Skip to main content

அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை

இன்றைய நவீன சமூகத்தின் பழங்குடி மனப்பான்மைக்கு இனப்பெருக்க சடங்குகள் நல்ல உதாரணம். உய்வின் ஆதாரமாக குழந்தைப்பேறு இருந்த காலம் இப்போது இல்லை. ஆனாலும் பெண்ணின் மதிப்பு பொருளாதாரச் செல்வாக்கினாலோ, கல்வி அல்லது வேலையின் அந்தஸ்தினாலோ இன்றும் அமைவதில்லை: கருப்பையின் வளமையே பெண்மையின் அளவுகோல். உண்டாகியிருக்கும் பெண்ணைப் போல் அலுவலக வளர்ச்சி ஏணியில் உயரும் பெண் வளைகாப்பு அணிவிக்கப்பட்டு கொண்டாடப்படுவதுண்டா சொல்லுங்கள்? இனப்பெருக்க சடங்கின் உச்சபட்ச வக்கிரம் மஞ்சள் நீராட்டு விழா எனும் "என் மகள் தயாராக இருக்கிறாங்கோ" என்னும் அதிகார பூர்வ அறிவிப்பு. மேட்லி சப்வே துவக்கத்தின் இடதுபுறமாய் பெரிய விளம்பரப் பலகை. அதில் கலைஞர் உள்ளிட்ட முற்போக்குத் தலைவர்கள் படங்கள் படிநிலை பொறுத்து சிறிசும் பெரிசுமாய் போக்குவரத்து நெரிசலில் புன்னகைக்க முயலும். ஏதோ அரசியல் கூட்டம் போல என்று முதலில் புழுதியில் மூக்கைத் திருகியபடி கருதுவீர்கள். ஆனால் கீழ்க் கோடியில் பால் வடியும் ஒரு பாப்பா முகம் தெரியும்: பூப்பெய்தல் கொண்டாட்டமாம். இந்த இனப்பெருக்க ஆரவாரத்தின் மற்றொரு கோடி இதே பெண்கள் மீதான அடக்குமுறை: மாதவிடாயின் போது ஒத்தி வைக்கப்படுவது. எனது மனைவியின் மாமா சென்னையில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மென்பொருள் பொறியியலாளர். இவரது வீட்டில் பெண்குழந்தைகளை மாதவிடாயின் போது தனியறைகளில் முடக்குவது மாதாமாத வாடிக்கை. இந்தக் கொடுமையில் உட்படும் இரு பெண்களில் ஒருத்தி சி.ஏ பட்டதாரி, மற்றொருத்தி பொறியியல் படிக்கிறாள்.
கடந்த 50 வருடங்களில் உலகம் பூரா பெண் குழந்தைகள் சற்று முன்னதாகவே பூப்பெய்தி வருகிறார்கள். பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அவர்களது பிறப்புறுப்புகளை விட அதிக முக்கியத்துவம் அளிக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இது பற்றின ஆய்வு முடிவுகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தின. பூப்பெய்தலை சாதனையாகக் கொண்டாடும் நமது இந்தியப் பெற்றோர்களிடத்தில் இத்தகவல் சிறு அதிர்வலையைக் கூட ஏற்படுத்தவில்லை.
தேவைக்கதிகமான சத்துணவு மற்றும் உடலுழைப்பின்மை மட்டுமே இதற்கு காரணம், இதுவொரு நவீன உணவுக்கலாச்சார எதிர்வினை என்றே நாம் அசட்டையாக எடுத்துக் கொண்டோம். காலம் முந்தி பருவமடைவதற்கு வேறு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றில் சில பெற்றோர்கள் ஆராய வேண்டியவை. உதாரணமாய் மூளையில் காயம் அல்லது கட்டி, தைராய்டு சுரப்பி, கருப்பையில் கோளாறு போன்றவை பூப்பெய்தலை விரைவுபடுத்தலாம். நுகர்வுப் பொருட்களிலும், விவசாயத்திலும் பயன்படுத்தப்படும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் முந்திப் பூப்பெய்தலுக்கு காரணமாக கருதப்படுகின்றன. இவ்விசயத்தில் கோல்பர்ன் மற்றும் பலரின் (1996) ‘நமது திருடப்பட்ட எதிர்காலம்’ என்ற ஆய்வு முக்கியமானது. 2000த்தில் கொலோன் மற்றும் பலர் பியர்ட்டொ ரிக்காவில் உள்ள மிகச்சிறு வயதிலேயே மார்பு முளைத்த பெண்களிடத்து ஒரு பரபரப்பான ஆய்வை மேற்கொண்டனர். இந்தப் பெண்களின் வயதுக்கு மீறின மார்புத் தோற்றத்துக்கு இவர்களது ரத்தத்தில் கலந்துள்ள தாலேட்ஸ் எனும் ரசாயனப் பொருள் தான் காரணம் என்று இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ரசாயனம் விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்களில் மற்றும் தயார் உணவு உறைகளில் பயன்படுவது. சமீபமாய் பிளவுண்ட் மற்றும் பலர் குழந்தைப்பேறு பருவத்தை அடைந்த பல பெண்களிடத்து இந்த தாலேட்ஸ் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இவர்களின் சந்ததியினரும் சீக்கிரமே பூப்பெய்துவார்கள்.
