Skip to main content

Accident - குறும்பட விமர்சனம்

தமிழ் ஸ்டுடியோ இணைய இதழில் தமிழ் குறும்படங்கள் பற்றி ஒரு அறிமுகத் தொடர் எழுதி வருகிறேன். இம்முறை சங்கர் நாராயணனின் படைப்பை விமர்சிக்கிறேன்.

சங்கர் நாராயணனின் Accident ஒரு தமிழ்ப்படம் தான். இப்படம் பட்டாசுக்கு திரி கொளுத்துவதை போன்று விரையும் திரைக்கதையை கொண்டது. அதாவது திரி எரிவதே இறுதியில் வெடிமருந்தை சென்றடையத்தான். சங்கர் நாராயணன் கடைசி காட்சி நோக்கி படத்தை மிக திறமையாக பார்வையாளனை கண்ணைக்கட்டி அழைத்துச் செல்கிறார். என்ன இரண்டே விதிகளை பின்பற்ற வேண்டும்.

(1) கதையை முன்கூட்டியே கேட்டிருக்க கூடாது

(2) சுஜாதாவின் ஒரு சிறுகதையில் இருந்து இப்படத்தின் கதை சுடப்பட்டுள்ளது. அதை பார்வையாளன் படித்திருக்கக் கூடாது.

படத்தின் முதல் காட்சியில் ஒரு திரையரங்கின் பகல் காட்சி டிக்கெட் கவுண்டர் வரிசை நகர்கிறது. அவ்வரிசையில் பளிச்சென்று சட்டையுடன் துலக்கமாக தெரியும் அந்த நபர் தான் கதாநாயகன் என்று கணிக்க முடிகிறது. தன் மனைவியுடன் பார்க்க ஓர இருக்கைகள் கேட்டு வாங்குகிறார். திரும்பும் வழியில் அவருக்கு விபத்தாகிட ஒரு போன நூற்றாண்டு நல்லவர் வந்து தன் சட்டையில் பெரிய வட்டமாக ரத்தக் கறை வாங்கிக் கொண்டு இவரைத் தூக்கி எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். இங்கே ஒரு சின்ன குழப்பம் தோன்றுகிறது. ஓர இருக்கை கேட்டு வாங்கிய உற்சாகத்தில் அடி வாங்கியவரா அல்லது போன நூற்றாண்டு நல்லவரா நாயகன் என்று. அடுத்து கணவனுக்காக கட்டிலில் புரண்டு சிணுங்கி ஏங்கி மீதி நேரத்தில் அவன் நினைவாகவே ஆடை கலையாமல் சமைத்து காத்திருக்கும் வெள்ளித்திரை மனைவி. கணவன் வர தாமதமாக அவள் பதற்றமாகிறாள். திரைக்கதை தன் முதல் கேள்வியை எழுப்புகிறது. ஓர இருக்கை கேட்டவரா அல்லது நல்லவரா கணவன்? விபத்து நடந்த இடத்தில் ஒரு நுண்பேசி விழுந்து கிடக்கிறது. மனைவி கணவனின் நுண்பேசிக்கு அழைக்கிறாள். சாலை முழுக்க நல்லவர்கள் என்பதால் அந்த நுண்பேசி யாராலும் கவரப்படாமல் மல்லாந்து படுத்து சிணுங்குகிறது. யாருடைய நுண்பேசி அது? படத்தின் முக்கியமான இடம் சம்பிரதாய டாக்டர் கண்ணாடியை கழற்றியபடி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி இலவசப் பாடம் எடுத்து, காப்பாற்றிய நல்லவரையும் பாராட்டி சொல்ல வந்ததையும் ஒருவழியாய் சொல்கிறார்: “அவரது எண்ணை போலிசுக்கு கொடுத்து கண்டு பிடித்து தகவல் சொல்ல சொல்லி இருக்கிறேன்”. அடுத்த காட்சியில் வாசல் மணி அடிக்கிறது. மனைவி கதவை திறக்க செல்கிறாள். கதவைத் திறந்தால் என்ன சேதி கிடைக்கப் போகிறது. கணவன் விபத்தில் சிதைந்து கிடக்கிறான் என்றா? இல்லை. சட்டையில் ஓரிடத்தில் மட்டும் வட்டமாக ரத்தக்கறையை சமர்த்தாக வாங்கியபடி அவள் கணவன் எனும் நல்லவன் வருகிறான். இப்படி கடைசி காட்சியில் இருந்து பின்னோக்கி உருவாக்கப்பட்ட படம் இது.



சுடாத பழம் என்றாலும் ஊதிக் கொடுத்து ஒப்பேற்ற தெரிகிறது சங்கர் நாராயணனுக்கு. இந்த திறமை மற்றும் தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது. அடுத்து, சராசரியாக இருந்தாலும் பாத்திரங்களின் நடிப்பு தமாஷாக இல்லை என்பது மற்றொரு ஆறுதல் புள்ளி. விரிகோணத்தில் திரையரங்கு கேட்டை காட்டும் அந்த அவசியமற்ற முதல் காட்சி சாகசத்தை தவிர செந்திலின் ஒளிப்பதிவு நேர்த்தியாகவே உள்ளது. ”என்றென்றும் புன்னகை” பாடலை ஓரிடத்தில் அப்பட்டமாக பின்பற்றி உள்ளது தவிர இசையமைப்பாளர் ஜி.பிரின்ஸ் அதிகம் கலவரப்படுத்தவில்லை.

சுருக்கமாக, Accident அதிக விபத்துகளில் இல்லாத படம்.



கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: பி.சங்கர் நாராயணன்

தயாரிப்பு: டி.சதீஷ் மற்றும் டி.கிருபாகரன்

படத்தொகுப்பு: ஜி.அஷ்வின்

ஒளிப்பதிவு: செந்தில்

இசை: ஜி.பிரின்ஸ்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...