Skip to main content

ஒரு வறண்ட நாளின் வளமையான பக்கங்கள்

இன்று எழுந்து காப்பி பல் துலக்கம் முடிந்து எழுதலாம் என்று அமர்ந்து பிடிக்காமல் இணையம் மேய்ந்து ... இதோ இப்போது இரவு 12:45-க்கு எழுதுகிறேன். காப்பிக்கும் இணையத்துக்கும் இடையே ஒரு கசப்பான ஞாபகம் தொந்தரவு செய்தது. எனது “இந்திய குறுக்குவிதிகளும் ...” கட்டுரை (http://thiruttusavi.blogspot.com/2009/11/blog-post_17.html) பற்றி புலன்விசாரித்து ஒரு நபர் என் நண்பரை அழைத்து அபிலாஷ் தெரியுமா உங்களைப் பற்றி எழுதியுள்ளாரே என்று போட்டுக் கொடுக்க நண்பர் ”என்னைப் பற்றி எழுதியதை என்னிடமே ஏன் சொல்லவில்லை” என்று கோபித்துக் கொண்டார். கட்டுரைகளில் குறிப்பிட்டதற்காக ஏற்கனவே இரண்டு நண்பர்களை இழந்த நான் நிஜமாகவே பயந்து போனேன். பதற்றத்தில் தத்துபித்தென்று உளறினேன். என் முகக்கலவரத்தை பார்த்து, என் உளறலைக் கேட்டு தவறாக ஊகித்த நண்பர் “என்னைப் பற்றி ஏதோ விவகாரமாக சொல்லியுள்ளீர்கள்” என்றார். அவரது ஆளுமை தவறாக பதிவாகி விட்டதோ என்ற கவலையில் நான் கூறிய இந்த முக்கியமான கருத்தை கவனித்தாரா தெரியவில்லை: “ நான் எழுதும் போது பார்த்தது, கேட்டு, படித்த உயிருள்ள உயிரற்ற பொருட்கள் வெறும் தரவுகள் தாம். நான் இத்தரவுகளை பற்றி எழுதுவதில்லை; ஒரு விவாதப் பொருளை, அவதானிப்பை அல்லது கற்பனையை நிறுவ இவை பயன்படுகின்றன, அவ்வளவே”. நேரடியாக / மறைமுகமாக குறிப்பிடப்படும் ஒரு தனி நபர் பற்றின சித்திரம் எத்தனை சரியானது என்பது பற்றி அந்த நபர் கவலைப்படுவது வீணானது. நம்மைப் பற்றின அடுத்தவர் மனதிலுள்ள பிம்பத்தை பற்றி எப்படி பொருட்படுத்தக் கூடாதோ அப்படியே இதுவும். பொதுவான அக்கறைகள் அல்லது தேடல் தவிர்த்து எனக்கு உங்கள் உலகம் குறித்தோ உங்களுக்கு எனது பற்றியோ கவலை இல்லை.



என்னைப் பற்றி ஜெயமோகன் தனது வலைதளத்தில் எழுதியிருந்த குறிப்பில் (http://jeyamohan.in/?p=3684) தகவல் பிழைகள் உண்டு. நான் ஏன் பொருட்படுத்த இல்லை என்றால் அவரது கட்டுரை அந்த தகவல்கள் பற்றியது அல்ல என்பதால். உதாரணமாக அவர் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் உரையாற்றின போது எனது சிவப்பு அபிமானம் காரணமாய் நான் அங்கு செல்லவில்லை என்கிறார். இரண்டுமே உண்மையல்ல. ஆனால் இப்பிழைகள் முக்கியமல்ல. காரணம் முதற்பத்தியின் கடைசி வரியில்.



நான் இதுவரை சொன்னதற்கு மற்றொரு பக்கமும் உண்டு என்பதை அறிவேன். கீஸ்லாவஸ்கி தனது Camera Buff படத்தில் படைப்புக்கும் அந்தரங்க மீறலுக்குமான உறவு பற்றி பேசியிருப்பார். இப்படத்தின் நாயகன் இனிமேல் பிறரை பதிவு செய்யக் கூடாது என்ற தீர்மானத்துடன் இறுதிக்காட்சியில் படக்கருவியை தன்னை நோக்கி திருப்பி ஓட விடுவான். ஊனம் பற்றின எனது சில கட்டுரைகளை பற்றி கூறுகையில் மனுஷ்யபுத்திரன் “இதில் பலவும் எனக்கும் நிகழ்ந்தன” என்றார். ”நீங்கள் எழுதியிருக்கலாமே” என்றேன். “பலரை காயப்படுத்த வேண்டியிருக்கும்” என்றார். விரல் சுட்டினாலே காயப்படுவது ஒருவித மனநோய். ஒரு பத்திரிகை ஆசிரியராக, பிரபல ஆளுமையாக, பிரதான கவிஞராக எத்தனை அனுபவங்களை இப்படி உறை போட்டு மூடியிருப்பார்.