காலம் முந்தின பூப்பெய்தலின் பிரச்சினைகளை பொதுத் தளத்தில் நாம் இன்னும் விவாதிக்கவோ ஆராயவோ இல்லை. 7 அல்லது 8 வயதில் ஒரு குழந்தை பருவமடையும் அறிகுறிகளை வெளிப்படுத்துவது இயல்புதான். இந்த வயது வரம்புக்கு முந்தின பூப்பெய்தல் பிரச்சினைக்குரியது. இது குழந்தைகளுக்கு மன உளைச்சல், பதற்றம், மாற்றம் பற்றின அச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும். அவற்றை சமாளிக்க அவர்களுக்குத் தெரியாது. அடுத்து பருவம் முந்தின ருதுவாதலால் ஒரு குழந்தை தனது இயல்பான வளர்ச்சியை அடையாமல் குள்ளமாகி விடும்.
நாம் மனதளவில் இன்னும் பழங்குடிகளாகவே உள்ளோம் என்பதற்கு பாலியல் சடங்கு உதாரணங்கள் என்று பார்த்தோம். முந்தின பூப்பெய்தலுக்குப் பொறுப்பு நமக்குள் விழிப்பாக உள்ள நுட்பமான பழங்குடி மனநிலை என்கின்றன பரிணாம மனவியல் ஆய்வுகள். புரூஸ் எல்லிஸ் மற்றும் டிதர்* (2008) பெரும்பாலும் விவாகரத்தால் பெற்றோர் பிரிந்த 70 ஜோடிகள் உள்ளடக்கிய 90 குடும்பங்களில் ஒரு ஆய்வு நடத்தினர். இவர்கள் கண்டுபிடிப்பு: விவாகரத்தான பெற்றோரின் பெண் குழந்தைகள் சீக்கிரமாகவே பூப்பெய்தி விடுகிறார்கள். விவாகரத்தின் போது இளைய பெண் குழந்தைக்கு 5 வயதும், மூத்தவளுக்கு 12 வயதும் சராசரியாக உள்ள குடும்பங்களை புரூசும், டிதரும் குறிப்பாய் ஆராய்ந்தனர். விவாகரத்தில் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரியும் போது இரண்டாவது பெண்ணுக்கு அப்பாவின் நெருக்கம் தனது வளர்ச்சிப் பிராயத்தின் கால்வாசிக் காலத்தில் மட்டுமே கிடைத்திருக்கும். அப்பாவின் பிரியமும் பாதுகாப்பும் இரண்டாவது பெண் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும் காலகட்டத்தில் அவர் இருக்க மாட்டார். இதனால் இளையாளுக்கு அக்காளை விட ஒரு வருடம் முந்தியே முதல் மாதவிடாய் வந்து விடுகிறது.
விவாகரத்துக்கு முன் அப்பா குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, போதை பழக்கங்கள் கொண்டிருந்த அல்லது விவாகரத்துக்குப் பின் அம்மாவுக்கு கள்ளத்தொடர்புகள் இருக்கும் குடும்பத்துக் குழந்தைகளிடத்து இந்த முன்னதாகப் பூப்படையும் போக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நிலையற்ற குடும்பங்களில் இக்குழந்தைகள் சந்திக்கும் நெருக்கடி. பிரமோன்கள் எனும் உடலில் சுரக்கும் ஒருவித ரசாயனம் மூலம் வீட்டில் புழங்கும் அன்னிய ஆண்கள் பற்றின சமிக்ஞைகள் குழந்தையின் ஆழ்மனதுக்குப் போய்விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் பின்னணி என்ன?
