Skip to main content

தெரிந்ததும் தெரியாதவையும் (அறிவியல் தொடர்)

பெண்களும் குடிக்கலாச்சாரமும்



மதுவும் புகையும் பரிச்சய வலையை வளர்ப்பதில் முக்கியமானவை. போனபோ குரங்குகள் உறவை பேணுவதற்கு செக்ஸை பயன்படுத்துவதை இதனுடன் ஒப்பிடலாம். அல்லது பகிரப்படும் சிறந்த ஒரு ஜோக்கின் சிரிப்பலைகளுக்கு இணையாக சொல்லலாம். ஒரு அணுக்கமான நட்பு வட்டாரம் ஏற்பட ஒத்த மன அமைப்பை எப்போதும் எதிர்பார்க்க முடியாது. புகை மற்றும் மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் உறவாடலை லகுவாக்குகின்றன. போதை ஒரு மிகையான மனஎழுச்சியை ஏற்படுத்தி வாழ்வின் பல்வேறு அசட்டுத்தனங்களை கடந்திட பயன்படுகிறது. நமது நேரம், பணம், குடும்ப அமைப்பு ஆகியவற்றை போதை வஸ்துக்கள் நேர்மறையாக பாதிப்பதற்கு நமது கலாச்சாரத்துடன் இவை சமரசம் செய்யாதது ஒரு முக்கிய காரணம். போதை குறித்து நமது சமூகத்தில் அறிவியல்பூர்வமான ஒரு வெளிப்படை விவாதம் இன்னும் நிகழவில்லை. ஒருபுறம் இதன் முக்கியமான பரிமாணங்கள் மறைக்கப்பட்டு ஒரு சீரழிவாக, பாவமாக முன்வைக்கப்பட, மறுகோடியில் போதை மேலும் உல்லாசமானதாக ஒரு மீறல் அரசியலாக நிகழ்த்தப்படுகிறது. எப்போதும் போல் இரண்டு மிகைகளுக்கு மத்தியில் நிஜம் ஒற்றைக் கண்ணாய் இமை மூடி இருக்கிறது.

மேற்கில் போதை தொடர்ச்சியான ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது. கர்ப்பவதிகள் மது அருந்தினால் பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி எனில், குழந்தை பெற விரும்பாத அல்லது பெற்றுவிட்ட பெண்கள் அருந்தலாமா? மார்பகப் புற்று நோய் வாய்ப்பை மிகச்சிறு அளவில் அதிகரிக்க மது காரணமாகலாம். ஆனால் மிதமான மது அருந்தல் பெண்களை இதய நோய்களில் இருந்து ஓரளவு காப்பாற்றுகிறது. ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களில் சராசரி எடை கொண்டோரின் உடலை மெலிதாக தக்க வைக்க மிதமான குடி பயன்படுகிறது. இந்த சமீப கண்டுபிடிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. மிதமான மது அருந்தல் என்றால் எத்தனை பெக்?



பொதுவாக பெண்களுக்கு ஆண்களை விட மதுவை தாங்கும் ஆற்றல் குறைவு. மது உடலில் நுழைந்து உடலில் உள்ள நீருடன் கலந்து தன் ஆற்றலை சிறுக சிறுக கரைக்கிறது. பெண்களுக்கு ஆண்களை விட எடை குறைவு. இதனால் உடலில் நீர் அளவும் குறைவு. இக்காரணத்தால் மித-போதை விதிப்படி ஆண்கள் நாளுக்கு இரண்டு பெக்குகள் அடிக்கலாம் என்றால் பெண்களுக்கு ஒன்று மட்டுமே. இந்தியாவில் நகரமயமாக்கல் விளைவால் வேலைக்கு செல்லும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பெண்கள் பொருளாதார சுயசார்பு பெற்று விட்டாலும், அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாத சுதந்திரங்களில் மதுவும் ஒன்று. நம் மத்திய\உயர்மத்திய பார்களில் இவர்களுக்கு மட்டும் கலாச்சார வெளி மறுக்கப்படுவது ஏன்?

குடியும் உடல் எடையும் வன்முறையை தூண்டுமா?