சூழலின் நோய்மை எழுத்தாளனின் சுட்டு விரலை இப்படி மடித்து விடுகிறது. நான் பேசியிருந்த கருத்துக்களை மேலும் வலுவாக, நுட்பமாக அவரால் வெளிகொணர்ந்திருக்க முடியும். அக்கட்டுரைகளை நான் வலியுடன் எழுதியிருக்க வேண்டியிராது. படக்கருவியை நம்மை நோக்கி திருப்பியதும் அதில் புறவுலகின் பிம்பங்களும் விழுகின்றன. படக்கருவியின் பிம்பங்கள் தனதல்ல என்று புறவுலகம் புரிந்து கொள்ள வேண்டும்.




இன்று Terrorists, Victims and Society என்றொரு நூல் படித்தேன். அதைப் பற்றி நாளை எழுதுகிறேன். இன்று வலையில் காணக்கிடைத்ததில் இந்த இரு தளங்களை குறிப்பிட வேண்டும்:
http://cybersimman.wordpress.com/
மற்றும்
http://www.athishaonline.com/

சிம்மன் மிக எளிமையாக, நேரடியாக, சுவாரிசியமாக எழுதுகிறார். இணையம் இவரது ஏரியா. ஏழு வருடங்களுக்கு மேல் எழுதி வருவதாக தனது அறிமுகத்தில் சொல்வது அவரது அவரது மொழியின் ஒழுக்கில் தெரிகிறது. குறிப்பாக, அடுத்து எதைப் பேச வேண்டும் என்கிற குழப்பம் இல்லை. அப்புறம் உணர்ச்சிவயபடாமல் ஒரு வியப்பை தக்க வைக்கிறார். எழுத்தாளக் குறுக்கீடுகள், நெடுமூசெறிதல்கள் இல்லை.இது மாமன் மச்சான் பரிந்துரை அல்ல. தைரியமாக இவரை படியுங்கள்.

ஆதிஷா ஒரு பெண் அல்ல. அவரது அறிமுகம் படிக்காமல் நடை வைத்தே ஓரளவு இதை ஊகிக்கலாம். ஆதிஷா நிஜப்பெயரான வினோத்தின் பக்கத்து வீட்டு பெண்ணுருவமோ, பள்ளிக் காதலியோ, மாமன் மகளோ அல்ல. ஒரு பௌத்த துறவியின் பெயராம். ஹும். சரளமும், அலப்பறையும், நகைச்சுவையும் தான் இந்த ஆதிஷா. இத்தனை வீராப்பாக, ஊக்கமாக பகடி செய்பவர்களை தமிழில் அதிகம் படித்ததில்லை. இவரது ஜென் பகடி கதைகளை கட்டாயம் படியுங்கள். பொதுவாக ஞானக்கதைகளின் சொல்லலில் ஒரு போலியான பாவனை இருக்கும். அந்த இடுப்புக் குடத்தை கல்லடிப்படிப்பதில் தான் வினோத்தின் ஆர்வம். முக்கியமான முயற்சி. ஒரு கதையில் ஞானம் கேட்கும் சிஷ்யனிடம் குரு தின்ற பாத்திரத்தை அலம்பி வர சொல்கிறார். அவனுக்கு ஞானம் வருகிறது. இதன் மொழியை வட்டார வழக்கில் வசை சொற்களுடன் சரேலென்று சொல்லி முடிப்பதில் தான் அவரது நகைச்சுவை ஏற்படுகிறது. மற்றொரு கதையில் ஞானம் கிடைத்த சிஷ்யனுக்கு அது படு பேஜாராக உள்ளது.

பகடிக்கு இலக்கிய எழுத்தின் அந்தஸ்து உண்டு. ஆதிஷாவின் தேடல் தீவிரமடையும் போது அவரது இயல்பான எழுத்துத் திறன் மற்றொரு இடத்துக்கு அவரை எடுத்துச் செல்லும். அதுவரையில் ”பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?”, ”கொலைகாரன் காதல்” போன்ற கவனத்தை ஈர்க்கும் பதிவுகள் வீண் முயற்சிகள் என்று சொல்ல மாட்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...