Skip to main content

மனுஷ்யபுத்திரன் மீதான அசட்டுப்புகார்களும் ஒரு அபாரக் கவிதையும்

இன்று காலையில் என் கல்லூரி நண்பர்களுடன் ஒரு உஷ்ணமான இலக்கிய விவாதம். மனுஷ்யபுத்திரன் தன்னிரக்க கவிதைகளையே எழுதி வருவதாக ஒரு நண்பர் சொல்லி, பிறகு நான் மறுக்க, அவர் தன் கருத்தை மலைப்பாம்பு போல் விழுங்கி துப்பவும் முடியாமல் பிறகு ஜகா வாங்கினார். நான் ம.புவின் சக்கர நாற்காலியின் அனுகூலங்கள் குறித்த கவிதை அன்றாட வாழ்வின் அபத்தங்கள் குறித்தது என விளக்க, நண்பர் தான் ஒட்டுமொத்த நவீன கவிதை இயக்கமுமே தனிமனித தன்னிரக்கத்தை பேசுவது; அத்தகைய நவீன கவிஞர்களுள் ஒருவர் ம.பு என பொருள்பட சொன்னதாய் ஒரு ஊடுபாதைக்குள் நுழைந்தார்.



ம.பு ஒரே மாதிரியான கவிதைகளை மீண்டும் மீண்டும் எழுதுவதாய் அவதானிப்பது அரைகுறை வாசிப்பின் விளைவுதான். ம.புவின் வாசகனாக மட்டும் அல்ல, பொதுவாக தமிழ் கவிதை வாசிப்பில் உள்ள சிரத்தை இன்மையை குறிப்பிடவே இதை எழுதுகிறேன். நாம் ஒரு எழுத்தாளன் குறித்து ஒற்றை வாக்கியத்தை உருவாக்கி வைத்து தத்தைகளின் கூண்டு வரிசை போல் ஒப்பிக்கிறோம். இன்னும் சில வருடங்களில் முகுந்த் நாகராஜன் என்ன குழந்தைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப எழுதுகிறார் என்று புகார் செய்வோம்.

ம.பு தனது கவிதை மொழிக்குள் கூறுமுறை மற்றும் கரு சார்ந்து பற்பல சாத்தியங்களை முயன்றுள்ளார். தேவதேவன் அளவுக்கு மீளமீள வரும் ஒரு உருவகத்தை கூட நீங்கள் காட்ட முடியாது. அவருடைய ”நீ” கூட ஒருவர் அல்ல. கீழ் வரும் மனுஷ்யபுத்திரன் கவிதையை பாருங்கள்.


கன்னிமையின் முலைப் பால்



கன்னிமை நீங்கா
உன் முலைகளில்
கசிந்துவரும்
பாலின் மணத்தில்
திடுக்கிட்டு எழுகிறது
இந்த இரவு

காமத்தின் அனல்பறக்கும்
என்முகத்தில் பட்டுத் தெறிக்கிறது
அதன் ஒரு அமிலத் துளி

வெளியே
தொடங்குகிறது
இதற்குமுன் பெய்திராத பெரு மழை
பாலின் வாசனையை
எங்கெங்கும் கொண்டுவரும் ஒரு மழையை
யாரும் அதற்கு முன் பார்த்ததே இல்லை

இன்னும் பிறக்காத
ஆயிரம் ஆயிரம் சிசுக்கள்
இன்னும் திறவாத
கண்களில் நீர் தளும்ப
அம்மையின் முலைதேடி
தவியாய் தவிக்கின்றன

உன் கன்னிமை முலைகளில்
பெருகும் பாலின் விசித்திர சுவையை
ஒரு கணம் தன் நாவால் தொட்டு அறிகிறாய்

பின்
ந்கரவே நகராத
காலத்தின் சுவர்களில்
அதைப் பீய்ச்சுகிறாய்

(31.1.2010
8.32 pm)



மானுட குலம் என்றுமே உணர்ந்து வெளிப்படுத்த முடியாத ஒரு திகைப்பை இந்த கவிதை பேசுகிறது. அதுவும் எத்தனை உக்கிரமாக. பாலமணம் கொண்டு வரும் பெருமழை மிக sensous-ஆன ஒரு படிமம்.

துவங்கி உறைந்து நிற்கும் ஒரு முழுமையை கவனியுங்கள். கன்னிமை, மழைக்கு முன்னான அக்கன்னியின் முலைப்பால் மணம், ஒரே ஒரு துளி இவை துவங்காமலே தேங்கி நின்று விகசிக்கும் தன்மை கொண்டவை.

மழை கூட வாசனையை தான் கொண்டு வருகிறதே ஒழிய பாலை அல்ல. இந்த வராமை, வெளிப்படாமையை கவிதையின் ரகசியமாக, பிரபஞ்ச புதிரின் விடையாக நீங்கள் பல விதங்களில் விளங்கிக் கொள்ளலாம.

”நகரவே நகராக காலத்தின் சுவர்கள்” முக்கியமான வரி. கவிதையின் ஒரே திட்பமான உருவகம் இது. அந்த பெண் அப்படி பீய்ச்சி அடிப்பதில் ஒரு அவலம், குமுறல் அல்லது அவளது வெற்றி உள்ளது. ”சிற்பியின் நகரம்” நினைவு வருகிறது.

இன்னும் எத்தனையோ விதங்களில் படிப்பதற்கான சாத்தியங்களை உள்ளடக்கின கவிதை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...