Skip to main content

இல்லாத கையும் பாராட்டுகளும்








எங்கள் கல்லூரியின் கலைநிகழ்ச்சிகளின் போது மேடை ஆட்டத்துக்கு இணையாக பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு மாணவன் ஆவேசமாக நடனமாடிக் கொண்டிருந்தான். ஒரு முழங்கை இல்லாத மாணவன். நிறைய மாணவர்கள் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மாணவிகள் மிகுந்த ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கையற்ற மாணவனை ஒரு ஜோடி கண்கள் தனியாக கவனித்தன. ஹலோ எப்.எம்மில் இருந்து விளம்பரம் செய்ய வந்திருந்த தொகுப்பாளர் மேடையில் தோன்றி அந்த ஊன இளைஞனை பாராட்டி பேசினார். அவனோடு புகைப்படம் எடுக்க விரும்புவதாக சொல்லி அந்த ஆசையும் இவ்வாறு சொல்லி நிவர்த்தி செய்தார் “எப்பவுமே அடுத்தவங்க தான் ஆர்.ஜே வோட போட்டோ எடுக்கணும்னு விரும்புவாங்க, ஆனால் ஒரு ஆர்.ஜேவே உங்களோட போட்டோ எடுக்க விரும்பறாங்க. அந்த அதிபிரபலமான ஆர்.ஜெ யாரென்று கேட்காதீர்கள். எனக்கு தெரியவில்லை. விசாரித்து பார்த்தால் அங்கிருந்து யாருக்குமே தெரியவில்லை.
அந்த ஊன இளைஞன் மிக உற்சாகமாக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள். நடன நிகழ்ச்சி மேடையில் தொடர்ந்தது. அந்த மாணவன் பக்கமாய் மேலும் பல முழுஇளைஞர்கள் நகர்ந்தார்கள். அதுவரை வெவ்வேறு இடங்களிலாய் குழுக்களாய் ஆடிக் கொண்டிருந்த அவர்கள் ஊன இளைஞனின் பக்கமாய் குவிந்து ஆடத் தொடங்கினர். எல்லாரும் கூட போட்டொ எடுக்க விரும்பும் ஆர்.ஜெவின் பார்வையை ஆகர்சிக்க அதுவே உசிதமான இடம் என்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்கள் அவனை விட நன்றாக ஆவேசமாக அதிக தூசை கிளப்பி அதிக கூச்சலை ஏற்படுத்தி தான் ஆடினர். ஆனால் பார்க்க வேண்டியவரின் பார்வை விழவில்லை. ஆனால் பாராட்டை பெற்ற இளைஞன் அதற்கு மேல் ஆடாமல் நின்றிருந்தான். முகத்தில் மெல்லிய கூச்சம். மேடையில் பாராட்டு பெறும் அனைவரும் கூசி ஒதுங்குவதில்லை என்பதை கவனிக்க.
அடுத்து கனாக்காணும் காலங்கள் தொடரில் நடித்த அன்றைய விழாவின் சிறப்பு விருந்தினரான பிரபு என்பவர் மேடையில் தோன்றி நடன போட்டி வெற்றியாளர்களை அறிவிக்க தொடங்கினார். அவர் திடீரென்று தனக்கு அந்த ஊன இளைஞரை மிகவும் பிடிக்கும் என்று கூறி மேடையில் அழைத்து அணைத்து பரிசளித்தார். கரகோஷம் வலுத்தது. ஊன இளைஞர் அதையும் ஏற்றுக் கொண்டு இறங்கினார். அவர் மேலும் மேலும் பிரகாசமாக உற்சாகமாக மாறிக் கொண்டிருந்தார். ஒருவர் மகிழ்ச்சி அடைவதை பார்த்து முதன்முதலாக எனக்கு உறுத்தலாக இருந்தது. அவரை கவலையாக பார்த்தேன்.
போட்டியில் பங்களிக்காத ஒருவரை பாராட்டுவதும் பரிசளிப்பதும் கேட்காமலே உங்கள் சட்டைப்பையில் பிச்சை இடுவதற்கு சமம். மேடை வெளிச்சம் தங்கள் மேலும் அதிகமாக விழ அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த condescending நிலைப்பாடு ஒரு உயர்வு மனப்பான்மையில் இருந்து உருவாவது. இந்த நோய்மை கொண்ட மனிதர்கள் பெண்ணியம், தலித்தியம், கருணை என்றெல்லாம் போலியாக ஆவேசப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆவேசப்படும் அதே தருணத்தில் அவமானப்படுத்தவும் தயாராக இருப்பார்கள். ஒரு அலியை பார்த்து நகைக்கும் பெண் தன் பெண்மையை எண்ணி உள்ளூர பூரிப்பதை போன்றது இது. எதிர்காலத்தில் இந்த இளைஞர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார். அவர் மீது போலியான கருணையையோ வெறுப்பையோ மக்கள் தங்கள் அரிப்பை அடக்கும் பொருட்டு காட்டிக் கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களின் மிதியடியாக இல்லாமல் இருக்க ஒரு ஊனன் என்ன செய்யலாம்?

