Skip to main content

ஊடகங்களால் விற்பனை செய்யப்படும் நம் பண்பாடு

வியாபார வெற்றியும் தரமும்

இன்று ஒரு குழப்பமான பண்பாட்டு சூழலில் வாழ்கிறோம். தொழில்நுட்ப சிறப்பு கொண்ட எளிய மசாலா படங்களை உலகத்தரம் என்று கொண்டாடும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ”சிவாஜியில்” இருந்து ”அவதார்” வரை நம் முதலாளித்துவ ஊடகங்களால் திட்டமிட்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

ஊடக வளர்ச்சிக்கு முன் தீவிர மற்றும் வணிக சினிமாக்களுக்கு இருந்த இடைவெளி இன்று மங்கி விட்டது. குறிப்பாக மத்திய மற்றும் உயர்மத்திய வர்க்கத்துக்கு. தமிழில் துல்லியமான பண்பாட்டு சித்தரிப்புகளுடன் வரும் மசாலா படங்கள் வெற்றி பெற்றால் டி.வி மீடியா உடனே அதை விழுங்கி விடுகிறது. பிறகு “தரமான சினிமா” அல்லது “வித்தியாசமான படம்” என்று ஏப்பம் விடுகிறது. இது கொட்டாவி போல் பரவி ஆளாளுக்கு “தரம்” “தரம்“ என்று பஜனை கோஷ்டி கிளம்புகிறது. அடுத்து இத்தகைய சினிமாக்களின் நாயகர்கள் அமீர், சசிகுமார் போன்றவர்கள் தீவிர இலக்கிய கூட்டங்களில் தரிசனம் தந்து நூல் வெளியிட்டு தாடி வருடி “எனக்கு புத்தகம்னாலே அலர்ஜிப்பா” என்று வேறு பேசுகிறார்கள். வெகுஜனவாதிகளுக்கு தீவிர படைப்புலகம் தீட்டு என்பதல்ல என் வாதம். இருவருக்குமான எல்லைக் கோட்டை எச்சில் தொட்டு அழித்து விட்டார்கள் என்பதே. ‘Mending Wall” கவிதையில் ரோபர்ட் புரோஸ்டு குதர்க்கமாய் குறிப்பிடும் ஒரு வழக்காறு நினைவு வருகிறது: அண்டை வீட்டாரின் அமைதி வாழ்வுக்கு அவர்கள் இடையே ஒரு மதில் வேண்டும்.

வடக்கத்திய டீ.வி மீடியா நட்சத்திர அந்தஸ்து படங்களை தொழில்முறையாக அவேசமாக விளம்பரப்படுத்தி கொண்டாடும் நோய்மை நம்மூருக்கு இன்னும் தொற்றவில்லை (”த்ரீ இடியட்ஸ்”). “சிவாஜி” போன்று சில விதிவிலக்குகள் மட்டும். வெகுஜன அறிவுஜீவி மதன் இப்படத்தை உச்சபட்ச தரம் என்று உச்சுக்கொட்டியது நினைவிருக்கலாம். சமீபமாக “உன்னைப் போல் ஒருவனை” விஜய் டீவி ஒரு மாத ஆர்ப்பாட்டங்களுடன் சந்தைப்படுத்தியது. ஓரளவுக்கு ’வித்தியாசமான’, ’யோசிக்க வைக்கக்கூடிய’ படங்களை அங்கீகரித்தால் என்ன தவறு என்கிறீர்களா?




‘வி..யோ’ படங்கள் தோல்வி அடையும் போது ஊடகங்கள் ஏன் இது போல் அவற்றை கொண்டாடுவது இல்லை. நல்ல உதாரணம்: ”கற்றது தமிழ்“. வெளியான போது இணையத்தில் ஒரு cult அந்தஸ்து பெற்ற படம் இது. எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. “பருத்தி வீரன்”, “மொழியை” விட அதிகமாக அலசப்பட்டது. ஆனால் படம் தோல்வி அடைந்ததால் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களும் அதை கைவிட்டனர். சொல்லப்போனால், சமகால இருப்பு சார்ந்த, உலகமயமாக்கல் பிரச்சனைகளை இத்தனை தீவிரமாக பேசின படமே வேறு வரவில்லை. திராவிட கட்சிகளின் நீண்ட ஆட்சிக் காலத்திற்கு பின்னரும் தமிழ் படித்தோர் உதாசீனிக்கப்பட்டு ஒதுக்கப்படும் அவலம் குறித்து பேசின ஒரே படம். ’பருத்தி வீரனில்” கலாச்சார நுண்விவரிப்புகளை எடுத்து பார்த்தால் மிகையான காதல் தியாகம் பேசும் படம். ஆனால் ‘க.த’ வெளியான பின் எந்த ஒரு விழாச்சிறப்பு இதழ்களிலோ, டீ.வி நிகழ்ச்சிகளிலோ அதைக் குறித்து பேசப்பட இல்லை. பேட்டிகளில் பிடித்த படங்கள் பற்றி குறிப்பிட்ட முன்னணி இளம் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றி பெற்ற பரிசோதனை படங்கள் மற்றுமே இருந்தன. விருது நிகழ்ச்சிகளிலும் “க.த“ தவிர்க்கப்பட்டது. சொல்லுங்கள், வெற்றி பெற்ற படங்கள் மட்டுமே தரமானவையா? அல்ல. வெற்றி பெற்றவை மட்டுமே நன்றாக விற்கப்பட்ட சரக்குகள். நம் மீடியா முதலாளிகள் சரக்குகளை புழக்கத்தில் விட பயன்படுத்தும் ஒரு விளம்பரச்சொல் மட்டுமே “தரம்” என்பது.



