Skip to main content

மனுஷ்யபுத்திரன், அறிவாளி அசடுகள் மற்றும் புத்தக தேர்வு

அறிவாளிகள் ஆபத்தானவர்கள்; அசடுகள் தங்கள் தன்னம்பிக்கை மிகுந்த அறியாமையால் நம்மை தொடர்ந்து வியக்க வைப்பவர்கள்.இருவரும் எதிர்பாராத தருணத்தில் ணங்கென்று நம் பொட்டில் அடிப்பார்கள். மூன்றாவது ஒரு வகை உண்டு. உள்ளதிலே சிரமம் இவர்களை சமாளிப்பது தான்: அறிவாளியாய் தோன்றும் அசடு.

மூன்றாம் வகையினரை படு ஜோராக நேரிடுபவர் மனுஷ்யபுத்திரன் அறிவாளி அசடுகள் பொதுவாக ஒரு நிலைகுலையாத தன்னம்பிக்கையுடன் தாக்குவார்கள். இவர் ஹிட்டிலிருந்து கிளம்பி வரும் அதிமனிதன் போல ஒரு புது அவதாரம் எடுத்து மேலும் மூர்க்கமாக எதிர்வினை ஆற்றுகிறார். இதை ஒரு கலையாகவே மாற்றி வைத்திருக்கிறார்.



தற்போது நடந்து வரும் புத்தக சந்தையில் உயிர்மை கடையில் ஒரு நபர் ம.புவின் இரண்டு கவிதை புத்தகங்களை எடுத்து வந்து அவரிடமே கேட்கிறார்: “இதுல எந்த புத்தகம் நல்லா இருக்கும். சொல்லுங்க சார்”.
ம.பு: “ரெண்டுமே படுமட்டமான புக்ஸ் சார். வாங்காதீங்க. ரொம்ப ஏமாற்றமாயிடும்”
அறிவாளி-அசடு: “இல்லை சார், நான் அந்த அர்த்தத்துல கேக்கல. எத வாங்குறதுண்ணு ஒரு குழப்பத்துல கேட்டேன் ”
ம.பு: “ நானும் அதனால தான் சொல்றேன். படுகேவலமான புத்தகம் ரெண்டுமே. தயவு செஞ்சு வாங்காதீங்க”
அ-அ ஜகா வாங்குகிறார்.

அ-அ மற்றும் ம.பு தொடர்பான மற்றொரு சம்பவத்தை எனது உற்ற நண்பர் ஒருவர் வழி இன்று ஒரு அரட்டையின் போது தெரிய வந்தது. சாரு இஸ்லாம் குறித்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதைப் படித்த ஒரு இஸ்லாமிய நண்பருக்கு கொலைவெறி: அதில் இஸ்லாம் பற்றின தகவல்கள் போதுமான அளவு இல்லையாம். அவர் என் நண்பர் முன்னிலையில் உயிர்மைக்கு தொலைபேசி போட்டு ம.புவிடம் பொருமுகிறார். ம.பு சுருக்கமாக பதில் கூறி வைத்து விடுகிறார். என்ன சொன்னார்? “உங்களுக்கு இஸ்லாம் பத்தி தெரியணும்னா குரான் படிங்க. அதுக்கு சாருவோட நூல் தேவையில்லை”. இதில் சுவாரஸ்யமான சேதி இஸ்லாமிய நண்பரின் நோக்கம் தான்: ம.புவிடம் மோதி தன் தரப்பை நிறுவி அப்புத்தகத்தை திருப்பிக் கொடுத்து அதற்கான காசையும் சில்லறை பாக்கியில்லாமல் திரும்பப் பெற உத்தேசித்திருக்கிறார். ம.பு பல் மொத்தமும் காட்டி சீறியதில் அவர் குழம்பி அதை கேட்க மறந்து விட்டிருக்க வேண்டும். அல்லாவிட்டால் சற்று அரண்டிருக்க வேண்டும். இ. நண்பரின் தரப்பில் ஒரு ஆதாரத் தவறு உள்ளது. என்ன?

ஒரு புத்தகம் வணிகப் பண்டம் அல்ல. அது பல தளங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டிய ஒரு உரையாடல். ஒரு உரையாடல் பிடிக்காமல் போகும் போது நாம் அங்கிருந்து விலகலாம். நாக்கு நீளம் என்றால் அறம் பாடலாம். அவ்வளவே. ஆனால் உரையாடலை திரும்பப் பெற முடியாது. இன்று விற்பனைப் பண்டங்களையே திரும்ப கொடுக்க முடியாது. கடைகளில் அடிக்கடி இது குறித்த சச்சரவுகள் நிகழ்வதை காணலாம். தி.நகர் பெரியார் சாலையில் உள்ள அழகப்பர் செட்டி நாடு உணவகத்தில் ஒரு மத்திய வயது பெண் வந்து பெரிய அலப்பறை கொடுத்ததை பார்த்தேன். அவர் 85 ரூபாய்க்கு வாங்கி சென்ற சிக்கன் கறியில் துண்டுகள் போதவில்லையாம். “காசை திரும்பக் கொடு” என்று வம்பு செய்தவரை கல்லா ஊழியர் முதலில் பொருட்படுத்த இல்லை. அப்புறம் ஒரு கலக மனநிலை ஏற்பட்டு அம்மணி கல்லா மேஜையில் உள்ள அலங்கார ஜாடிகளை சேதப்படுத்தினார். பிறகு ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட அவரவரின் குடும்ப சிறப்புகளை அலசி விட்டு அப்பெண்ணை அகற்றினர். வெகு நேரம் கழித்தும் உணவக வாயிலில் பக்கடா மீசை முண்டாசு சகிதம் பிதுங்கி நிற்கும் காவல் மாமா தான் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்: “பீஸ் பத்தலையாம் பீஸ். இவ்வளவு பெரிய ஹோட்டலுக்கு வாடகை, மீன்கட்டணம் எல்லாம் எப்பிடி கட்டறதாம். மளிகை சாமான் விலையெல்லாம் எகிறி இருக்கேங்கிற விவஸ்தை வேணாம்”. வாங்கும் பொருளின் மதிப்பு பற்றி சதா சந்தேகப்பட்டு அவஸ்தைப்படுவது ஒரு அலாதியான நுகர்வோர்த்தனம்.



