Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 11


அம்மா தான் இத்தகைய வாதைகளில் இருந்து விடுபட்டவள் என்று நினைத்தாள்; ஏனெனில் அவளது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் அரகடாகா உடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். அவளது கனவுகள் அவளை ஏமாற்றின.
குறைந்தது காலை சிற்றுண்டியின் போது யாரும் ஆர்வம் உடையோர் இருந்தால் அவள் சொல்வதெல்லாம் வாழைத்தோட்ட பிராந்தியம் தொடர்பான பழங்கால ஏக்க நினைவுகளுக்கு தொடர்புள்ள விசயங்களாகவே எப்போதும் இருக்கும். நிறுவனம் திரும்ப வந்த பின் மும்மடங்காக விலையை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் மிகச்சிரமமான வேளைகளில் எல்லாம் வீட்டை விற்காமல் தாக்குப்பிடித்து வந்திருந்தாள். கடைசியில் எதார்த்தத்தின் தாங்கவொண்ணா நெருக்கடி அவளை தோற்கடித்து விட்டது. ஆனால் ரயிலில் பாதிரியார் அந்நிறுவனம் திரும்பி வருவதாக சொல்லக் கேட்ட போது அவள் துயரமிக்க சைகை ஒன்றை செய்துவிட்டு என் காதில் கிசுகிசுத்தாள், “என்னவொரு வெட்கக்கேடு, நம்மால் இன்னும் சற்று பொறுத்து, அதிக விலைக்கு வீட்டை விற்க முடியாதே”

பாதிரியார் பேசிக் கொண்டிருக்கையில் சதுக்கம் முழுக்க நிரம்பி நின்ற கூட்டம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் உற்சாகமாக கச்சேரி வாசிக்கும் இசைக்குழுவினர் தென்பட்ட நகரம் ஒன்றைக் கடந்தோம். இந்த அனைத்து நகரங்களும் எனக்கு ஒன்று போலவே தோன்றின.
பாப்பலேலோ என்னை டோன் ஆண்டோனியோ போகோண்டேவின் புத்தம் புதிய ஒலிம்பிய சினிமாவுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் அங்கு காட்டப்படும் கவ்பாய் திரைப்படங்களில் வரும் ரயில்நிலையங்கள் எங்களது நிலையங்கள் போலே உள்ளதை கவனித்திருக்கிறேன். பின்னர் பாக்னரை படிக்கையில் அவரது நாவல்களில் வரும் சிறு நகரங்களும் எங்களுடையது போல் தோன்றியது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை; ஏனெனில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழைப்பழ நிறுவனத்தின் மீட்பாளர் பாணி தூண்டுதலால், ஒரு தற்காலிக முகாமின் மோஸ்தரில், கட்டியெழுப்பப் பட்டவையே அவை. சதுக்கத்திலுள்ள தேவாலயம் மற்றும் அடிப்படை வண்ணங்கள் மட்டும் தீட்டப்பட்ட தேவதைக்கதை வீடுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன். வைகறையில் பாடும் கறுப்பின தொழிலாளர்களின் குழுக்கள், தோட்டங்களில் நிலக்கூலிகள் ஆர அமர்ந்து சரக்கு ரயில்கள் போவதை வேடிக்கை பார்த்தபடி இருக்கும் குடிசைகள் மற்றும் சனி இரவு கலாட்டாக்களில் வெட்டப்பட்ட தலைகள் காலையில் கிடக்கும் பள்ளங்களும் நினைவுக்கு வந்தன.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம், குளிர், கோடை விடிகாலைகளில் கருகின தூக்கணாங்குருவிகளால் கறுப்பாய் தோற்றமளிக்கும் மின்சார கம்பி வேலியால் சூழப்பட்ட கோழிப்பண்ணை போன்ற அரகடகாவிலும், செவில்லகாவிலுமுள்ள ஆங்கிலேயர்களின் தனிப்பட்ட நகரங்களை ஞாபகம் கொண்டேன். மயில்களும், கௌதாரிகளும் கொண்ட அவர்களது நிச்சலமான புல்வெளிகள், சிவப்புக் கூரை, ஜன்னல்களில் கம்பிக்கிராதிகள், பனைமரங்கள், தூசு மண்டிய ரோஜாப்புதர்களிடையே பால்கனியில் உணவருந்த சிறுமேஜைகள், மடிப்பு நாற்காலிகள் உடைய குடியிருப்புகளையும் நினைவு கூர்ந்தேன். சில நேரங்களில் கம்பி வேலியினூடே மென்துகில் உடுத்து, அகன்ற பட்டுவலை தொப்பிகள் அணிந்த அழகான சோம்பலுற்ற பெண்கள் தங்கக் கத்திரிக்கோலால் தங்கள் தோட்டங்களில் பூக்கள் வெட்டுவதை காணலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...