையுடன் பேசும் போது
எந்த முகத்தையும் அணியலாம்
அதன் முகத்தை அணிந்தால் மட்டும்
நம்மை பொருட்படுத்தாது

முந்தின நாள் இருந்த இடத்தில்
அதற்கு முந்தின நாளும்
நாளைய இடத்தில்
இன்றும்
இருக்க முடிவதால்
தொடர்ச்சியான எதையும்
விட்டுவிட்டு செய்வதே சாத்தியம் என்பதால்
அது
தனக்கு நெருக்கமாய் அசைவது
காலம் மட்டுமே என்றபடி
வைக்கப்பட்ட இடத்திலே வைக்கப்பட்டு விட்ட
ஒரு பிளாஸ்டி புட்டியை
கைகளால் நகர்த்தப் பார்த்து
ஆர்வம் இழக்கிறது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...