சொல்வனம் இணையதளத்தில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதை
முன்கதவு வழியாக ஒவ்வொரு காலையும்
தொப்பியின்றி குடையின்றி
காசின்றி
தனது நாய் கூண்டுக்கு சாவி இன்றி
தளர்-ஓட்டத்தில் நாய் வெளியேறும் விதம்
என் இதயத்தின் வட்டத்தட்டை பால் போன்ற பெருமிதத்தால்
நிரப்ப ஒருபோதும் தவறுவதில்லை.
தாங்கமுடியாத கவலைகள் அற்ற வாழ்வுக்கு
இதைவிட சிறப்பான உதாரணம் யார் வழங்க முடியும்?
தனது திரைச்சீலையற்ற குடிசையில்
ஒற்றை தட்டு, ஒற்றை கரண்டியுடன் தோரோ?
தனது குச்சி மற்றும் புனித டயபர்களுடன் காந்தி?
தனது பழுப்பு மயிர் மற்றும் நீல கழுத்துப்பட்டியைத்
தவிர வேறு ஏதுமின்றி,
தனது ஈர மூக்கை, சீரான சுவாசிப்பின்
கம்பீர ரெட்டை நுழைவுவாயில்களை, மட்டும் தொடர்ந்து,
தனது வாலின் தூவல்கொத்தால் மட்டும் தொடரப்பட்டு
அதோ போகிறது லௌகீக உலகுக்குள்.
ஒவ்வொரு காலையிலும்
பூனையை மோதி தள்ளி விட்டு
அதன் உணவு மொத்தத்தையும் அது உண்ணாமல் இருந்தால்
சுயகட்டுப்பாட்டின் எத்தகைய ஒரு மாதிரியாக
லௌகீக பற்றின்மையின் எத்தகைய லட்சிய வடிவாக அது இருந்திருக்கும்
காதுக்குப் பின்னால் சொறிந்து விட
வரவேற்புகளின் துள்ளித் தாவல்களுக்கு
இத்தனை ஆர்வமாக அது இல்லாமல் இருந்திருந்தால்,
நான் மட்டும் அதன் கடவுளாக இல்லாமல் இருந்திருந்தால்.
நன்றி: Best American Poetry 1999. p. 49-50