குடிக்கும் உடல் எடைக்கும் மேலும் தொடர்பு உண்டு. ஆஜானுபாகுவான நபர்கள் குடிக்கும் போது எளிதில் வன்மம் கொள்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இந்த ஆய்வில் போதையில் இருந்த பல்வேறு எடையை சேர்ந்த நபர்கள் உட்படுத்தப்பட்டார்கள். அவர்களிடம் ஒரு கருவி தரப்பட்டு அதன் பொத்தான்களை அழுத்தினால் கண்ணுக்கு தெரியாத எதிரி ஒருவர் மின்-அதிர்ச்சி அடைவார் என்று பொய்யாக கூறப்பட்டது. ஆய்வு முடிவில் அதிக எடையும் உயரமும் கூடியவர்கள் அதிக முறைகள் மின்–அதிர்ச்சி தர முயன்றது தெரிவ வந்தது. இந்த தமாஷான ஆய்விலும் நமக்கு போதை மனதின் மீது ஒரு சிறு வெளிச்சம் கிடைப்பதை மறுக்க முடியாது.

நுண்நோக்கியின் கீழ் சிகரெட்

மதுவை குறைந்த அளவில் ஏனும் அங்கீகரிக்கும் அறிவியல் புகைப்பழக்கத்தை முழுமையாகவே நிராகரிக்கிறது. புகைப்பழக்கம் எளிதில் அடிமைப்படுத்துவது, புகைக்காதவரையும் பாதிக்கும் அஹிம்சை போக்கு கொண்டது. மிக முக்கியமாக புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இத்தனை பாதகங்களில் இருந்தும் மாறுபட்டு சிகரெட்டில் நுண்ணியிர்கள் உள்ளதாய் தற்போது பேசப்படுகிறது. கடந்த வருட செப்டம்பரில் Immunological Research எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று 5 சிகரெட் நிறுவனங்கள் வெளியிடும் 11 வகையான சிகரெட்டுகளில் நுரையீரல் நோய் ஏற்படுத்தும் நுண்ணியிர்கள் மட்டுமல்ல நுண்ணியிர்கள் உருவாக்கும் நச்சுப்பொருட்களும் உள்ளதாய் சொல்லுகிறது. இந்த ஆய்வை தலைமை தாங்கிய பவுலி எனும் ஆய்வாளர் இந்த உண்மையை சிகரெட் நிறுவனங்கள் நெடுங்காலமாய் அறிந்து வந்துள்ளன என்கிறார். இதற்கு சான்று சிகரெட் நிறுவங்கள் சமீபத்தில் வாங்கி உள்ள காப்புரிமைகள். குறிப்பாக பிலிப் மோரிஸ் இன்கார்பரேசன் வாங்கியுள்ள மூன்று காப்புரிமைகள்.

சிகரெட்டுக்காக பதப்படுத்தப்பட்ட புகையிலையில் உள்ள நுண்கிருமிகள் எண்டோடொக்சின் எனும் நச்சுப்பொருளையும் நைடொரோசமைன் எனும் வேதியல் பொருளையும் உருவாக்குகின்றன. இதில் நைடொரோசமைன்களை சுத்திகரிக்கும் ஒரு செலவு குறைந்த முறைக்கான கண்டுபிடிப்புக்கான காப்புரிமைகள் மீதே நிறுவனங்கள் குறிப்பாக ஆர்வம் காட்டி உள்ளன. சுவாரஸ்யம் என்னவென்றால் பச்சை புகையிலையில் நுண்ணியிர்கள் வேலி போடாது. போதுமான வெளிச்சம் அற்ற, ஈரப்பதமும், வெப்பமும் மிகுந்த கிடங்குகளில் புகையிலை பதப்படுத்தப்படுவது தான் நுண்ணியிர் குடியிருப்புக்கு காரணம் பவுலி கருதுகிறார். இத்தனைக் காலமும் இந்த நச்சு உண்மையை மறைத்து வைத்ததற்காக அமெரிக்க FDA நிறுவனம் இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிகரெட் போதைக்கு ஒருவரை அடிமைப்படுத்த நிறுவனங்கள் அமோனியா உள்ளிட்ட பல ரசாயனங்களை பயன்படுத்துவதாக ஒரு சர்ச்சை அமெரிக்காவில் எழுந்து அதிலிருந்து மீள சிகரெட் முதலாளிகளை விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் வாரி இறைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த அளவுக்கு உடல்நல விழிப்புணர்வுக்கு இந்தியாவில் ஏற்பட வாய்ப்போ அவகாசமோ இல்லை. சிகரெட் பரவலாக்கமோ தடையோ ஆகட்டும், நமது முதலாளிகளும் அரசியல்வாதிகளும் விளம்பரத்தில் ஆரம்பித்து விளம்பரத்திலேயே முடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் அடிமுடி நம்மால் தேடி அடைய முடியாத படி சிகரெட் புகைமூட்டத்தில் மறைந்துள்ளன.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...