Skip to main content

இளையராஜா நல்லவரா கெட்டவரா?




சில மாதங்களுக்கு முன் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட பனிமுலை இணையதளத்தில் மண்ணுண்ணி என்ற பெயரில் சில வேடிக்கை/அரசியல் கட்டுரைகள் எழுதினேன். அதிலொன்றை இங்கே மறுபிரசுரிக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் ஷாஜி இளையராஜா குறித்து எழுதின “ நீங்க நல்லவரா கெட்டவரா” கட்டுரை தெ ஹிந்துவுக்கு பிறகு உயிர்மை படிக்கிற மத்தியதர மாமாக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்பட்டது. சிலர் இக்கட்டுரையை எழுதியது சாரு என்று நினைத்து அவரை அடிக்க தேடியதாக தகவல் அடிபட்டது. ஆனால் இளையராஜா ரசிகர்களின் மனதை நோகடித்த ஷாஜி புத்தக விழாவின் போது உயிர்மை அரங்கின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் ஓஷோ தண்ணி அடித்தது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார். இளையராஜா அடியாள் படை “அந்த மலையாளத்தான பார்த்தா சொல்லி வை” என்று ஷாஜியின் காலரைப் பிடித்து உலுக்கி சொல்லிப் போனதாக மிகைப்படுத்த விரும்பாவிட்டாலும் அக்கட்டுரையால் அவர் பரபரப்புக்குரிய நபர் ஆனார் என்பது உண்மை. திண்ணையில் முன்பு இளையராஜாவின் பின்னணி இசையை சாடி கட்டுரை எழுதின ஜெயமோகன் இம்முறை ராஜாவுக்காக பரிந்து ஆதரித்து எழுதினார். ஷாஜி இதற்கு நுண்பேசியில் அளித்த பதிலை ஜெ.மோ தன் தளத்தில் பிரசுரித்து அதற்கு மறுமொழியும் எழுதினார். இரண்டையும் அவர் ஷாஜியிடம் பேசியபடியே இட-வல கைகளால் ஒரே நேரத்தில் எழுதியதாக செய்தி உலவுகிறது. தனக்கு தொடர்ந்து பல மிரட்டல் மற்றும் கண்டனக் கடிதங்கள் வந்ததாக ஷாஜியே சற்று வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து தெரிவித்தார்.


ஒரு மலையாளக் கவிஞரை இளையராஜா விமர்சித்ததனாலே தாயகப் பற்றால் ஷாஜி ராஜாவை திரும்பத் தாக்கினதாக அஜயன் பாலா கடிந்து கொண்டார். இக்கட்டுரையை மனுஷ்யபுத்திரன் பிரசுரித்தது அவரது நிஜப் பெயர் ஹமீது என்பதாலே என்று காவி விசுவாசிகள் வேறு கொதித்தார்கள். விளைவாக மனுஷ் “ நானே ராஜாவின் பெரிய விசிறி. இது முழுக்க ஷாஜியின் கருத்து மட்டுமே” என்று அடுத்த உயிர்மை இதழில் சாட்சிமொழி எழுத நெர்ந்தது.

இந்த சர்ச்சைக்கு காரணமான ஷாஜியின் கட்டுரை சாராம்சம் என்ன? இளையராஜா கெட்டவர். அதனால் அவர் இசைவாழ்க்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது என்பதே அது. ஏப்ரல் 2010 இதழில் உயிர்மை இவ்விசயத்தில் ஒரு U-திருப்பம் எடுத்தது. ஒன்றுக்கு ரெண்டாக ஷாஜியும் சாருவும் ஏ.ஆர்.ரகுமானை தாக்கினார்கள். ஷாஜி இம்முறை என்ன சொன்னார்?

ஏ.ஆரின் பின்னணி இசை பலவீனமானதாம். அடுத்து ஸ்லம் டாக் மில்லனருக்கு கொடுத்த விருது தவறாம். அப்பட பாடல்கள் மிக சாதாரணமானவை. சரிதான், இதற்கு முன் ஏ.ஆரை பாராட்டி இதே உயிர்மையில் கட்டுரை எழுதியுள்ள ஷாஜி இப்போது ஏன் திடீரென அவர் பின்னணி இசை நன்றாக இல்லை என்கிறார். ஸ்லம்டாக் இசை ஏமாற்றமளிப்பது ஏன் இத்தனை தாமதமாக நினைவு வருகிறது அவருக்கு? ஸ்லம்டாக் பாடல்கள் பிரமாதம் என்று யாருமே சொல்லவில்லையே? அவ்விருது இதுவரையிலான ஏ.ஆரின் சாதனைகளுக்கான அடையாள விருது மட்டுமே. இதுவரையில் பல ஜாம்பவான்களுக்கும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ஆஸ்கார் கிடைத்ததில்லையே! இதையெல்லாம் ஷாஜி சொல்ல வேறொரு பின்னணி உள்ளதாம்.அதையும் அவரே சொல்கிறார். அவரை விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்கள் பற்றி பேச ஒரு தொலைக்காட்சியில் அழைத்தார்களாம். ஷாஜிக்கு வி.தா.வ இசை பிடிகாததால் அவர் செல்லவில்லையாம். அதற்கான காரணங்களை உயிர்மையில் எழுதுகிறாராம். நண்பர்களே இப்போது நரிகள் எல்லாம் கனவில் தின்று ஏப்பம் விட்ட படியே “ஒரே புளிப்பு” என்கின்றன. ஷாஜி கட்டுரை முடிவில் வி.தா.வ பாடல்கள் குறித்து சுருக்கமாக தொழிநுட்ப விமர்சனம் ஒன்று வைக்கிறார். சபா முன்வரிசையில் மடியில் தட்டி ரசிக்கும் தாத்தாக்கள் நடுவே புகுந்து மண்டையில் தட்டு வாங்கியது போல் உள்ளது அதைப் படித்தால்.

அரிஸ்டாட்டிலின் தர்க்க சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது ஒரு தேங்காய் விலை 10 என்றால் ரெண்டு தேங்காய் 20 ரூபாய். இப்போது ஒரு மாங்காய் விலையும் 10 என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தேங்காயும் மாங்காயும் சேர்த்து வாங்கினால் 20 ஆகிறது. இதே தர்க்கப்படி

ராஜா = கெட்டவர்
அதனால்
ராஜா இசை = கெட்ட இசை

இதே போல் ஏ.ஆர் ரஹ்மானி பின்னணி இசை = கெட்ட இசை
அப்படி என்றால்
ஏர்.ஆர்.ரஹ்மான் = ?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...