Skip to main content

பிரபஞ்சனின் “காகித மனிதர்கள்”





பிரபஞ்சனின் காகித மனிதர்கள் நாவல் கல்லூரி மட்டத்தில் பேராசிரியர்களிடம் உள்ள ஊழல், வேசைத்தனம், மெத்தனம், அறிவீனம் ஆகியவர்றில் ஆரம்பித்து காவல்துறை, அரசியல்வாதிகள் என்று ஒவ்வொரு மட்டமாக மேலேறி இந்த மேன்மையான பண்புகளை அவர்களிடமும் கண்டு கண்டிக்கிறது, விமர்சிக்கிறது, சாடுகிறது. இந்நாவல் நக்கீரன் கோபாலின் உதயத்தில் வெளிவந்து பின்னர் நாவல் வடிவம் பெற்றது. நாவலில் படிக்கிறவர்களுக்கு ஒரு சின்ன குழப்பம் உள்ளது. அதாவது ஒரு விமர்சனத் தடுமாற்றம். சுருக்கமாக, வணிக நாவலா தீவிர நாவலா என்பதே அது. இந்நாவலை வணிக நாவலில் இருந்து மாறுபடுத்திக் காட்டும் சில பண்புகள் உள்ளன. முதலில் அவை.

வடிவ ரீதியாக காகித மனிதர்கள் சாவகாசமாக ஆரம்பிக்கிறது. வர்ணனைகளில் (சுஜாதா போல்) கிளுகிளுப்பு முயற்சிகள் இல்லை. முடிவில் நீண்ட உபதேசம் இல்லை; முடிவில் வலிந்து திணிக்கப்பட்ட நேர்மறைத் தன்மை கூட இல்லை. கள அமைப்பை பொறுத்த மட்டில் சாகச/உணர்ச்சிகர நாயகனை பிரதானப்படுத்த இல்லை; மத்தியதர வாழ்க்கை பின்னணி இல்லை. மையநீரோட்டத்தில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை (குறிப்பாக எம்.ஜி.ஆரை) வலுவாக விளாசுகிறது. அடுத்து வணிக நாவலுடனான ஒற்றுமைகள்.
(அ) தர்மாவேசம். தீவிர நாவலில் இத்தன்மை செல்லுபடியாவது இல்லை. சமூக ஆய்வுகள், உளவியல், பரிணாமவியல், இருத்தலியல் தொடர்பான தத்துவங்கள் மற்றும் சொல்லாடல் அரசியல் பற்றின மொழியியல் பிரக்ஞை காரணமாக நவீன தீவிர நாவலில் எழுத்தாளன் அண்டுராயர் கழன்று போகும் அக்கறை இல்லாமல் சமூகத் தீமை நோக்கி சாடுவது இல்லை காரணம் நவீன எழுத்தாளனுக்கு மனிதனின் நன்மை மீதான நம்பிக்கையை விட அவநம்பிக்கையே அதிகம். (குறைந்த பட்ச அறவுணர்வு எழுத்தாளனுக்கு உள்ளதை நான் மறுக்கவில்லைதான்.) நம்பிக்கை மிகுதியால் தான் கோபம் வருகிறது; ஏமாற்றப்படும் உணர்வுடன் கண்டிக்கும் உரிமையும் இலவசமாக சேர்ந்து கொள்கிறது. பெரும்பாலான நவீன நாவலாசிரியர்கள் மனிதன் மேன்மையடைந்தால் மட்டுமே ஆச்சரியப்படுவார்கள்.
(ஆ) மக்கள் போராட்டம். பிரபஞ்சன் மாணவர் போராட்டத்தை பக்கத்துக்கு பக்கம் விதந்தோம்புகிறார். போராட்ட குணத்தை கைவிடக் கூடாது என்கிறார். ஆனால் எந்த போராட்டமும் அவர் நம்புவது போன்று பரிசுத்த நோக்கத்துடன் நிகழ்வதில்லை. குறிப்பாய் கல்லூரி மாணவர்களின் போராட்ட நோக்கமே வேறு. அதிகார மையத்தால் அவர்கள் தூண்டி விடப்பட்டு ஆட்டுவிக்கப்படுவதை கண்கூடாய் பார்த்திருக்கிறேன். பிரபஞ்சனுக்குள் இருக்கும் இந்த கற்பனாவாதப் போக்கு வணிகச் சூழலுக்கானது.
அடுத்து நல்லவர்கள். நல்லவர்கள் மீதான நம்பிக்கை வெகுகாலம் முன்பிருந்தே செத்து விட்டது. வணிகப் பத்திரிகைகள் அதை ஏதோ ஒரு புதைபடிவ வடிவத்தில் தக்க வைக்கின்றன. பிரபஞ்சன் நாவலில் மூன்று வகை மனிதர்கள் வருகிறார்கள்.
(1)     மகா நல்லவர்கள், நாணயஸ்தர்கள், கவரிமான் வால் முளைத்தவர்கள்.
(2)     மகாகெட்டவர்கள். கெடுதியில் ஊறித் திளைப்பவர்கள். அகங்காரத்தை பிரதான தீமையாக கொண்டவர்கள்.
(3)     இடைப்பட்டவர்கள்.
இந்த மூன்றாவது வகையினர்தாம் “காகித மனிதர்களையும் ஒரு இடைப்பட்ட நாவலாக மாற்றி விடுகிறது.
கடைசியாக, இந்நாவலில் கெட்டவர்கள் மட்டுமே காமத்தை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள். நல்லவர்களிடையே ஆண் பெண் நட்பு காமமற்ற அல்லது காமம் நாசூக்காக மறைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மாணவர்கள் இடையே எந்த வகையில் எல்லாம் காமம் இழையோடும் என்பது பற்றின எந்த பதிவும் நாவலில் இல்லை. நாவலின் பிரதான வில்லனின் தீமைகள் காமம் சார்ந்தது என்பதாலும், மிகையான காம விழைவு வாழ்வை அழிக்கும் என்று நாவலில் ஓரிடத்தில் உபதேசிக்கப்படுவதாலும் மாணவர்களிடையே ஒரு பரிசுத்தத்தை நிலவ வைக்க பிரபஞ்சன் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால் காமத்தின் தீய விளைவுகள் பற்றின பதற்றம் என்பது ஒரு மத்தியதர வாழ்க்கை மதிப்பீடு என்பதில் சந்தேகம் இல்லை.
காகித மலர்கள் பற்றின ஒட்டுமொத்த விமர்சனம் அல்ல இது. அவர் எழுதின இந்நாவல் எப்படி மதில் மேல் நின்று மியாவ் என்கிறது என்று வியக்கும் முயற்சி மட்டுமே.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...