தன்னை மதிக்கும் நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நண்பராகலாம். அது சாத்தியமில்லை. அசட்டுத்தனமாய் நடப்பவர்கள் மத்தியில் தான் நாம் பெரும்பாலான பொழுதுகளில் வாழ்ந்தாக வேண்டும். அவர்களை தவிர்க்க முடியாது. ஆக சுயமரியாதை விபத்துக்குள்ளாகாமல் பார்க்க தன்னை அவன் ஒரு படி உயர்த்திக் கொள்ள வேண்டும். சந்திக்கிறவர்களிடம் தான் அவர்களை விட மேல் என்பதை மிக நுட்பமாக உணர்த்தி விட வேண்டும். மிகவும் பணிவாக ஒருவர் தன்னை மேலானவராக காட்டிக் கொள்ள முடியும். அது ஒரு கலை. லௌகீகமாகவோ அலௌகீகமாகவோ ஒருவர் தம்மை மேலுயர்த்திக் கொள்ள முடியும். இரண்டும் சரியே. இப்படி முழுமையானவர்களை விட தான் ஒரு அடி மேலே என்று ஊனன் நிறுவினால் மட்டுமே அவர்கள் இவனை தமக்கு சமம் என்று கருத பிரயத்திப்பார்கள். அவர்களை விட உயரமாக ஒரு ஊனன் என்றுமே இருக்கப் போவதில்லை என்றாலும் சமமாகவேனும் இருப்பதற்கு இதுவே ஒரே வழி.
மனித மனம் கீழ்மையானது என்று பழிக்க நான் இதை எழுதவில்லை. ஊனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பலவீனமானவர்கள். இதை ஒரு மனச்சிக்கலாக மாற்றி துன்புறுகிறார்கள். துன்பம் கழிக்க சகமனிதனை குத்துச்சண்டை மூட்டை போல் பயன்படுத்துகிறார்கள். மனைவி கணவன் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் அனைவரும் பிறரது அழுக்கை அலம்பவே வாழ்நாளில் பெரும்பகுதி வீணடிப்பதை பார்க்கிறோம். எத்தனை கெஞ்சல்கள், சமாதானங்கள், நியாயப்படுத்தல்கள், சச்சரவுகள்! கவபட்டா இதைப் பற்றி “மரு என்றொரு கதை எழுதியிருப்பார். ஒரு மருவுக்காக கணவன் மனைவியை படாத பாடு படுத்துகிறான். அவளை பெரும் குற்றவாளி ஆக்குகிறான். ஆனால் அந்த மருவை கிள்ளி எறியவே முடியாது. காரணம் அது அவனுக்குள் நமக்குள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. அது வெறுமனே காலோ கையோ மட்டும் கிடையாது என்பதை நிச்சயமாக சொல்லலாம்!
தமிழின் முன்னோடிகளில் அதிகமாக கொண்டாடப்படுவர்கள் இளமையிலேயே இறந்து போனவர்கள் அல்லது எழுதுவதை நிறுத்தினவர்கள் அல்லது மிகக் குறைவாக எழுதினவர்கள். நமக்கு அழிபவர்களை அல்லது அழிந்தவர்களை சிலாகிக்கும் ஒரு மனக்கோணல் உள்ளது என்று அடிக்கடி சொல்வார் மனுஷ்யபுத்திரன். இதுவும் அதுதான். கொஞ்சம் அறிவுஜீவித்தனமான மரு வேட்டை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...