Skip to main content

You are my sweet wife


 
ஒரு இரவில் என் மனைவியுடனான உரையாடலின் போது நான் கோமா நிலையின் இருந்த போது எப்படி நடந்து கொண்டேன் என்பது பற்றி விசாரித்தேன். மெல்ல மெல்ல நினைவுபடுத்தி சொன்னாள். கோமாவில் இருந்து பாதி மீண்ட நிலையில் என்னால் மயக்க நிலையில் கண் திறவாமல் பேச மட்டுமே முடிந்தது. அவள் என்னை பார்க்க வந்த போது நான் “எனக்கு ஜீனோவை பார்க்க வேண்டும், கொண்டு வா என்றிருக்கிறேன். ஜீனோ எங்கள் நாய்க் குட்டி. நான் என் நண்பர்களையோ உறவினர்களை குறிப்பிடவில்லை!
பிறகு நான் கண் திறந்த பின் அவள் என்னிடம் மார்க்வெஸின் “One Hundred Year’s of Solitudeநாவலை காட்டி “இது என்ன என்றிருக்கிறாள். நான் புத்தகத்தின் பெயரை சரியாக சொல்லி விட்டு “இதை நான் மொழியாக்கம் செய்து வருகிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறேன். அது தவறு. நான் மொழிபெயர்த்து வருவது மார்க்வெஸின் சுயசரிதையான “Living to Tell a Tale. இதை மனைவி குறிப்பிட்ட போது எனக்கு தலைப்பு குழம்பிப் போனது பொருட்டாகப் படவில்லை. மொழிபெயர்ப்பை ஏன் மீள மீள அழுத்தி சொன்னேன் என்பதே வியப்பாக இருந்தது. ஏனெனில் உயிரோசையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பின் மார்க்வெஸ் மொழிபெயர்ப்பில் இருந்து என் க்வனம் திரும்பி இருக்கிறது. மொழிபெயர்ப்பை விட உரை எழுதுவதை, புதிய தளங்களை அதன் மூலம் கண்டடைவதை மேலும் முக்கியமானதாக கருதி வந்திருக்கிறேன். பாதி கோமாவில் என் பிரக்ஞை அல்ல பேசியது; அபோத மனம். அபோத மனதில் மொழிபெயர்ப்பு பணி ஏன் பிரதானமாக இருந்தது?
ஒரு நாள் கழித்து மாலையில் ஒரு படம் பார்த்து முடித்த போது சட்டென்று தோன்றியது. அந்த மொழியாக்கத்தை சிறிது காலமாய் தூசு படிய விட்டதற்கு என்னுள் ஒரு குற்றவுணர்வு உள்ளது. அபோத நிலையில் மனம் திரையை திறந்து அக்குற்றவுணர்வை வெளிக்கொணர்ந்தது.
அடுத்து அவள் சொன்னது தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது. நான் கோமாவில் இருந்து பாதி விழித்து கண் திறக்க முடிந்த போது அவள் வந்து என் முன்னால் நிற்கிறாள். என்னிடம் கேட்கிறாள் “நான் யார் தெரிகிறதா?. முதலில் அவளிடம் நான் சொன்னது என்ன? “you are my sweet wife. என் வாழ்வில் முழு பிரக்ஞையுடன் இருந்த எந்த வேளையிலும் நான் இப்படி ஒரு வாக்கியத்தை அவளிடம் சொன்னதில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...