ஆனால் பொதுவாக விலை ஏறஏற நாம் தரத்தை குறித்து எளிதில் சமாதானம் கொள்கிறோம். உதாரணமாக தற்போது நான் பயன்படுத்தும் மடிகணினியை பாதி விலைக்கு செய்து விடலாம் என்று ஒருவர் நிறுவினால் நான் நிச்சயம் மறுப்பேன். அவதார் எனும் படத்தை பங்களூருவில் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்த ஒரு மாமாவை டி.வியில் பேட்டி கண்டார்கள் அவர் சொன்னார்: “237 மில்லியன் டாலர் செலவில் படத்தை எடுத்திருக்கிறார்கள். இதை பார்க்க ஆயிரம் ரூபாய் ஒன்றும் அதிகம் அல்ல”. விலை குறைய குறைய நம் சந்தேகம் வலுக்கிறது. தமிழில் உள்ள சில அருமையான நூல்களை நாம் ஆங்கிலத்தில் வாங்குவதென்றால் பத்து மடங்கு அதிகம் செலவிட வேண்டும். குறிப்பாக புத்தகம் நல்லா இல்லே என்று ஆங்கில பதிப்பாளரின் வேட்டியை உருவ முடியாது. ஆயிரக்கணக்கில் செலவிட்டு ஆங்கில நூல்கள் வாங்கி ஏமாந்தவர்களுக்கு இது புரியும். எழுத்தாளர் வாசந்தி டைம்ஸ் நியுவின் முதல் தமிழ் சிறப்பிதழில் எழுதின கட்டுரை ஒன்றில் இதை குறிப்பிட்டிருக்கிறார்.

திருடர்களிடம் இருந்து திருட விரும்பும் விவேகி வாடிக்கையாளர்கள் உண்டு. பெரும்பாலும் மத்திய, உயர்மத்திய வகுப்பை சேர்ந்தவர்கள். மடுவாங்கரையில் என் வீட்டுப்பக்கத்தில் ஒரு பைரேட்டட் டி.விடி கடை போட்டிருக்கும் நபர் இப்படியான புகார் ஒன்றை தெரிவித்தார். ஒரு டி.வி.டி வாங்கி பார்த்து சரியா தெரியல என்று திரும்பக் கொடுத்து மற்றொன்று பெற்றுப் போகிறார்கள். இப்படியே 50 ரூபாய்க்கு மூன்று நான்கு படங்கள் ஓசியில் பார்த்து விடுகிறார்கள்.

அறிவாளி அசடுகளுக்கு திரும்புவோம். இவர்களை சுதாரிக்கையில் ம.புவிடம் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது: டைமிங்.

முதன்முறை ம.புவை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக குறிப்பிட்டார்: ”நமது ஈகோவை வீங்க வைத்துக் கொள்வதே அராஜகவாதிகளிடம் இருந்து காப்பாற்றும். இல்லாவிட்டால் புழு போல் தேய்த்து விடுவார்கள்”.

அம்சம் இரண்டு: அ-அ நபர்களை நேரிடும் போது அவர்களை விட மிகையான தன்னம்பிக்கையுடன் அவர்களின் தர்க்கத்தையே தனக்கு சாதகமாக திருப்பி விடுகிறார். கூட தாளிப்புக்கு அவர்களை விட ரெண்டு கடுகு அதிகம் போடுகிறார். இத்தனை மென்மையான மனிதர் முரட்டு பாவத்தை மற்றும் காரத்தை சில சமயம் படு சரளமாக வெளிப்படுத்துவதை கவனித்திருக்கிறேன். புன்னகையை விட கோபம் பாதுகாப்பானது..

முதலில் குறிப்பிட்ட எங்கள் நட்பு வட்டார அரட்டை ஒரு தீர்மானத்தை வழிமொழிந்து முடிந்தது: அதாவது தற்போது நூற்றுகணக்கில் வெளியாகும் புத்தகங்களை அட்டை பார்த்து மட்டுமே வாங்கக் கூடாது. நானும் வாசகர்கள் கவனமாகவே வாங்கணும் என்று சொல்லி வைத்தேன். ஆனாலும் இதுவரை நான் வாசித்துள்ள பல அருமையான நூல்கள் தாராளமயமாக்க கொள்கை அடிப்படையில் என் மனைவி அள்ளி வந்தவை தாம். நான் தயங்கித் தயங்கி புரட்டி வாசித்து நிதானித்து வாங்கிய நூல்கள் பல ஏமாற்றமளித்து உள்ளன.

நூல்கள் நமக்குள் நிகழ்த்தும் ரசாயனத்தை வட்டம் போட்டு விளக்குவதோ தீர்மானிப்பதோ அததனை எளிதல்ல.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...