தற்போது பரபரப்பாக விற்பனையாகி வரும் “தரமான ” சரக்கு ஜேம்ஸ் கேமரோனின் “அவதார்”. இது ஒரு காட்சிபூர்வ சாதனை மட்டுமே ஆகும். பாத்திர அமைப்பு மற்றும் திரைக்கதையில் வேறு எந்த நுட்பமோ ஆழமோ கிடையாது. இன்று இந்தியாவில் மிக வெற்றிகரமாக இது ஓடிக் கொண்டிருப்பதற்கு காட்சிபூர்வ பிரம்மாண்டத்துடன் இதன் மசாலாவும் ஆதார காரணம். முக்கிய சினிமா விமர்சகர் ரோஜர் எபெர்ட் தனது கட்டுரை ஒன்றில் இப்படம் இன்று தவிர்க்க முடியாதபடி நம் கலாச்சார நீரோட்டத்தில் கலந்து விட்டதை குறிப்பிடுகிறார். உயர், மத்திய தட்டு மக்களின் குமாஸ்தா நீரோட்டத்தில். உங்களை பண்பட்டவராக காட்டிக் கொள்ள ”அவதார்” பார்த்தே ஆகவேண்டும்.

ஜெயமோகனின் ”அவதார்”

இந்த நிர்பந்தம் ஜெயமோகனுக்கே வந்து விட்டதென்றால் பாருங்கள். அவரது சமீபத்திய ”அவதார்” கட்டுரையில் தீவிரர்கள் வெகுஜன சினிமா பக்கம் மூக்கு நீட்டிட நேரும் முத்தாய்ப்பான சறுக்கல்களும் தெரிகின்றன. கதாநாயகனுக்கு போலியோ என்கிறார். உண்மையில் ஜேக் சல்லி எனும் அந்த பாத்திரம் பாராபிளிஜியா எனும் ஒருவகை பக்கவாதம் பாதிக்கப்பட்டவர். ஜேக் சல்லி சக்கர நாற்காலியில் இருந்தபடி போரிடக்கூடிய வீரன் என்று உதார் வேறு விடுகிறார் ஜெ.மோ. படத்தின் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சபட்ச வேடிக்கையாக இப்படி சொல்கிறார்: அந்த வரைவியப் (animation) பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன?.

”அவதார்” படத்தில் நடிகர்கள் உண்டு. அவர்கள் நடித்த காட்சிகளை motion-capture வரைவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தி பிம்பங்களாக மாற்றி உள்ளனர். ஜெயன் இந்த அடிப்படை தகவல் கூட தெரியாமல் மயிர்கூச்செறிகிறார். தெரியாத பிரதேசத்துள் தயாரிப்பின்றி நுழைவது இப்படி பல்பில் தான் முடியும். முன்னர் ஒருமுறை என் அப்பா பிடிவாதமாக ஒருவகை பரிட்சார்த்த உப்புமா செய்தார். தாளித்து வெங்காயம் வதக்கி ... எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கோதுமை மாவை அதில் கொட்டினார். விளைவு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

வேட்டைக்காரனும் அவதாரும்




நேற்று பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் சென்ற போது அங்கு கேமரோனை ஒரு கும்பல் குரோசேவொ, டொரெண்டினோ, மஜீத் மஜீதி அளவுக்கு சிலாகித்து கொண்டிருந்தனர். இதோடு ”வேட்டைக்காரன்” போன்ற விஜய் படங்கள் சந்திக்கும் நக்கல் மற்றும் ”நுண்ணுணர்வு” நிராகரிப்பையும் ஒப்பிடுங்கள். ”வேட்டைக்காரன்” வாழைக்காய் பஜ்ஜி என்றால் ”அவதார்” ஐயங்கார் பேக்கரி சைவ சமோசா. யார் முதுகை யார் சொறிந்து விடுகிறார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...