இந்தக் காரணத்துக்குப் போகும் முன் நம் உடல் இன்னும் நவீனச் சூழலுக்கு வந்து சேரவில்லை, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான மரவுரிச் சூழலில்தான் இன்னும் வாழுகிறது என்பதைப் புரிந்தாக வேண்டும். வனவாசிகளாய் நாம் இருந்த கட்டத்தில் ஆண்துணை இழந்த குடும்பம் நிர்கதி ஆனது. அதன் அங்கத்தினர்கள், குறிப்பாய் குழந்தைகள், இந்தப் பாதுகாப்பற்ற நிலையில் தங்கள் வாழ்நாள் நிச்சயம் குறைவு என்று உள்ளூர அஞ்சினர். இக்குடும்பங்களின் குறை-ஆயுள் பெண் குழந்தைகளுக்கு சீக்கிரம் இனவிருத்தி நிலை அடைந்து சந்ததியினரைப் பிறப்பிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. மனிதன் சந்ததிகள் மூலம் சங்கிலித்தொடராக மரபணுக்களை நீட்டித்து மட்டுமே தன் நிலைப்பை அடைய முடியும் (தாடி வளர்த்த ஸ்ரீஸ்ரீக்கள், கேசம் வளர்த்த பாபாக்கள் தவிர்த்து); இது அவனது அடிப்படை உயிரியல் உந்துதலும் கூட. மேற்சொன்ன பெண் குழந்தைகள் இக்காரணத்தினால் முன்கூட்டியே பூப்பெய்தினர். நவீன சமூகத்து விவாகரத்துக் குடும்பங்களில் இத்தகைய உயிர் ஆபத்துகள் இல்லை என்றாலும், பாதுகாப்பின்மையும், அது சார்ந்த நெருக்கடியும் இன்றும் தொடர்கின்றன. இதனால் இவ்வாறு நெருக்கடிக்கு உட்படும் பெண் குழந்தைகள் இன்றும் அவசரமாய் ருதுவடைகின்றனர். இந்த உந்துதல் உயிரியல் ரீதியிலானது; இதை மனதளவில் நாம் உணர முடியாது. ஆனால் நெருக்கடியான நிலையில் ஏற்படும் முந்தின பூப்படைதலுக்கு எதிர்மறை விளைவுகளே அதிகம். இக்குழந்தைகளுக்குக் கடுமையான மன-உளைச்சல் ஏற்படுகிறது. இவர்கள் பாலியல் சுரண்டல்களில் இருந்து, கேலி கிண்டல் மற்றும் சகவயது நண்பர்களின் வன்முறையிலிருந்து தங்களைப் பாதுகாக்க, போராட வேண்டி வரும்.
மூன்றாம் உலக நாடுகளின் நெருக்கடி மிகுந்த குடும்பங்களில் இருந்து வளர்ந்த நாடுகளுக்குத் தத்து எடுக்கப்படும் குழந்தைகள் மிகச்சீக்கிரமாகவே ருதுவடைவதை மற்றொரு ஆய்வு கூறுகிறது. இது புரூஸ்-டிதரின் ஆய்வு முடிவை வலுவாக்குகிறது.
முன்னதான ருதுவாதலுக்கான பலவிதக் காரணிகளில் ஒன்று மட்டுமே ஸ்திரமற்ற குடும்பச்சூழல் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான உறவு நிலை. உடைந்த குடும்பங்களில் மன-உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, செய்யாத தவறுக்காக சூழல் மற்றும் பரிணாமத்தின் வாதையை மேலும் உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் பல லட்சம் குழந்தைகளின் சித்திரம் டி.எஸ் எலியட்டின் இந்த வரிகளை நினைவுபடுத்துகின்றன:
" சுவரில் அறையப்பட்டு நான் நெளிந்து வளையும் போது
என் அத்தனை நாட்கள், வழிகளின் கைப்பிடி நுனிகளை
துப்புவதை எப்படித் துவங்க?
நான் எப்படி ஊகிக்க? "
("ஆல்பிரட் புருபுரோக்கின் காதற் பாடல்", வரிகள் 55-58)
* மேலும் படிக்க: Tither, J.M., & Ellis, B.J. (2008). Impact of fathers on daughters' age at menarche: A
genetically- and environmentally-controlled sibling study. Developmental Psychology, 44,
1409-1420.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...