Skip to main content

தாகம் – குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்பட விமர்சன தொடரில் இவ்வாரம் ’தாகம்”

எழுத்து, இயக்கம்: மா.யோகநாதன்


இசை: பா.சதீஷ்

படத்தொகுப்பு: பா.பிரமோத்

ஒளிப்பதிவு: சீ.அரவிந்த்குமார்




”தாகம்” ஒரு தேர்தல் பிரச்சார மைக்கை விட சத்தமான படம். மரம் வெட்டுதல் போன்ற இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இயற்கை வளங்களை, குறிப்பாக நீர்வளத்தை, கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிப்பதே இப்படத்தின் இயக்குநர் மா.யோகநாதனின் உத்தேசம். இந்த பரப்புரையில் இயக்குநர் இரு தவறுகள் செய்கிறார்.
சூழலியல் பிரச்சனை பன்முகத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது. உதாரணமாக, இந்த வருட கோடையில் வெப்பம் அதிகம் ஆனதற்கான காரணங்களில் அப்காகினிஸ்தான் போர் வரை அடக்கம். இயக்குநர் உலக வெப்பமயமாதலை ஒரு விவசாயி நுண்பேசி, கார், வீடு வாங்கி, சட்டை பேண்ட் அணிந்து தலை சிலுப்புவதற்காக பேராசைப்பட்டு சில மரங்களை வெட்டி விற்கும் பாவச்செயலின் விளைவாக சுருக்கி விடுகிறார். இப்படியான பாமர நம்பிக்கையை பரப்புவதற்காக கணிசமான பணம் மற்றும் மனித ஆற்றல் விரயமாக்கியுள்ள மா.யோகநாதன் அதற்கு பதில் சில மரக்கன்றுகளை நட்டு திருப்தி உற்றிருக்கலாம். அடுத்து சினிமாவில் அரைப்பக்க வசனம் கடத்தும் சேதியை ஒரு அரைநொடி நேர காட்சியால் மேலும் அழுத்தமாய் சொல்ல முடியும். சினிமாவின் குறிப்பிடத்தக்க சிறப்பே காட்சிகளின் மூலம் மொழியைக் கடந்து பார்வையாள மனதுடன் உரையாட முடிவது தான். ஆனால் மா.யோகநாதன் சினிமா மொழியை புறக்கணித்து வசனங்களின் சிலுவையில் ஏறிக் கொள்கிறார். உதாரணமாக முதல் காட்சியில் புயலடித்து மரம் சாய்ந்துள்ளதை நாயகனான அவினாசி கவனிக்கிறார். புயலின் பாதிப்பை காட்ட இலை தழைகளும், குப்பை பொருட்களும் சிதறிக் கிடக்கும் ஒரு காட்சி போதும். ஆனால் அவினாசியை “நேத்து புயலடிச்சிருக்கு போலே” என்று குளோசப்பில் சொல்ல வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை அவினாசிக்கு கோபமோ சிரிப்போ வருவது போல் காட்சியில்லை. இருந்தால் “ஆஹா எனக்கு கோபம்/சிர்ப்பு வருது போல” என்று சொல்ல செய்திருப்பார். அவினாசி புயலில் விழுந்த மரத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு தோட்டத்து மரமாக வெட்டி விற்கிறார். இப்படி அவர் பணத்தாசையால் பீடிக்கப்பட்டு இயற்கையை அழிப்பதை சொல்லவும் இயக்குநர் நிறைய காட்சிகளை வீணடிக்கிறார். இறுதியில் செல்லமுத்து என்ற கோமணதாரி ஒரு சொம்பு தண்ணீரில் குளிப்பதை காட்டி ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதை விளக்குகிறார். பின்னரும் திருப்தி அடையாமல் அவினாசி சூடாகி விட்ட தன் காருக்குள் ஊற்ற தண்ணீர் தேடி பொட்டல் வெளி எல்லாம் அலைந்து தளர்ந்து வீழ்ந்த பறவையை போல் மண்ணில் கிடப்பதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார். அவிநாசி, அவரது தாய் முதல் சொம்பு நீரில் குளிக்கும் செல்லமுத்து வரை அனைவரும் படுமோசமாக நடித்திருந்தாலும் நம்மால் மன்னிக்க முடியாதது படத்தொகுப்பாளர் பா.பிரமோத்தை தான். ஓட்டைக் குடத்தால் மொண்டு மொண்டு ஊற்றினால் தாகம் எப்படி தணியும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...