Skip to main content

பள்ளிச்சாலை: குறும்பட விமர்சனம்


படத்தொகுப்பு: அன்பழகன்


ஒளிப்பதிவு: முத்து

கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: செல்வகணேஷ்



”பள்ளிச்சாலை” குழந்தைகளின் களங்கமற்ற உலகை எதார்த்தமாக, ஏறத்தாழ அவர்களது மொழியிலேயே சொல்லி உள்ள படம். படத்தின் கதைக்களன் சற்று வினோதமானது. ஆரம்ப, இறுதிக் காட்சிகளின் சில வினாடிகளை மட்டும் பார்ப்பவர்களை இதை ஒரு பொதிகை டீ.வி வகையறா செய்திப்படம் என்று கருதி விடக் கூடும்.
சாலையில் மஞ்சள் விளக்கு எரிந்தால் தயங்கவும், சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்கவும் என்பது போன்ற விதிகளை பிரச்சாரம் செய்வது தான் இப்படத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக உள்ளது. ஆனால் முயலுடனான ஓட்டப்பந்தயத்தில் ஆமை செய்தது போல் இயக்குநர் செல்வகணேஷ் போக்குவரத்து மேடையில் இருந்து முதல் காட்சி ஆரம்பித்த சில நொடிகளிலேயே இறங்கி குழந்தைகளோடு அவர்களது கேலி, விளையாட்டு, மோதல், பிணக்கு, இணக்கம், பரஸ்பர புரிதல் ஆகிய கட்டற்ற வெளிப்பாடுகளோடு ஐக்கியமாகி விடுகிறார்.



குட்டிப்பெண் இந்திராவின் கோழி சுசீலாவுக்கு உடல்நிலை கெட அவள் மிகுந்த துயரமுற்று அழுகிறாள். தோழிகளும் தோழர்களுமாய் ஒரு குட்டிப் படை கோழி டாக்டரான மற்றொரு சிறுவனை தேடிக் கிளம்புகிறது. அவன் கொல்லையில் வெளிக்கு போய் கொண்டிருக்கிறான். “டாக்டரை இப்போ பாக்க முடியாது அப்புறமா வாங்க” என்ற டாக்டரின் நண்பன் கும்பலை விலக்க முயன்று தோற்றுப் போகிறான். டாக்டர் பாதியில் விட்டு விட்டு கழுவாமல் கொள்ளாமல் சைக்கிளில் ஏறிக் கிளம்புகிறான். சைக்கிளில் நின்றபடியே ஓட்டுகிறான். இதற்கு ஒரு சிறுவன் தீவிரமான முகத்துடன் காரணம் அளிக்கிறான் “உக்காந்தா ஒட்டிக்கிடும் இல்ல”. இக்காட்சியில் தெரியும் உற்சாகமான நகைச்சுவை முற்றிலும் குழந்தைகளின் மனநிலையில் தோன்றி, விமர்சன, ஒழுக்க விகல்பங்களற்று வெளிப்படுவது. தமிழின் பொதுவான குழந்தைப் பட நகைச்சுவை வளர்ந்தவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் நிலைப்பாடுகள் குழந்தைமையின் ஒட்டுமீசை ஏந்தி வருவது மட்டும் தான்.



ஒரு ஆவணப்பட பாணியில் ஒளிப்பதிவு செயல்படுகிறது. இப்படத்தின் சிறந்த காட்சிகள் இவ்வாறு நாடகீய அத்துமீறல்கற்று சாமான்ய வாழ்க்கை பதிவாகுபவை தாம். உதாரணமாக முதல் காட்சியில் சிறுமி இந்திரா வாசல் வழியில் நின்று சீருடை அணிய தண்ணீர் குடம் சுமந்து வரும் அவள் அம்மா அலட்டாமல் அவளை அனிச்சையாக சற்று தள்ளி விட்டு கடந்து செல்கிறாள். பிற்பாடு குழந்தைகள் விளையாடும், கல்வீசி மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒருவர் கூட படக் கருவியை பார்ப்பதில்லை. இவ்வாறு படம் முழுக்க பிரக்ஞையின் ஊடுருவல்கள் இல்லாமல் குழந்தைகளை நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநர் செல்வகணேஷை பாராட்ட வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாகவே வாழும் மிக அரிய தமிழ்ப்படங்களில் “பள்ளிச்சாலையும்” ஒன்று.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...